name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (02) நடிகனைக் கடவுளாகத் தொழுவது ஏன் ?

புதன், செப்டம்பர் 04, 2019

சிந்தனை செய் மனமே (02) நடிகனைக் கடவுளாகத் தொழுவது ஏன் ?

தமிழா ! நடிகரின்  அட்டையுருவுக்குப் பால் முழுக்காட்டிச் சூடம் காண்பிப்பது  அறிவார்ந்த செயல்தானா ? 


                  
வீட்டிற்கு உள்ளும் புறமும் தமிழிலேயே பேசி , தமிலேயே சிந்தித்து வாழ்க்கை நடத்தும் அத்துணை பேரும் - தமிழ் நாட்டில்  வாழ்ந்தாலும்,  வேறு மாநிலங்களில் வாழ்ந்தாலும்,  அயல்நாட்டில் வாழ்ந்தாலும் -  மொழியால் தமிழர்களே !

இத்தகைய தமிழர்களில் உறுதியான வருமானம் பெறும் அரசுப் பணி, தனியார் பணிகளில் நிலையாக அமர்வு பெற்றுள்ளோர் நான்கு விழுக்காடு அளவே. சிறு, குறு மற்றும் பெருந்தொழில் தொடங்கி நடத்தி வருமானம் ஈட்டுவோர் ஆறு விழுக்காடு அளவுக்கு இருக்கலாம். எஞ்சிய தொண்ணூறு விழுக்காடு தமிழர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்கு, வேளாண்மை மற்றும் அன்றாடக் கூலி வேலைகளையே சார்ந்து இருக்கின்றனர்..

உழைத்தால் தான் அன்றாடம் வயிற்றுப் பசி தீரும் என்ற நிலையில் உள்ள விளிம்பு நிலைக் குடும்பங்கள் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இருக்கின்றன.. ஆனால் இத்தகைய மக்களைத் திரைப்படம், மதுப்பழக்கம், தொலைக்காட்சி, அரசியல் ஆகியவை சிந்திக்க விடாமல் தனக்கு அடிமைப் படுத்தி வைத்துள்ளன.

உழைத்துச் சம்பாதித்துக் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ள மக்களை, திரைப்பட மயக்கம் மடிமையாளர்களாக (சோம்பேறிகளாக) மாற்றி விட்டது. திரைப்படத்தை அரங்கத்திற்குச் சென்று பார்ப்பதற்காக தனது கைப்பணத்தைச் செலவிடுகிறான் கவலையில்லாத் தமிழன். நடிகர்களின் அட்டை உருவுக்கு (Cut-Out) ஒப்பனை செய்து, தோரணம் கட்டி, பால் முழுக்காட்டி, சூடம் ஏற்றி வழிபடுகிறான் சுரணை இழந்த தமிழன்.

நடிகருடன் சேர்ந்து நின்று ஒளிப்படம் (Photograph) எடுத்துக் கொள்ள நெடுந்தொலைவு ஊர்களிலிருந்தும் சென்னை நோக்கிப் பயணிக்கிறான் இளமைத் துடிப்பில் இருக்கும் இற்றைத் தமிழன். படம் எடுத்துக் கொண்டால், புதையல் கிடைத்துவிட்டதைப் போல புளகாங்கிதம் அடைகிறான்தன் கைக்காசு செலவானதைக் கருத்தில் பதிக்காத காளைத் தமிழன்.

தமிழக மக்களை - குறிப்பாக இளைஞர்களை - திரைப்படத் துறை தனது மாய்மாலங்களால் மயக்கி, மடிமையாளர்களாக (சோம்பேறிகளாக) மாற்றிவிட்ட கொடுமையை எந்தத் தமிழனாவது சிந்தித்துப் பார்க்கிறானா? கறுப்புப்பணத்தில் குளிக்கும் நடிகர்களுக்காக, ஆர்வலர் மன்றங்களை  (ரசிகர் மன்றங்களை) அமைத்து, தனது சிவப்புப் பணத்தை (அரத்தம் சிந்தி உழைத்த பணம்) விரயமாக்கும் சீரிழந்த தமிழர்களை எண்ணுகையில், தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்வது பிழையல்லவா?

எனவேதான் சொல்கிறேன் தமிழ் மண்ணில் வாழும் மானிடனே, நீ  தமிழனென்று சொல்லாதே ! இனி தலைநிமிர்ந்து நில்லாதே !
 
---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{04-12-2018}

----------------------------------------------------------------------------------------------------------
        ”தமிழ்ப் பணிமன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .