name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தனிப்பாடல்
தனிப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனிப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (585) தன்னையளித்தாள், தமையன் மனை, குருவின் !

தாயாக மதிக்கப் பட வேண்டியவர்கள் !


மகளிர் அனைவருமே  தாய்மையின் வடிவங்கள் !  எனினும்  தாய்மை என்னும் பண்பு வேறு; தாய் வேறு ! யார் யாரை எல்லாம் நாம் தாயாகக் கருத வேண்டும் ?  ஒரு புலவர் பட்டியலிடுகிறார் பாருங்கள் !

 

------------------------------------------------------------------------------------------------------------

தன்னை யளித்தாள் தமையன்  மனைகுருவின்

பன்னி யரசன் பயில்தேவி  - தன்மனையைப்

பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்

நற்றாயர் என்றே நவில் !

 

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

தன்னை  அளித்தாள்,  தமையன் மனை, குருவின்

பன்னி , அரசன்  பயில்தேவி,  -  தன் மனையைப்

பெற்றாள், இவரையே  பேசில்  எவருக்கும்

நற்றாயர்  என்றே  நவில் !

 

--------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

தன்னை அளித்தாள் = தன்னைப் பெற்றவள்தமையன் மனை = தமையன் மனைவியாகிய அண்ணிகுருவின் பன்னி = தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மனைவி; அரசன் பயில் தேவி = அரசனின் மனைவியாகிய அரசியார்தன் மனையைப் பெற்றாள் = தன் மனைவியைப் பெற்றவள்இவரையே பேசில் = ஆகியோரைப் பற்றிச் சொல்வோமானால்; எவருக்கும் = எல்லா ஆடவர்க்கும்நற்றாயர் என்றே நவில் = இவர்கள் தாய் போன்றவர்கள் ஆவர் !

-------------------------------------------------------------------------------------------------------------

 

தன்னைப் பெற்றவள், தன் அண்ணி, தன் ஆசிரியரின் மனைவி, நாட்டின் அரசியார், தன் மாமியார் ஆகிய  ஐவருமே  தாய்என்னும் உயர்ந்த இடத்தில் வைத்து  ஒவ்வொரு ஆடவராலும் வணங்கத் தக்கவர்கள் ஆவர் !

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த அரிய பாடலை எழுதிய புலவர் யார் ? அவர் பெயரைப் பதிவு செய்ய வரலாறு தவறிவிட்டது !

 

வரலாறு தன் கடமையில் இருந்து தவறினாலும், நாம் இந்த ஐந்து தாயரையும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பதில் தவறு செய்யலாகாது !

-------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஆவணி),06]

{22-10-2020}

------------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

தனிப்பாடல் (570) அடுகரி தொடர, வீழ, ஐந்தலை நாகம் !

இடிந்த கிணற்றுக்குள்  வேரைப் பிடித்துத் கொண்டு தொங்கி  !


மனிதனாகப் பிறந்துவிட்டால் வாழ்வில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களைத் துய்த்துத் தான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க இயலாது !  துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், இடையியே இன்பமும் எதிர்ப்படும் ! இது தான் வாழ்வு என்கிறார் ஒரு புலவர் !

 தன் கருத்தை ஒரு பாடல் வடிவில் தருகிறார். இதோ அந்தப் பாடல் :-

-----------------------------------------------------------------------------------------------------------

                                       அடுகரி    தொடர    வீழ

                                        .....வைந்தலை   நாகங்   காண

                                        இடிகிணற்   றருகின்   வேரைப்

                                        .....பற்றிநான்   றிடவவ்   வேரைக்

                                        கடுகவோர்   எலியும்   வந்து

                                         .....கறித்திட   வதில்நின்  றோனுக்(கு)

                                        இடைதுளித்   தேனக்   கின்பம்

                                         .....போலுமிப்   பிறவி   யின்பம்

-----------------------------------------------------------------------------------------------------------

எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பாக. பாடலைச் சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் !

-----------------------------------------------------------------------------------------------------------

                                            அடுகரி   தொடர,   வீழ,

                                             ........ஐந்தலை     நாகம்    காண,

                                             இடிகிணற்று    அருகில்    வேரைப்

                                             ........பற்றி,     நான்றிட    அவ்வேரைக்

                                             கடுக  ஓர்    எலியும்   வந்து

                                              ........கறித்திட,   அதில்   நின்றோனுக்கு

                                             இடைதுளித்   தேன்   நக்கு   இன்பம்

                                              ........போலும்      இப்பிறவி இன்பம் !

----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

------------------------------

அடுகரி தொடர = கொல்ல வருகின்ற யானை என்னைப் பின் தொடர்ந்து துரத்த ;  இடிகிணற்றில் வீழ = இடிந்து பாழடைந்த நீரில்லாத ஒரு கிணற்றில் நான் வீழ்ந்தேன் ; 

அருகில் வேரைப் பற்றி = வீழும்போது (நல்வாய்ப்பாக ) கிணற்று விளிம்பில் முளைத்திருந்த ஒரு மரத்தின் வேரை நான் பற்றிக் கொண்டு ; நான்றிட = தொங்கினேன்;

ஐந்தலை நாகம் காண = அப்போது  நீரில்லாக் கிணற்றின் தரையில்   ஐந்து தலை நாகம் ஒன்று  படமெடுத்துச் சீறுவதைக் கண்டேன். (வேரினை விட்டுவிட்டால், கிணற்றுக்குள் வீழ்ந்து பாம்புக்குப் பலியாக நேரும்)

அவ்வேரைக் கடுக  ஓர்   எலியும்   வந்து கறித்திட = அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு எலி நான்  பிடித்துக் கொண்டு  தொங்கிய  வேரினைக் கடிக்கத் தொடங்கியது. 

அதில் நின்றோனுக்கு = அப்படி இறப்பின் பிடியில் சிக்கி,  வேரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த எனக்கு ; இடை துளித் தேன் = மேலேயிருந்த மரத்தில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் துளி என் வாயில் சொட்டியது.

நக்கு இன்பம்  = அந்தத் தேன் துளியை நக்கிச் சுவைக்கின்ற இன்பம் ; போலும் இப்பிறவி இன்பம் = போன்றது தானோ இந்தப் பிறவியில் நான் துய்க்கும் இன்பம் !

------------------------------------------------------------------------------------------------------------

 பாடலின் கருத்துரை;

----------------------------------

ஒரு யானை என்னைத் துரத்துகிறது ; தப்பித்து ஓடிவரும் நான்  கால் இடறி பாழடைந்த ஒரு கிணற்றில் வீழ்கிறேன் ;  அப்படி வீழும்போது (நல்வாய்ப்பாக ) கிணற்று விளிம்பில் முளைத்திருந்த ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொண்டு கினற்றுக்குள் தொங்குகிறேன் !

கிணற்றிலோ  நீரில்லை; ஆனால் கிணற்றின் தரையில் ஒரு நாகம் சீறிக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறேன்;  வேரிலிருந்து கை நழுவினால் பாம்புக்குப் பலியாவது உறுதி !

மனதில் அச்சம் எழுகிறது. வேரைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறலாம் என்று நினைக்கையில் , எங்கிருந்தோ வந்த ஒரு எலி, நான் பிடித்திருக்கும் வேரைக் கடிக்கத் தொடங்குகிறது !

எந்த நேரத்திலும் வேர் அறுந்து கிணற்றுக்குள் நான் வீழலாம்; பாம்புக்கும் பலியாகலாம்; எதிர்பாராத் திருப்பமாக யாராவது என் உதவிக்கும் வரலாம்; என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத துன்பச் சூழ்நிலை ! கிணற்று மேட்டில் இருக்கும் ஒரு மரக் கிளையில் உள்ள தேன் கூட்டிலிருந்து சொட்டுச் சொட்டாக தேன் துளிகள் என் உதட்டருகில் வீழ்கின்றன!

இறப்பு எந்த நேரத்திலும் என்னைச் சுருட்டி வாரிக் கொள்ளலாம் என்னும் சூழ்நிலையில், என் உதடுகளில் தெறித்து விழும் தேன் துளிகளை  நாவினால் நக்குகிறேன் !  ஆகா ! எத்துணைச் சுவை !

இப்பிறவியில் ஒவ்வொரு மனிதனும் எத்துனையோ துன்பங்களை எதிர்கொள்கிறான்;  அந்தத் துன்பங்களுக்கு இடையேயும்  தேன் துளி போன்ற இன்பமும்  அவனுக்குக் கிடைக்கத்தான் செய்கிறது ! இதுதான் மனித வாழ்வு !

இந்த  அழகிய பாடலை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை !  வரலாற்றில் அவரது காலடிச் சுவடுகள் பதிந்திருக்கின்றனவே தவிர அவரது பெயர் மட்டும் பதிவாக வில்லை !

-------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),08]

{24-10-2020}

------------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------

 

தனிப்பாடல் (568) பாலுக்குச் சர்க்கரை இல்லை !

கூழுக்குப் போட உப்பு இல்லை  !


இந்தப் பூவுலகில் பிறந்துவிட்டாலே கவலையும்  தொடர்ந்து வந்து விடுகிறது. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்குத் தேர்வு பற்றிய கவலை; பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு மேலதிகாரியின் கண்டிப்புப் பற்றிய கவலை !

 

குடும்பத் தலைவருக்கு வருமானம் பற்றிய கவலை;   கோயில் பூசாரிக்குத் தட்டில் காசுகள் விழுமா என்னும் கவலை; நடிகருக்குத் தனது படம் ஓடுமா என்ற கவலை; நாடாள்வோருக்கு அடுத்த தேர்தலைப் பற்றிய கவலை !

 

இப்படி எல்லோரையும் பிடித்து ஆட்டுவிக்கும் கவலையைப் பற்றி ஒரு புலவர்  நகைச்சுவையாக ஒரு பாடலைப் படைத்திருக்கிறார் நமக்காக ! அதைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------

 

                                பாலுக்குச்   சர்க்கரை  யில்லையென்

                                 ……….பார்க்கும் பருக்கையற்ற

                                கூழுக்குப் போடவுப்  பில்லையென்

                                 ……….பார்க்குமுட்   குத்தித்தைத்த

                                காலுக்குத்   தோற்செருப்   பில்லையென்

                                 ……….பார்க்குங்   கனகதண்டி

                                மேலுக்குப் பஞ்சணை   யில்லையென்

                                 ……….பார்க்கும்   விசன   மொன்றே !

 

-------------------------------------------------------------------------------------------------------------

 

பாடல் எளிதாகத்தான் இருக்கிறது; இருந்தாலும் அதைச் சந்தி பிரித்துத் தருகிறேன், இன்னும் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக !

 

-------------------------------------------------------------------------------------------------------------

 

                               பாலுக்குச் சர்க்கரை இல்லை என்

                               ..........பார்க்கும்,பருக்கையற்ற

                               கூழுக்குப்  போட  உப்பு  இல்லை  என்

                                ..........பார்க்கும்,முள்  குத்தித்  தைத்த

                               காலுக்குத் தோற் செருப்பு இல்லை என்

                                ..........பார்க்கும், கனக தண்டி

                                 மேலுக்குப் பஞ்சணை   இல்லை என்

                                  ..........பார்க்கும் விசனம் ஒன்றே !

 

-------------------------------------------------------------------------------------------------------------

அருந்துவதற்குச் சுவையான  ஆவின் (பசுவின்) பால்  இருக்கிறது;   ஆனால் அதில் கலந்து பருகுவதற்குச்  சர்க்கரை இல்லையே என்று கவலைப் படுகிறான் ஒரு மனிதன் !

 

உண்பதற்குச் சோறில்லை, கஞ்சி தான் இருக்கிறது; ஆனால் அதில் இட்டுக் கலக்கி  அருந்துவதற்கு உப்பு இல்லையே என்று இன்னொருவன் கவலைப்படுகிறான் !

 

காலில் முள் குத்தியதால் வலி ஏற்பட்டுத்  துன்பப் பட்ட வேறொரு  மனிதன், தன் கால்களில் அணிந்து கொள்ளச் செருப்பு  இல்லையே என்று கவலைப்படுகிறான் !

 

தங்கத்தால் இழைத்தக்  கட்டிலில் படுத்துறங்கும்  ஒரு செல்வந்தன், அந்தக் கட்டிலின் மேல்  விரித்துக் கொள்ள ஒரு பஞ்சு மெத்தை இல்லையே என்று கவலைப்படுகிறான் !

 

மாடமாளிகையில் வாழ்ந்தாலும், மண் குடிசையில் வாழ்ந்தாலும் மொத்தத்தில்  ஒவ்வொரு  மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான  கவலை இருந்து கொண்டே இருக்கிறது !

 

அனைவரிடமும் நிறைந்திருப்பது ஒன்றுதான் ! அது தான் கவலை ! கவலை இல்லாத மனிதனென்று யாருமே இல்லை !

 

------------------------------------------------------------------------------------------------------------

 

நகைச்சுவை கலந்து நல்ல கருத்தை நமக்கு உணர்த்திய   இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் தெரியவில்லை !

 

இத்தகைய நற்றமிழ்ச் செல்வர்களை வரலாறு  இருட்டறையில் வைத்திருப்பது  தமிழர்களின் அக்கறையின்மையால் தானோ ?

 

---------------------------------------------------------------------------------------------------------

                                                  ஆக்கம் + இடுகை

                                                     ,                           


வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),12]

{28-10-2020}

 

----------------------------------------------------------------------------------------------------------

           தமிழ்ப் பணி மன்றம் முகநூலில் வெளியிடப்பெற்ற கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------