name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (36) (1970) என்னருமைக் காதலியே ! (படத்துக்குப் பாடல்)

ஞாயிறு, அக்டோபர் 20, 2019

கவிதை (36) (1970) என்னருமைக் காதலியே ! (படத்துக்குப் பாடல்)





         கொத்து (01)                                                     மலர் (37)
------------------------------------------------------------------------------------------------------

குறிஞ்சி மலர் திங்களேடு அறிவித்தபடத்துக்குப் பாடல்
போட்டிக்காக, அவ்வேட்டில் வெளியிடப்பெற்ற படத்தை வைத்து
எழுதி  அனுப்பிய கவிதை !
(ஆண்டு 1970)

------------------------------------------------------------------------------

          என்னருமைக்   காதலியே !       ஏந்திழையே !    மாந்தளிரே !
          இன்பப்           புனலூற்றே !     இன்னமுதே !    பூங்குயிலே !
          அன்னமே !      அஞ்சுகமே !      ஆழிவிளை       நன்முத்தே !
          அன்புப்           பாலூட்டும்       அழகுதமிழ்ப்      பூங்கொடியே !
          உன்வதனம்      வானகத்தில்      ஒளிவீசும்        நிலவாமோ ?
          ஒற்றைக்         கொடிப்புருவம்   மன்மதனின்      வில்லாமோ ?
          கன்னங்கள்      தேன்குடமோ ?   கருநாவல்      நின்விழியோ ?
          கற்கண்டுப்       படிகந்தான்       காரிகையுன்    பல்வரியோ ?

          கருவுற்ற         கொண்டல்தான்  கார்குழலோ ?    காதுமடல்
          கண்கவரும்      குறிஞ்சிப்பூ       கதைகூறும்       காவியமோ ?
          அருஞ்சுவைப்    பலச்சுளையில்   ஆக்கியதோ     செவ்விதழ்கள் ?
          ஆரணங்கு        நின்கழுத்து      அழகுமயில்       சீதனமோ ?
          கரும்புக்          கரமிரண்டில்     காந்தளேன்        பூத்ததடி ?
          கடல்நுரையும்    சந்தனமும்       கலந்ததுவோ     மேனியடி ?


          வேழத்தின்       மருப்பாமோ      வேய்ங்குழல்   நின்கால்கள் ?
          வெண்கதலித்    தண்டோ          வெள்ளரியோ  நின்கரங்கள் ?
          காழகமும்        நாணுகின்ற       கட்டழகி          நின்னடிதான் ,
          கஞ்சமலர்        இதழாமோ ?      கவினன்னத்      தூவிகளோ ?
          தாழம்பூ          மடலே ! என்      தங்கமணிக்      கோபுரமே !
          தமிழே !          தமிழ்தந்த         தாரகையே !      வாழியவே !
          அழகுமிகு        அம்புலியே !      ஆயிழையே !      வாழியவே !
          அமுதம்           நிகர்த்தவளே !   ஆருயிரே !         வாழியவே !


-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .