name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (12) கோயில்களில் கோலோச்சும் வடமொழி !

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (12) கோயில்களில் கோலோச்சும் வடமொழி !

கோயில்கள் இருப்பது தமிழ் நாட்டில் ! கும்பிடும் தெய்வங்களின் பெயரோ சமற்கிருதத்தில் !  


தமிழக மக்களே ! நீங்கள் வணங்கும் தெய்வப் பெயர்களைப் பாருங்கள் ! எடுத்துக் காட்டுக்காக ஒரு சில :-

சுயம்பீஸ்வர சுவாமிலோகநாயகி...............[ நரசிங்கன் பேட்டை ]
ஜம்புஹேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி........[ திருவானைக்காவல் ]
சிதம்பரேஸ்வரர்சிவகாமி அம்பாள்...............[ திருவிசைநல்லூர் ]
சித்தேஸ்வரர்சித்தாம்பிகை...........................[ திருச்சினம்பூண்டி ]

ராஜகோபாலசுவாமிசெங்கமலவல்லித் தாயார்......................[ மன்னார்குடி ]
வீரட்டேஸ்வரர்ஞானாம்பிகை...............................[ திருக்குறுக்கை ]
கும்பேஸ்வரர்மங்களாம்பிகை...............................[ கும்பகோணம் ]
சிவானந்தேஸ்வரர்ஆனந்தவல்லியம்மன்...............................[ திருக்கள்ளம் ]

அமிர்தகடேஸ்வரர்அபிராமியம்மன்.....................[ திருக்கடையூர் ]
ஸ்ரீதளிநாதர்சிவகாமியம்மன்....................................[ திருப்பத்தூர் ]
வைத்தீஸ்வரன்தையல்நாயகி அம்மன்...............[ வைத்தீஸ்வரன்கோயில்]
புஷ்பவனேஸ்வரர்சௌந்தராம்பிகை...............[திருப்பூந்துருத்தி]

சுந்தரேஸ்வரர்மீனாட்சி அம்மன்..........................................[ மதுரை ]
மயூரநாதசுவாமிஅபயாம்பிகை அம்மன்...........[ மயிலாடுதுறை ]
நேத்திரார்ப்பணேஸ்வரர்சுந்தரகுசாம்பிகை.[ திருவீழிமிழலை ]
பவ ஔஷதீஸ்வரர்பிரஹந்நாயகி அம்மன்............[ திருத்துறைப்பூண்டி.]

வேதாரண்யேஸ்வரர்வேதநாயகி அம்மன்......[ திருமறைக்காடு ]
கோகர்ணேஸ்வரர்பிரஹந்நாயகி அம்மன்...........[ புதுகோட்டை ]

இந்தத் தெய்வங்கள் உறையும் கோயில்கள் எல்லாம் எங்கு உள்ளன ? தமிழ்நாட்டில் ! இந்தத் தெய்வங்களை வழிபடும் மக்கள் எந்த நாட்டினர் ? தமிழ் நாட்டினர் !

இந்தத் தெய்வங்களுக்காக விழா எடுப்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தக் கோயில்களை எடுத்துக் கட்டிக் குடமுழுக்கு செய்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தத் தெய்வப் பெயர்கள் எல்லாம் எந்த மொழியில் உள்ளன ? சமற்கிருத மொழியில் !

இந்தக் கோயில்களில் எந்த மொழியில் பூசனை (அர்ச்சனை) செய்யப்படுகிறது ? சமற்கிருத மொழியில் ! சமற்கிருதத்தில் பூசனை (அர்ச்சனை)  செய்தால் தான் இந்தத் தெய்வங்களின் அருள் கிடைக்குமா ? (இந்த வினாவுக்கு எந்தத் தமிழனும் பதில் சொல்ல மாட்டான்.)

இந்தத் தெய்வங்களின் பெயர்களைச் சமற்கிருத்ததில் மாற்றியது யார் ? (இந்த வினாவுக்கும் எந்தத் தமிழனும் பதில் சொல்ல மாட்டான்.). தமிழ்நாட்டில் மக்களின் தாய் மொழி தமிழ்.  அவர்களது பேச்சு மொழி தமிழ். எழுத்து மொழி தமிழ். ஆட்சி மொழி தமிழ். தெய்வப் பெயர்கள் மட்டும் தமிழில் இருக்கக் கூடாதா ? தெய்வத்தின் அருள் வேண்டித் தொழுகின்ற மொழி தமிழில் இருக்கக் கூடாதா ?

தூங்காதே தம்பி தூங்காதே ! என்று பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடியதற்குப் பொருள் புரியவில்லையா தமிழர்களே ! தூங்கித் தூங்கியே பலவற்றை இழந்தீர்கள் ! தமிழையும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள் !

கோயில்களில் தமிழ் இல்லை ! கோயில்களில் குடி கொண்டுள்ள தெய்வப் பெயர்களில் தமிழ் இல்லை ! நீதி மன்றங்களில் தமிழ் இல்லை ! நெடுந்தெரு அங்காடிப் பலகைகளில் தமிழ் இல்லை !

மழலையர் பள்ளிகளில் தமிழ் இல்லை ! இல்லங்களில் நிகழும் உரையாடலில்  தமிழ் இல்லை ! தமிழ் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது ! தமிழையே மறந்து கொண்டிருக்கிறோம் !

தமிழை மதிக்கத் தவறும் தமிழர்களே ! தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்ற பாட்டினைப் பாடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை !! தமிழன் என்ற உணர்வை இழந்து, உரிமைகளை இழந்து, அடையாளத்தையும் இழந்து, பொட்டுப் பூச்சியாய், புன்மைத் தேரையாய் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழனே !!

இனி நீ தமிழனென்று சொல்லாதே ! தலை நிமிர்ந்து நில்லாதே !

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.:2049, நளி,25.]
(11-12-2018)

---------------------------------------------------------------------------------------------------------
      
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .