name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (37) (1970) பால் பொழியும் நிலவொளியில் ! ( மெட்டுக்குப் பாட்டு)

ஞாயிறு, அக்டோபர் 20, 2019

கவிதை (37) (1970) பால் பொழியும் நிலவொளியில் ! ( மெட்டுக்குப் பாட்டு)





           கொத்து (01)                                                  மலர் (38)
------------------------------------------------------------------------------------------------------------
பனிபடர்ந்த மலையின் மீது 
படுத்திருந்தேன் சிலையைப் போலே
என்னும் கண்ணதாசனின் கவிதையைத் தழுவி
எழுதிய ஒரு பாடல் !
(ஆண்டு.1970)

-----------------------------------------------------------------------


   பால்பொழியும்     நிலவொளியில்      படுத்திருந்தேன்      ஓர்நாள்  –  தூய
   பளிங்கினிலே      வடித்தமலர்ப்         பதுமையொருத்தி    வந்தாள் !
   வேல்விழிகள்      இரண்டுமெனை     வீழ்த்தமையல்       கொண்டேன் - அவள்
   வெட்கமுடன்       அருகமர்ந்து           முத்தமொன்று       தந்தாள் !
   கன்னமெனும்       மாதுளைகள்        சிவந்திருக்கக்     கண்டேன் ! – அவள்
   காந்தள்விரல்       கொண்டுஅதை        மெல்லமூடி          நின்றாள் !
   மின்னுகின்ற        பல்வரிசை             முத்துக்களோ     என்றேன் ! – அவள்
   மெல்லநகை        செய்துவேறு           என்னவேண்டும்     என்றாள் !
   தேனொழுகும்       கொவ்வையிதழ்       ஏனடியோ          என்றேன் ! – அவள்
   தித்திக்கின்ற        அமுதமதை            வழங்குதற்கு         என்றாள் !
   கூன்பிறையாம்     புருவங்களைக்        கொடுத்துவிடு     என்றேன் ! – அவள்
   கொஞ்சலாக        மன்னவனே         மலர்க்கணையது    என்றாள் !
   கார்குழலில்        மழைமுகிலைக்       கவர்ந்ததுஏன்      என்றேன் ! – அவள்
   கண்துயிலும்        தலைமகனின்         பஞ்சணையாம்       என்றாள் !
   நீர்மலரும்           தாமரைப்பூ           மேனியடி           என்றேன் ! – அவள்
   நீரணைத்து          மகிழ்வதற்கு        வழங்கிடுவேன்       என்றாள் !
   மின்னலிடை        நெளிகிறதே           ஏனடியோ           என்றேன் ! – அவள்
   மாலையாக          நின்கரத்தில்          விழுவதற்கு           என்றாள் !
   அஞ்சுகமே !         ஆயிழைநின்         பெயரெதுவோ      என்றேன் ! – அவள்
   அமைதியுடன்        ..................என்று         ஒருமுறைதான்      சொன்னாள் !
   கஞ்சமலர்          உடல்தழுவி         இடைத்துகிலைத்   தொட்டேன் -ஆனால்
   கருங்குருவி        ஒலியெழுப்பக்       கனவுகலைந்து          நின்றேன் !


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------





1 கருத்து:

  1. நீர்மலரும் தாமரைப்பூ மேனியடி என்றேன் !
    அவள் நீரணைத்து மகிழ்வதற்கு வழங்கிடுவேன் என்றாள் !
    என்ற சொற்கள் கொஞ்சும் தமிழ்
    அமிழ்தாய் சுவைக்கிறது !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .