name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம் (04) குப்புச்சாமி - பெயரின் பொருள் என்ன ?

புதன், செப்டம்பர் 04, 2019

பெயர் விளக்கம் (04) குப்புச்சாமி - பெயரின் பொருள் என்ன ?

உங்கள் பெயர் “குப்புச்சாமி”யா  ? இந்தப் பெயருக்குப் பொருள் தெரியுமா ?



குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பகுக்கப் பெற்ற நால்வகை நிலங்களுள் நெய்தல் நிலச் சிற்றூர்கள் குப்பம், பட்டினம், பாக்கம் என்றெல்லாம் அழைக்கப் பெற்றன !

தமிழில்,  குப்பம்  என்ற சொல்லுக்கு சிற்றூர், செம்படவர் வாழும் ஊர், கடற்கரையூர், எனப் பல பொருள்கள் உள்ளன !

சிற்றூர்களில் அவரவர்க்கு விருப்பமான தெய்வங்களை வழிபடுவதும், அவற்றுக்கு படிமை (சிலை) அமைத்துக் கோயில் கட்டிக் கொண்டாடுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம் !

சிற்றூர்த் தெய்வங்களுக்குச் சாமி என்ற பெயரிட்டு அழைப்பதும் இயல்பு.  இவ்வாறு நெய்தல் நிலச் சிற்றூராகிய குப்பத்திற்கு எனத் தோற்றுவிக்கப்பட்ட ஆண் தெய்வத்தை [ சாமியை ] பொதுவாக குப்பச்சாமி - அதாவது குப்பத்தின் சாமிஎன்று அழைத்தனர். பெண் தெய்வத்தை குப்பத்து அம்மைஅதாவது குப்பம்மை - என்று அழைத்தனர்

. குப்பச்சாமி என்னும் சொல்லே காலப் போக்கில், குப்புச்சாமி என்று உருமாறி வழங்கலாயிற்று. குப்பச்சாமி என்ற சொல்லிலிருந்து குப்புச்சாமி, குப்புஸ்வாமி, குப்பையன், குப்பன் எனப் பல பெயர்கள் தோன்றின !

குப்புச்சாமி என்பது, பெருந்தேவன் (பரமசிவன்), பெருமால் (விஷ்ணு), போன்று பெருந்தெய்வ வகையைச் சேர்ந்தது அன்று. அய்யனார், எல்லைச்சாமி, முனியசாமி, கருப்பன், போன்று  சிறு தெய்வ வகையைச் சேர்ந்தது. குப்பச்சாமி, குப்பம்மை என்னும் சொற்களிலிருந்து தோன்றிய பிற பெயர்களையும், அவற்றுக்காகப் புனையப் பெற்றுள்ள புதிய பெயர்களையும் காண்போமா !

------------------------------------------------------------------------------------------

      ·         குப்பண்ணன்........= நெய்தல்நாடன்
      ·         குப்பம்மாள்...........= நெய்தற்செல்வி
      ·         குப்பம்மை.............= பட்டினப்பாவை
      ·         குப்பன்.....................= நெய்தல்வாணன்
      ·         குப்பாத்தாள்..........= நெய்தல்நிலவு
      ·         குப்பாயி..................= நெய்தற்பதுமை
      ·         குப்புச்சாமி.............= நெய்தல்நேயன்
      ·         குப்பையன்............= நெய்தலெழிலன்

-------------------------------------------------------------------------------------
                                        ஆக்கம் + இடுகை
                                      வை.வேதரெத்தினம்,
                                               ஆட்சியர்,
                                    தமிழ்ப் பணி மன்றம்
                  ------------------------------------------------------------------------------------
      
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
  -
                  -----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .