name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (19) பொதுப் புணர்ச்சி - பொதுப் பெயர், உயர் திணைப் பெயர் முன் வலி வரல் (நூற்பா.159)

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (19) பொதுப் புணர்ச்சி - பொதுப் பெயர், உயர் திணைப் பெயர் முன் வலி வரல் (நூற்பா.159)

 

                            பொதுப்புணர்ச்சி

 

நூற்பா.159. (பொதுப்பெயர், உயர்திணைப்பெயர் முன் வலி வரல்) (பக்.124)

 

பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்கள்  ஈற்று மெய்

வலிவரின் இயல்பாம், ஆவி’, ‘முன்

வன்மை மிகா, சில விகாரமாம் உயர்திணை.  (நூற்பா.159)

 

[உயர்திணை, அஃறினை இரண்டிலும் கலந்து வரும் பெயர் பொதுப்பெயர் அல்லது விரவுப் பெயர் எனப்படும்] (நூற்பா.159)

 

சாத்தன் குறியன் = சாத்தன் என்பது இங்கு மனிதனைக் குறிப்பதால் உயர்திணை

சாத்தன் சிறிது = இங்குசாத்தன்என்பது என்பது உயர்திணை அல்லாத எருது போன்றவற்ரைக் குறிப்பதால் அஃறிணை ஆகும்.

 

சாத்தன் என்னும் சொல் இரு திணைகளிலும் வருவதால், சாத்தன் என்பது பொதுப்பெயர் அல்லது விரவுப் பெயர் ஆகும். (நூற்பா.159)

 

பொதுப் பெயர்களுக்கும், உயர்திணைப் பெயர்களுக்கும் ஈற்றில் உள்ள மெய்கள்,  வருமொழி முதலில் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும். (பக்.124) (நூற்பா.159)

 

சாத்தன் + குறியன் = சாத்தன் குறியன். (பக்.125)

(பொதுப் பெயர் அல்வழியில் இயல்பானது) (நூற்பா.159)

 

சாத்தன் + கை = சாத்தன் கை (பக்.1250

(பொதுப் பெயர் வேற்றுமையில் இயல்பானது) (நூற்பா.159)

 

சாத்தன் + தீயன் = சாத்தன் தீயன் (பக்.125)

(உயர்திணைப் பெயர் அல்வழியில் இயல்பானது) நூற்பா.159)

 

சாத்தன் + தலை = சாத்தன் தலை (பக்.126)

(உயர்திணைப் பெயர் வேற்றுமையில் இயல்பானது.( நூற்பா.159)

 

பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களின் ஈற்றில் உயிரெழுத்தோ, ய், ர், ஆகியவையோ நின்றால் வருமொழி முதலில் நிற்கும் வல்லெழுத்து மிகாது. (பக்.124) (நூற்பா.159)

 

சாத்தி + குறிது = சாத்தி குறிது (பக்.126) (நூற்பா.159)

தாய் + குறிது = தாய் குறிது (பக்.126)

நீர் + குறியீர் = நீர் குறியீர். (பக்.126)

 

(பொதுப் பெயர் ஈற்றில் உயிரெழுத்து , ‘ய்’, ‘ர்ஆகியவை வந்தவிடத்து வருமொழி வல்லெழுத்து மிகவில்லை; இயல்பாயிற்று) (நூற்பா.159)

 

மெய்யீறும் உயிரீறுமாகிய உயர்திணைப் பெயர்களுள் சில பெயர்கள் வல்லினம், மெல்லினம், இடையினம், உயிரினம் ஆகிய  நாற்கணங்களுடன் புணரும் போது  நிலைமொழியும் வருமொழியும் விகாரப்படுதலும் உண்டு (பக்.124) (நூற்பா.159)

 

கபிலர் + பரணர் = கபிலபரணர் (பக்.126) (நூற்பா.159)

(ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தது)

 

வாணிகர் + தெரு = வாணிகத் தெரு (பக்.126) (நூற்பா.159)

(ஈறு கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிந்தது)

 

குமரன் = கோட்டம் = குமரகோட்டம், குமரக்கோட்டம்(பக்.126) (நூற்பா.159)

(ஈறு கெட்டு, வருமொழி வல்லெழுத்து இயல்பாயும் மிக்கும் முடிந்தது)

 

பார்ப்பான் + கன்னி = பார்ப்பனக்கன்னி (பக்.127) (நூற்பா.159)

(ஈற்றயல் குறுகி, அகரச் சாரியை பெற்று, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிந்தது)

 

வேளாளன் + பிள்ளை = வேளாண் பிள்ளை (பக்.127) (நூற்பா.159)

(நிலைமொழி ஈற்றுஅன்கெட்டு ளகர மெய் ணகர மெய்யாகத் திரிந்து முடிந்தது)

 

மக்கள் + பண்பு = மக்கட்பண்பு (பக்.127) (நூற்பா.159)

(நிலைமொழி ஈற்று மெய் திரிந்து முடிந்தது)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .