name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கிய அறிமுகம் (01)பத்துப் பாட்டு !

சனி, அக்டோபர் 05, 2019

இலக்கிய அறிமுகம் (01)பத்துப் பாட்டு !

தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது பத்துப்பாட்டு ! !



பழந்தமிழ் நூல்களைப் பொதுவாக, ‘பத்துப் பாட்டு’, ‘எட்டுத் தொகை’, ‘பதினெண் கீழக்கணக்குஎன்று பாகுபடுத்தி உரைப்பது உரையாசிரியர்கள் காலந்தொட்டுப் பயின்று வரும் ஒரு மரபாகும். இம்முறை வைப்பில்பத்துப் பாட்டுசங்க காலத் தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுகிறது !

    
து, பத்துப் பெரிய அகவற் பாடல்களைக் கொண்ட தொகுதி. பத்துப் பாட்டுத் தொகுதியில் அடங்கியுள்ள நூல்களை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாகப் பழைய பாடல் ஒன்று உள்ளது. அப்பாடல் வருமாறு :-

-------------------------------------------------------------------------------------------
முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,
பெருகு வளமதுரைக் காஞ்சி, மருவினிய
கோல நெடுநல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து.
-------------------------------------------------------------------------------------------

திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய இப்பத்து நூல்களுமேபத்துப் பாட்டுஎன்று வழங்கப் பெறுபவை !

    
பத்துப் பாட்டு நூல்களைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் தெரியவில்லை. திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் !

    
திருமுருகாற்றுப் படைக்குபுலவர் ஆற்றுப்படை’, என்ற பெயரும் உண்டு. மலைபடுகடாம்கூத்தர் ஆற்றுப்படைஎனவும் வழங்கும். ‘முல்லைப்பாட்டு’, ‘குறிஞ்சிப்பாட்டு’, ’பட்டினப்பாலைமூன்றும் அகத்திணை ஒழுக்கம் பற்றியவை !

    
நெடுநல்வாடைஅகப் பொருள் செய்தி வாய்ந்ததாயினும், பாண்டியனது அடையாளப் பூவைக் கூறினமையால், இது புறத் திணை நூலாகக் கருதப்படுகிறது. ’மதுரைக் காஞ்சிவீடுபேறு நிமித்தமான செய்திகளைக் கூறுவதால், இதையும் புறத்திணை நூலாக வகைப்படுத்திக் கூறுவர் உரையாசிரியர்கள் !

    
பத்துப் பாட்டு நூல்களுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு;  இதில் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரிய பாடல் மதுரைக் காஞ்சி; இதில் 782 அடிகள் உள்ளன !

    
பண்டைத் தமிழின் அழகையும் பெருமையையும், தொகை நூல்களை ஊன்றிப் படித்து மகிழ்வோமாக ! பழந்தமிழ்க் கருவூலங்களான இவற்றைத் தமிழ் பணி மன்ற நண்பர்கள் விருப்புடன் ஏற்று, போற்றிப் படித்துப் பயன் அடைவார்களாக !

    
சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பத்துப் பாட்டு நூல்களில் பரந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிவற்றை மட்டும் இங்குக் காண்போம் !

-------------------------------------------------------------------------------------------------------------

ORCHESTRA...............= பல்லியம் (பா.வரி.119. திருமுரு)
HEAVY DUTY...............= மதவலி (பா.வரி.232. திருமுரு)
HIGHWAY ROBBERS..= ஆறலைக் கள்வர் (பா.வரி.21.பொருநர்
FUND...........................= நிதியம் (பா.வரி.249.சிறுபாண்)
HEIR (வாரிசு)............= பிறங்கடை (பா.வரி.30,பெரும்பாண்)
BACK YARD.................= படப்பை (பா.வரி.401.பெரும்பாண்)
SENIOR CITIZEN........= மூதாளர் (பா.வரி.54.முல்லைப்பாட்டு)
V.I.P..............................= விழுமியர் (பா.வரி.200.மதுரைக்காஞ்சி)
MECHANIC..................= கம்மியர் (பா.வரி.57.நெடுநல்வாடை)
BUNGALOW................= வளமனை (பா.வரி.223.குறிஞ்சிப்பாட்டு)
KITCHEN......................= அட்டில் (பா.வரி.43.பட்டினப்பாலை)
SONS...........................= மகார் (பா.வரி.236.மலைபடுகடாம்)

--------------------------------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:
திருமுரு = திருமுருகாற்றுப்படை;
பொருநர் = பொருநராற்றுப்படை
சிறுபாண் = சிறுபாணாற்றுப்படை
பெரும்பாண் = பெரும்பாணாற்றுப்படை

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,09]
{24-06-2019)
------------------------------------------------------------------------------------------------------------
         
தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .