name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான் மணிக் கடிகை (06) கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் !

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

நான் மணிக் கடிகை (06) கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் !


சேற்றில் தான் செந்தாமரை பிறக்கிறது !

----------------------------------------------------------------------------------------------------------

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை  கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டது.. இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண். (06)

-----------------------------------------------------------------------------------------------------------

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்; மான் வயிற்றில்

ஒள்ளரி  தாரம்  பிறக்கும்;  பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்

நல்லாள் பிறக்குங் குடி.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

காட்டில்,  தானாகவே தோன்றி வளர்வது கள்ளிச் செடி. எந்த உயிரினத்திற்கும்  எவ்வித பயனுமில்லாத இந்தக் கள்ளிச் செடிகளுக்கு நடுவில்தான்  பெருமதிப்புடைய அகில் தோன்றி வளர்கிறது !

 

கானகத்தே திரிந்து வாழ்கிறது மான். உண்பவர்க்கு அல்லால், பிறருக்கு எவ்வகையிலும் பயன்படாத   இந்த மானின்  வயிற்றில் தான் ஒப்பனைக் கலைக்குப் பெரிதும் உதவுகின்ற அரிதாரம் தோன்றுகிறது !

 

தாகம் ஏற்படுகையில்,   உண்பதற்கு ஒரு துளியும்   தகுதியில்லாதது உவர்நீர். இத்தகைய உவர்நீர் நிறைந்திருக்கும் பெருங்கடலில் தான் விலைமதிக்க முடியாத முத்து பிறக்கிறது !

 

இப்படி ஒவ்வொன்றின்  பிறப்பையும் அறியமுடிகிற  மனிதனால் நல்லொழுக்கம் மிக்க சான்றோர்  எந்தக் குடியில் பிறக்கிறார்கள் என்பதை மட்டும்   அறிய முடிவதில்லை  !  ஏன் ? இதுதான் இயற்கையின் திருவிளையாடலோ ?

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

கள்ளி = கள்ளிச்செடி; அகில் = நெருப்பில் இட்டுப் புகைத்தால் நறுமணம் தரக் கூடிய அகில் என்னும் செடி; ஒள்ளரிதாரம் = மேன்மை மிக்க அரிதாரம்; பல்விலைய = பெருமதிப்புடைய ; முத்தம் = சிப்பியில் விளையும் முத்துகள்; அறிவார் யார் = அறிந்தவர் யாரோ;  நல்லாள் (நல்ல + ஆள்) = நல்லொழுக்கமும் நற்குணமும் நற்பண்புகளும் மிக்க ஆள்; பிறக்கும் குடி = பிறக்கும் மக்கள் குலம்.

 

-----------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),07]

{19-02-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

கள்ளி வயிற்றில்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .