name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (39) (1970) வணக்கத்திற்குரியவரே ! அவையின் ! (சு.அரங்கராசன்)

ஞாயிறு, அக்டோபர் 20, 2019

கவிதை (39) (1970) வணக்கத்திற்குரியவரே ! அவையின் ! (சு.அரங்கராசன்)




          கொத்து (01)                                                                 மலர் (046)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டையிலிருந்து சென்னை, இயக்ககத்திற்கு
இடமாற்றலாகிச் சென்ற
அலுவலக மேலாளர் திரு. சு. அரங்கராசன் அவர்களுக்கு
அளிக்கப்பெற்ற தேனீர் விருந்தின் போது நான் ஆற்றிய உரை !
 (நாள் : 30-04-1970)
--------------------------------------------------------------------------------------------

              வணக்கத்திற்     குரியவரே        அவையின்      ஏறே !
              வருத்தமுடன்    பிரிவோலை      ஏற்கும்          கோவே !
              கணக்கற்ற       பெருந்துயரில்    வாடும்           நண்ப !
              கசிந்துருகித்      தடுமாறி          மன்றம்          ஏறி ,
              வணங்குகிறேன்  கரங்கூப்பி       கண்ணீர்         சிந்தி ,
              வதைபடுமென்   நெஞ்சத்தைப்     படம்பி           டித்து ,
              பணங்கோடி      தந்தாலும்        ஈடா              காத ,
              பாசத்தால்        காட்டுதற்கு       உவந்தேன் ;     வந்தேன் !

-------------------------------------------------------------------------------------------------------------

    கூடுகட்டி            வாழ்ந்தகுயில்      வீடுவிட்டுப்          போகுது ! – அதன்
    குஞ்சுகளின்         பிஞ்சுமனம்         வெந்துமணல்       ஆகுது !
    பாடிநின்ற           பேடுஇன்று          வாடிநெஞ்சு         வேகுது ! – அதன்
    பாதுகாப்பில்        வாழ்ந்தகுஞ்சு       பிரிவுகண்டு         நோகுது !
    ஓடிவந்த            காடைகளைச்       சாடிவந்த            பேடையும்பிரிவு
    ஓலையெனும்      வலையினின்று     மீட்சியின்றி         உழலுது !
    கூடிநின்று          இன்பமுடன்         ஆடிவந்த            பறவைகள்இன்று
    கூறுபட்டு           அன்னையின்றி     குமுறுகின்றது       ஐயகோ !

------------------------------------------------------------------------------------------------------------

            நாடிவந்து           சாடுகின்ற           பேடிகளாம்          தீயோர் ,
            நாவறுத்து           சிரமொடித்த         படைத்தலைவன்    அங்கே !
            வாடிநின்று          ஆடிவழி             தேடுகின்ற          வேங்கை ,
            வலிபடைத்தும்      சோர்வுகொண்ட    வீர்ர்களோ          இங்கே !
            கூடிவந்து           பாடிநின்று          கோடுவெட்டும்      தீயோர்
            குலையறுத்து       அடிமிதித்த          படைத்தலைவன்    அங்கே !
            மிடியகற்றித்        துடிதுடிக்க          படைநடக்கும்       மறவர் ,
            மனமொடிந்து       வலிவிழந்து         மயங்குவதோ       இங்கே !
            குடியிருந்த          கோயிலிடை        இடியும்வந்து        வீழ்ந்தால் ,
            குடல்கலங்கும்      குழவியரின்         புகலிடந்தான்        எங்கே ?
            விடிந்தவுடன்        ஒளிபெருக்கும்      விரிகதிரோன்       அன்றி ,
            விட்டிலொளி        பயன்தருமா ?       வளம்பெறுமா       வாழ்வே ?

------------------------------------------------------------------------------------------------------------

            அணிமிகுத்து        பணிமுடிக்க        வழியனுப்பும்        தந்தை ,
            அடியெடுத்து        நடைமுடித்து        கடலடுத்துப்         போந்தார் !
            துணிவுதந்து        பிணிவிலக்கி       அரணமைத்த        தோன்றல் ,
            தொலையிடத்து     அலைமுகத்து       களையிழந்து       சென்றார் !
            மடியிருத்தி          அடிசிலூட்டி         கொடியிலிட்ட       அன்னை ,
            மனம்வளர்த்த       நினைவுதிர்த்து      நெடும்பயணம்      சென்றாள் !
            செடிகளைந்து       சுடுமணலில்        படியவைத்தல்       போல ,
            சேய்களிங்கு        நோய்களுற்றோம்  தாய்மறைந்து       சென்றாள் !

------------------------------------------------------------------------------------------------------------


     தடமமைத்து        வழிநடத்த           பணிசுமந்த          தலைவா ! - இன்று
     தடம்பிறழ்ந்து       எமைப்பிரிந்து       செல்வதுவும்        முறையா ?
     குடமெடுத்து        அறிவுமொண்டு     அருந்தவைத்த       தந்தாய் ! – இன்று
     குடம்விடுத்து       எமைத்துறந்து      ஏகுவதும்            சரியா ?
     நடைபழக்கி         உடைதிருத்தி        அருள்கொடுத்த     தாயே ! – இன்று
     நடந்துசெலப்        பணித்துவிட்டு      விரைந்தனையே    தகுமா ?
     விடைகொடுக்கக்   குழுமியுள்ள         வீர்ர்களின்          இறைவா ! –எங்கள்
     விழியிரண்டும்      விதும்பலுற்று       நீருகுதே !           நிறைவா ?

------------------------------------------------------------------------------------------------------------


            உயர்பணிக்கு       அழைத்திடுவார்     வாழ்த்திடுவோம்    என்றே
            உள்ளமதில்         எண்ணமுற         உவந்திருந்தோம்;    ஆனால் ,
            பயிர்வளர்க்கும்     காவலனே          வந்திடுக            என்றார் ,
            பரிசுமக்குப்          பிற்றைநாளில்      தந்திடுவோம்        என்றார் !
            உயிர்கலந்து        உறைந்தொழுகும்   ஒளிக்கதிரே         இன்று ,
            உளம்வருந்த        விடைகொடுத்து    அனுப்புகிறோம்     செல்க !
            செயிர்தீர்ந்த         அரும்பணிகள்      ஆற்றியயெம்        தலைவா !
            சிந்தையெலாம்     சூழ்ந்துவர           செல்லுகின்றாய்    வாழி !

-------------------------------------------------------------------------------------------------------------


     திரியெடுத்து         சுடர்கொளுத்தி      ஒளிபெருக்கும்      அன்பே ! – நின்
     திருவருளால்        அறிவுயர்ந்தோம்    உளங்கனிந்த        நன்றி !
     கரிபடிந்த            உளக்கலசம்         துலக்கிவைத்த      அன்பே ! – நின்
     கரமளித்த           அரவணைப்பில்     உவகையுற்றோம்    நன்றி !
     உரிமைகொண்ட    தாய்மையன்ன      அருள்பொழிந்த     நிலவே ! – நின்
     உறவுகொண்டு      நன்மையுற்று        அகமகிழ்ந்தோம்     நன்றி !
     தூரிகையாம்        நின்னழகுத்          திருப்பணியால்      நாங்கள் - நின்
     துடிப்புமிகு          ஓவியமாய்த்         துலங்குகிறோம்      நன்றி !

-------------------------------------------------------------------------------------------------------------

           அரவணைத்துச்     செல்லுகின்ற       தன்மையினால்     அன்னை !
           அருள்சுரந்து        நடத்துகின்ற        அரும்பணியால்     தந்தை !
           கரம்பிடித்து         நடத்துகின்ற        காவலன்நீ           அண்ணா !
           கைகொடுத்து       உதவுகின்ற          கருணையினால்    நண்பன் !
           வழிவகுத்து         நடத்துகின்ற        வகையதனால்      ஆசான் !
           வரும்பொருள்      உரைத்துநெறி       நிறுத்துவதால்       தலைவன் !
           அழிவினின்று      காத்துஎமை         ஆள்வதனால்        மன்னன் !
           அறவழியில்        செலுத்துகின்ற      அறிவொளிநீ        இறைவன் !

-------------------------------------------------------------------------------------------------------------

                    வாழிய !             வாழி !              வாழி !
                          வளம்பெற           நீடு                 வாழி !
                    ஆழியைப்           போல               வாழி !
                          அருந்தமிழ்          அமுதாய்            வாழி !
                    ஊழையும்           வெல்லும்           தங்கள்
                          உயர்தனித்           திறமை             வாழி !
                    மேழியின்           அருளைப்            போல
                          மேவிய              உயிரே              வாழி !
                    புன்னகை           மன்னன்              தங்கள்
                          பொறுமையின்      வலிமை            வாழி !
                    இன்னருள்           உள்ளம்              வாழி !
                          எம்மனோர்          நினைவும்           வாழி !

                                          வணக்கம் !

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------
                  


,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .