name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (23) நம் முன்னோர் ஊர்களுக்குப் பெயர் வைத்த முறை !

சனி, அக்டோபர் 12, 2019

தமிழ் (23) நம் முன்னோர் ஊர்களுக்குப் பெயர் வைத்த முறை !


ஊர்ப் பெயர் அறிவோம் !


[பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து ஒருபகுதி]
---------------------------------------------------------------------------------------------------------------------
மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்து ஊர்கள்  குறிச்சி என்று அழைக்கப்பெற்றன. (-டு) வேளாக்குறிச்சி, துவரங் குறிச்சி !  

காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்து ஊர்கள் பாடி, சேரி என்று அழைக்கப் பெற்றன. (-டு) குறிஞ்சிப்பாடி, காட்டுப்பாடி (காட்பாடி); புதுச்சேரி, கூனஞ்சேரி !

வயலும் வயல் சார்ந்த இடமுமான மருத நிலத்தூர்கள் ஊர் என்று அழைக்கப் பெற்றன. (-டு) தஞ்சாவூர், வயலூர் !

கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம். பாக்கம் என்று அழைக்கப்பெற்றன. (-டு) காயல்பட்டினம், அதிராம்பட்டினம், முண்டியம்பாக்கம், ஊரப்பாக்கம் !

இந்த நால்வகை நிலங்களும் தன் நிலையிலிருந்து திரியும் போது பாலை எனப்பட்டது. பாலை நிலத்து ஊர்கள் பறந்தலை என்று அழைக்கப் பெற்றன !

மக்கள் தொகை பல்கிப் பெருகித் திணை மயக்கம்  உண்டான பின், இவ்வழக்கம் பெரும்பாலும் நின்று விட்டது !

இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப் பெயர்களும், ஊர்ப் பெயர் ஈறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை !

ஆறை என்பது ஆற்றூர் (-டு) (பழையாறை). புத்தூர் என்பது புதிய ஊர்; (எடுத்துக் காட்டு):- காட்டுப்புத்தூர், கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) பட்டி என்பது கால்நடைத் தொழுவம் உள்ள ஊர்; (.டு) கொண்டலாம் பட்டி, நேமத்தான் பட்டி !

பள்ளி  என்பது  பௌத்த, சமண மடம் உள்ள ஊர். (-டு) திருச்சிராப்பள்ளி, தொரப்பள்ளி. பாளையம் என்பது படை இருக்கும் ஊர். (-டு) மேட்டுப் பாளையம், உத்தமபாளையம் !

பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி. (-டு) செங்கழுநீர்ப்பட்டு (செங்கற்பட்டு), சேற்றுப்பட்டு (சேத்துப்பட்டு).  மங்கலம் என்பது பார்ப்பனர் இருக்கும் ஊர். சத்தியமங்கலம்,, நீடாமங்கலம் !

நத்தம் என்பது பார்ப்பனர் அல்லாதார் வாழும் ஊர். (-டு) புலவர் நத்தம், இடையர்நத்தம். குடி என்பது ஒரு குடும்பத்தாரே அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர். (-டு) காரைக்குடி, தூத்துக்குடி !

பேட்டை என்பது சந்தைகள் கூடும் ஊர். (-டு) முத்துப் பேட்டை, புதுப்பேட்டை.  புரம், புரி என்பன அரசர் தலைநகர். (-டு) காஞ்சிபுரம், தருமபுரம், தருமபுரி, மருங்காபுரி !

மூதூர் என்பது பழைய ஊர்; பேரூர் என்பது மாநகர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி;  வாடை என்பது வேட்டுவர் அல்லது இடையர் குடியிருக்கும் ஊர் !

பண்டார வாடை  என்பது குடிகளுக்குரிய ஊர். அடங்காப் பற்று  என்பது அரசன் ஆணைக்கு அடங்காதவர் வசிக்கும் ஊர்.  குடிக்காடு என்பது குடிகள் வசிக்கும் காட்டூர் !

குடியேற்றம் என்பது மக்கள் குடியேறிய ஊர்.  கல்லாங்குத்து என்பது கடின நிலத்து ஊர். முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்து ஊர். எயில் என்பது மதில் சூழ்ந்த ஊர். விண்ணகரம் என்பது திருமால் கோயில் உள்ள ஊர் !

ஏரி, குளம், கோட்டை, கோயில் முதலிய ஈறுகளில் முடியும் பேர்களைக் கொண்ட ஊர்கள், அவ்வீறுகளாற் குறிக்கப்படும் இடத்தைக் கொண்டவை. ஏரி என்று முடியும் பெயரைக் கொண்ட ஓரூரில் ஏரி இல்லாவிடின், அது ஒரு காலத்தில் இருந்து பின்னர்த் தூர்ந்து போனது என்று அறிதல் வேண்டும்.இங்ஙனமே பிறவும் !

புறம், பட்டு முதலிய சில பெயர்களும், இக்காலத்தில் சிறப்புப் பெயர் இழந்து பொதுப் பெயராக வழங்கி வருகின்றன. இக்காலப் புத்தூர்ப் பெயர்கள் வரலாற்றுச் செய்தியொன்றும் உணர்த்தா என்பதை அறிக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:மடங்கல் (ஆவணி),26]
{12-09-2019}
----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .