name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வரலாறு
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 15, 2020

வரலாறு பேசுகிறது (27) க.ப.அறவாணன் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


..அறவாணன்


தோற்றம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கடலங்குடி என்னும் ஊரில் 1941 –ஆம் ஆண்டு, ஆகத்து, 09 –ஆம் நாள் பிறந்தவர் அறவாணன். தந்தையார் பெயர் பழநியப்பன். தாயார் தங்கபாப்பு அம்மையார். இளமையில் பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் கிருட்டிணமூர்த்தி. சிலர் இவரை அருணாச்சலம் என்றும் அழைத்தனர். பின்னாளில், இவர் தன் இயற்பெயரை அறவாணன் என்று மாற்றி அமைத்துக் கொண்டார் !

கல்வி:

கடலங்குடியில் 5 ஆம் வகுப்பு வரைப் பயின்ற அறவாணன், பின்பு விட்டுணுபுரம் என்னும் ஊரில் பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்துத் தேர்ச்சி பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டப் படிப்பில் சேர்ந்த அறவாணன் 1959 –ஆம் ஆண்டு புலவர் பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றார். அங்கேயே மேற்படிப்பை மேற்கொண்டு 1963 –ஆம் ஆண்டு கீழைமொழியியல் வாலை (B.O.L) பட்டமும் பெற்றார் ! கலையியல் மேதை (M.A) பட்டத்தினைக் கேரளப் பல்கலைகத்தின் வாயிலாகப் பெற்றார் ! பின்பு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார் !

திருமணம்:

அறவாணன் 21-04-1969 அன்று தாயம்மாள் அவர்களை மணந்து கொண்டார். தாயம்மாள் பின்னாளில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வுபெற்ற தமிழறிஞராகத் திகழ்ந்தார்.  இவ்விணையருக்கு அறிவாளன், அருட்செங்கோர் என இரு ஆண் மகவினர் பிறந்தனர் 1

ஆசிரியப் பணி:

பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில், அறவாணன் தமிழ் விரிவுரையாளாராகப் பணியில் சேர்ந்தார். சிலகாலம் இங்கு பணிபுரிந்த பின், நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார். இதையடுத்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970 –ஆம் ஆண்டு பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் !

அயல்நாட்டுப் பணி :

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணி புரிந்த அறவாணன், பின்னர் ஆப்பிரிக்கப் பெருநிலத்தில்செனகல்நாட்டில் உள்ளதக்கார்பல்கலைக் கழகத்தில் மானிடவியல் ஆய்வாளராக 1977 முதல் 1982 வரை ஐந்தாண்டுகள் பணிபுரிந்து தாய்நாடு திரும்பினார் !

மீண்டும் தமிழ்ப் பணி:

ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த பின் சென்னையில் உள்ள இலயோலா (LAYOLA) கல்லூரியில் 1982 –இல் பணியில் சேர்ந்த அறவாணன், அங்கு 1987 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். அடுத்து 1987 முதல் புதுவைப் பல்கலைக் கழகத்தில் தனது பணியைத் தொடர்ந்தார்.

துணைவேந்தர்:

அறவாணன் அவர்களின் தமிழ்ப் புலமையையும், ஆளுமைத் திறனையும் கண்ட திரு.மு..அரசு, அவரை நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணை வேந்தராக 1998 –ஆம் ஆண்டு  பணியில் அமர்த்தியது. மூன்றாண்டுகள் இப்பதவியில் திறம்படப் பணியாற்றிய அறவாணன், 2001 –ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் !

பிற பணிகள்:

இவர் துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில், சமுதாயவியல் கல்லூரிகளை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்கள் வாழ்வில் ஒளிபெறச் செய்தார். இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு தளர்ச்சியுற்றிருந்த நிலையில் அதனை மிகப் பெரிய நிலைக்கு உயர்த்தி தமிழாய்வுகள் சிறக்க வழி செய்தார் ! அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார் !

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருந்த  இவர்  சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளுக்குத் தன்னுடைய  வளமான பங்களிப்பினை நல்கியும் வந்திருக்கிறார் !

படைப்புகள்:

தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்”, “சைனர்களின் (JAINS) தமிழிலக்கண நன்கொடை”, “தொல்காப்பியக் களஞ்சியம்”, “கவிதை - கிழக்கும் மேற்கும்”, “அற்றைய நாள் காதலும் வீரமும்”, “தமிழரின் தாயகம்”, “தமிழ்ச் சமுதாய வரலாறு”, “தமிழ் மக்கள் வரலாறு” “அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்புகளில் "அவள் அவன் அது", "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்", "செதுக்காத சிற்பங்கள்", "சொல்ல முடிந்த சோகங்கள்", ”நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள்”, ”கண்ணீரில் மிதக்கும் கதைகள்”, ஆகியவை அனைவரது கருத்தையும் கவர்ந்த பிற நூல்களாகும் ! இவ்வாறு அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்து நமக்கு அளித்துள்ளார் !

விருது:

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, சிறந்த பேராசிரியருக்கான விருது (1986), ஆகியவற்றைப் பெற்றுள்ள இவர் சி.பா.ஆதித்தனாரின் இலக்கியப்  பரிசையும் வென்றுள்ளார் !

மறைவு:

சிறந்த தமிழறிஞராகவும், ஆளுமை மிக்கத் துணைவேந்தராகவும் இலங்கி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு மதிப்பு மிக்க நூல்களையும் காணிக்கையாக அளித்துள்ள கடலங்குடி பழநியப்பன் அறவாணன் அவர்கள் 2018 –ஆம் ஆண்டு, திசம்பர்த் திங்கள் 23 –ஆம் நாள் தமிழன்னையின் மலரடிகளில் அடைக்கலமானார். அவரது பூதவுடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், புகழுடல் தமிழர் நெஞ்சங்களை விட்டு என்றும் மறையாது !

முடிவுரை:

19 –ஆம் நூற்றாண்டும், 20 –ஆம் நூற்றாண்டும் ஆற்றல் மிக்கத் தமிழறிஞர்கள் நூற்றுக் கணக்கானோரை உருவாக்கித் தமிழகத்திற்கு அளித்திருந்தது. அவர்கள் அனைவருமே கோபுர விளக்குகளாகத் திகழ்ந்து வந்தார்கள். இந்த விளக்குகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணைந்து  விட்டன. அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இக்காலத் தமிழறிஞர்களுக்குச் சற்றும்  மனமில்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தங்கள் கடமை முடிந்து விட்டது என்று சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்து வருகிறர்கள். தமிழன்னையின் துன்பக் கண்ணீரைத் துடைக்க முன்வருவார் யாருமில்லை !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),29]
{12-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
            
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------











வரலாறு பேசுகிறது (26) கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை


தோற்றம்:

தஞ்சை நகரின் ஒரு பகுதியாகத் திகழும் கருந்திட்டைக்குடி என்னும் கரந்தையில் 1883 –ஆம் ஆண்டு மே மாதம் 7 –ஆம் நாள்  உமாமகேசுவரன் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் வேம்புப் பிள்ளை. தாயார் காமாட்சி அம்மையார் ! இவர் தனது 12 –ஆம் அகவையில் தாய், தந்தை இருவரையுமே இழந்து சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையார் அரவணைப்பில் வளர்ந்து வந்தார் !

கல்வி:

தனது தொடக்கக் கல்வியைக் கரந்தையிலும், உயர்கல்வியைத் தஞ்சையிலும் பெற்ற உமாமகேசுவரன், தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் கலையியல் வாலைப் படிப்பை (B.A) நிறைவு செய்து பட்டம் பெற்றார். பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் (CLERK) பணியில் சேர்ந்தார்.  சில காலம் சென்றபின் சென்னை, சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று சட்டவியல் வாலைப் பட்டம் (B.L) பெற்றார் !

வழக்குரைஞர்:

சட்டவியல் பட்டம் பெற்ற பின் தஞ்சை, கே.சீனிவாசம் பிள்ளை என்னும் புகழ் பெற்ற வழக்குரைஞரிடம் இளநிலை வழக்குரைஞராகச் சேர்ந்து (JUNIOR ADVOCATE)  பயிற்சி பெறலானார். சில ஆண்டுகளில் தனித்து, தொழில் செய்யத் தொடங்கினார். தஞ்சை மாவட்டம் முழுவதும் இவர் பெயர் பரவும் அளவுக்குப் புகழ் பெற்ற வழக்குரைஞராகத் திகழலானார் ! ஏழைகளிடம் பணம் பெறாமல் வழக்கு நடத்தி வெற்றி தேடித் தந்தார். இவரது திறமையைப் பார்த்து, அன்றைய அரசு இவரைக் கூடுதல் அரசு வழக்குரைஞராகஅமர்வு செய்து பெருமைப்படுத்தியது !

திருமணம்:

1903 ஆம் ஆண்டு, இவர் தனது 25 –ஆம் அகவையில் உலகநாயகி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு பஞ்சாபாகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்னும் ஆண்மக்கள் மூவர் பிறந்தனர் ! மூன்றாவது பிள்ளை பிறந்த பின்பு உலகநாயகி அம்மையார் காலமானார் !

குமுகாயப் பணி:

தஞ்சை வட்டக் கழகத்தின் தலைவராக (TALUK BOARD PRESIDENT) இவர் 1920 –ஆம் ஆண்டு பொறுப்பேற்று, பல ஊர்களுக்குச் சாலை வசதிகளை ஏற்படுத்தினார்., ஆற்றைக் கடந்து செல்லப் பாலங்கள் கட்டித் தந்தார். பல  ஊர்களில் பள்ளிக் கூட வசதிகளை ஏற்படுத்தினார். கூட்டுறவு நிலவள வங்கி ஒன்றையும், கூட்டுறவு அச்சகம் ஒன்றையும் 1926-27 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தினார் !

தமிழ்ச் சங்கம்:

1911 –ஆம் ஆண்டு மே மாதம் 14 –ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். இன்று ஆயிரக் கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் உருவான அறிவுக் கருவூலம் ஆகும். அன்றே தொழிற்கல்வியின் தேவையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம் சார்பில், 6-10-1916 அன்று செந்தமிழ்க் கைத் தொழிற் கல்லூரியைத் தொடங்கினார்.  சங்கத்தின் சார்பில் 1928-29 ஆம் ஆண்டுகளில் கட்டணமில்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற நான்காவது ஆண்டிலேயேதமிழ்ப் பொழில்என்னும் திங்களிதழ் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பல அரிய தமிழ் நூல்கள் பதிப்பித்து வெளியிடப்பட்டன !

தமிழ்ப் பொழில் திங்களிதழ்:

மதுரைத் தமிழ்ச் சாங்கம் சார்பில்செந்தமிழ் என்னும் திங்களிதழும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்பில் செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்களிதழும் நடத்தப் பெற்று வந்த  நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில்தமிழ்ப் பொழில் திங்களிதழும் தொடங்கப் பெற்றிருந்தது. இவ்விதழைச் செம்மையாக நடத்திட, உமாமகேசுவரனார் சிறப்பு முயற்சிகளை  எடுத்துக் கொண்டார் !
தமிழ்ப்பொழில் இதழின் அட்டைப்படம், உள்ளடக்கம் இவ்விரண்டும் மிகச் சிறப்பாக உமா மகேசுவரனார் அவர்களால் உருவாக்கப்பட்டது. தூய தமிழ்ச் சொற்களை அவ்விதழில் பயன்படுத்தினார். இதழாசிரியர் என்பதை  "பொழிற்றொண்டர்" என்றும், தனியிதழ் "மலர்" என்றும், பன்னிரு மலர்கள் கொண்ட ஓராண்டுத் தொகுப்பை "துணர்"  (பூங்கொத்து) என்றும், உறுப்பினர் கட்டணம் என்பதை கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதை உறையுள் என்றும் ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலை கொளும் அஞ்சல்என்றும் அச்சிட்டு வெளியிட்டார் !
அந்த இதழில் தமிழறிஞர் சதாசிவ பண்டாரத் தாருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் எழுதிய  தமிழ் மன்னர்கள் வரலாறு மற்றும் தமிழ் கல்வெட்டுச் சான்று குறித்து கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டார் !
தமிழ்த் தொண்டுகள்:

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக உமாமகேசுவரனார் பொறுப்பேற்ற பின் அவர் பல பணிகளை நிறைவேற்றியிருக்கிறார். அவற்றுள் ஒரு சில வருமாறு:-

(01) நீராருங் கடலுடுத்த என்னும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தினார்.
(02) வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்றுக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, கல்லூரியின் பெயரையும் அரசர் கல்லூரி என மாற்றச் செய்தார்.
(03) தமிழ் மொழியினைச் செம்மொழியாக (CLASSICAL LANGUAGE) அறிவிக்க வேண்டும் என்று 1919 –ஆம் ஆண்டிலேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
(04) தமிழுக்குத் தனியாக ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 –ஆம் ஆண்டில் தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
(05) சென்னை அரசு, பள்ளிகளில் இந்தியைச் சொல்லித் தரவேண்டும் என்று 1937 –ஆம் ஆண்டில் உத்தரவிட்டபோது அதை ஏற்க மறுத்து, தமிழ்ச் சங்கத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, களத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்.
(06) ஸ்ரீமான், ஸ்ரீமதி என்னும் வடசொற்களுக்கு மாற்றாகத் திருமகன், திருவாட்டி என்னும் சொற்களை அறிமுகப்படுத்திப் பரப்புரை செய்தார்.
(07) யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அரசியல் பணி:

நீதிக் கட்சியில் (JUSTICE PARTY) இணைந்து, தஞ்சை மாட்டம் முழுதும், கட்சிப் பணி ஆற்றினார். ஏழை எளிய மக்களுக்காக பள்ளிகளைத் தொடங்கச் செய்தார். ஊர்ப்புற மேம்பாட்டுக்காக, அரசின் மூலம் பல திட்டங்களை நிறைவேற்றச் செய்தார் ! காந்தியடிகள் தஞ்சை வந்தபோதுஉக்கடை மாளிகைஎன்னும் வளமனையில் தங்கியிருந்தார். அவரை உமாமகேசுவரனார் சந்தித்து பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதோருக்கு இழைத்து வரும் தீங்குகள் குறித்து விரிவாகச் சொல்லி முறையிட்டார் !

தமிழவேள்:

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா 15-4-1938 அன்று நடைபெற்றது. இந்த விழாவின் போது தான் உமா மகேசுவரனாருக்கு 'தமிழ வேள்' என்னும் பட்டத்தை நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கினார். அது முதல் 'தமிழவேள்' உமா மகேசு வரனார் என்றே அனைவரும் அன்போடு அழைக்கத் தொடங்கினர் !
மறைவு:
கல்கத்தாவில் இரவீந்திரநாத் தாகூர் நடத்திவரும் சாந்தி நிகேதனைப் போல் கரந்தை தமிழ்ச்சங்கம் மாற வேண்டுமென்று உமா மகேசுவரனார் விரும்பினார். அதனைப் பார்வையிட்டுக் கல்கத்தாவை விட்டு திரும்புகையில் உடல்நலம் குன்றியே காணப்பட்டார். பிறகு அயோத்தி நகர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் 9.5.1941 அன்று உமாமகேசுவரனார் தமது 58 –ஆம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !
முடிவுரை:
மதுரை நகரில் நான்காம் தமிழ்ச் சங்கத்தினை 1901 –ஆம் ஆண்டு  உருவாக்கினார், பாண்டித்துரைத் தேவர். கரந்தை  நகரில் 5 –ஆம் தமிழ்ச் சங்கத்தை 1911 -ஆம் ஆண்டு உருவாக்கினார் உமா மகேசுவரன் பிள்ளை, தன் தமையனார் இராதாகிருட்டிண பிள்ளையுடன் சேர்ந்து ! இந்தத் தமிழ்ச் சங்கக் கல்லூரி பின்னாளில் ஔவை துரைசாமியார், வெள்ளை வாரணனார் போன்ற பல தமிழறிஞர்களை உருவாக்கிய கல்விக் கோயிலாகத் திகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை !

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),28]
{11-02-2020}

------------------------------------------------------------------------------------------------------------
             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------













ஞாயிறு, பிப்ரவரி 09, 2020

வரலாறு பேசுகிறது (25) க.வெள்ளைவாரணனார் !



மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !


க.வெள்ளை வாரணனார் !




தோற்றம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேசுவரம் என்னும் ஊரில் 1917 –ஆம் ஆண்டு, சனவரித் திங்கள், 14 –ஆம் நாள் வெள்ளை வாரணன் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் கந்தசாமி. தாயார் அமிர்தம் அம்மையார் !

பெயர்க் காரணம்:

வெள்ளை வாரணன் என்றால் வெள்ளை யானை என்று பொருள். வெள்ளைப் பிள்ளையார் என்றும் சொல்லலாம். வாரணம் என்ற சொல்லுக்கு சங்கு, யானை, கோழி, கடல், கேடகம் எனப் பல பொருள்கள் உள்ளன !

கல்வி:

வெள்ளை வாரணன், தமது தொடக்கக் கல்வியைத் திருநாகேசுவரத்தில் கற்றார். அடுத்து, திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து, திருமுறைப் பாடல்களை இசையுடன் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார் !

வித்துவான்:

பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் (இளநிலைப் புலவர்) படிப்பில் சேர்ந்து 1935 –ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்றார். அடுத்து 1935 -37 –இல் இங்கேயே ஆய்வு மாணவராகச் சேர்ந்து “தொல்காப்பியம்-நன்னூல்” எழுத்ததிகாரம் ஒப்பீடு என்னும் ஆய்வேட்டினை எழுதி அளித்தார் !

விரிவுரையாளர்:

தஞ்சையில் உள்ள  கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் 1938 முதல் 1943 வரை ஐந்தாண்டுகள்  தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். பின்பு 1943 –ஆம் ஆண்டு, சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார் !

இந்தி எதிர்ப்பு:

1938 –ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், வெள்ளை வாரணன் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ”பாந்தளூர் வெண்கோழியார்என்ற புனைப் பெயரில், வெள்ளைவாரணன்காக்கை விடு தூதுஎன்னும் நூலை எழுதி, முலமைச்சராக இருந்த இராசகோபாலாச்சாரிக்கு அனுப்பி வைத்ததன் மூலம் போராட்டத்திற்குத் தமது பங்களிப்பையும் நல்கினார்

திருமணம்:

விரிவுரையாளராகக் கரந்தையில் பணிபுரிந்த போது வெள்ளை வாரணனுக்கு 1939 –ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் பொற்றடங் கண்ணி அம்மையார். இவ்விணையரின் பெயர்களைப் பார்க்கையில் இருவரும் ஆழ்ந்த தமிழ்ப் பற்றின் காரணமாக அழகிய தமிழில் பெயரை மாற்றி வைத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது !

இணைப்பேராசிரியர்:

1943 –ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்த வெள்ளை வாரணனுக்கு, அவரது புலமைத் திறனைக் கருத்திற் கொண்டு, பல்கலைக் கழகம், பணி விதிகளைத் தளர்த்தி, இணைப் பேராசிரியர் பணிப்பொறுப்பினை 1962 –ஆம் ஆண்டு அளித்தது !

பிற பொறுப்புகள்:

பின்பு 1977 –ஆம் ஆண்டு துறைத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக் கழக ஆளவை மன்றம் (SYNDICATE) ஆட்சிக் குழு (SENATE) ஆகியவற்றிலும் அமர்வு பெற்றுத் திறம்படத் தமது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றி வந்தார். தனது 62 –ஆவது அகவையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணியிலிருந்து 1979 –இல் ஓய்வு பெற்றார். பின்பு 1979 முதல் 1982 வரை மூன்றாண்டுகள்  மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார் !

நற்றமிழ் அறிஞர்:

பேராசிரியர் வெள்ளைவாரணனார், மாணாக்காரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம்  ஆகியவற்றைக் கற்றுத் துறைபோகிய நற்றமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். இவரது உரை நூல்கள் இவரது நுண்மாண் நுழைபுலத்தினைக் காட்டுவனவாக அமைந்தன !

படைப்புகள்;

தமிழ் இலக்கிய வரலாறுதொல்காப்பியம்; தொல்காப்பியம்நன்னூல் எழுத்ததிகார ஒப்பீடு; தொல்காப்பியநன்னூல் சொல்லதிகார ஒப்பீடு; தொல்பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்); குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி; சங்க காலத் தமிழ் மக்கள்; திருவுந்தியார்; திருக்களிற்றுப்பாடியார்; சேக்கிழார் நூல்நயம்; பன்னிரு திருமுறை வரலாறு (இரு தொகுதிகள்); தில்லைப் பெருங்கோயில் வரலாறு; திருவருட்பாச் சிந்தனை; தேவார அருள்முறைத் திரட்டுரை; திருமந்திர அருள்முறைத் திரட்டுரை; திருவருட்பயன் விளக்கவுரை; காக்கை விடு தூது; இசைத்தமிழ்; அற்புதத் திருவந்தாதி; சைவ சித்தாந்த சாத்திர வரலாறு; திருத் தொண்டர் வரலாறு போன்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்துள்ளார் !

சிறப்புகள்:

சித்தாந்தச் செம்மல்”, ”தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோர்”, ”திருமுறை உரைமணி”, “செந்தமிழ்ச் சான்றோர்”, “தமிழ் மாமணி”, “சிவகவிமணி”, “திருமுறைத் தெய்வமணி”, “தமிழ்ப் பேரவைச் செம்ம்ம்ள்போன்று பல பட்டங்களையும் விருதுகளையும் பல்வேறு அமைப்புகள் இவருக்கு வழங்கியுள்ளன

மறைவு:

இவர் தனது இறுதிக் காலத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார். அபோது அவருக்கு உடல் நலம் குன்றியது. அதனால் தில்லை (சிதம்பரம்) சென்று அங்கே தங்கி வாழ்ந்து வந்த போது 1988 –ஆம் ஆண்டு, சூன் மாதம், 13 –ஆம் நாள், தமது 72 –ஆம் அகவையில் தமிழ்த் தாயிடவிருந்து விடைபெற்று, இப்பூவுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார்

முடிவுரை:

எத்துணையோ அறிஞர்கள் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர்அறிவுலகம் போற்றும் ஆயிரக் கணக்கான நூல்களையும் அளித்துள்ளனர். அவர்கள் எல்லோருள்ளும் இவர் தனது அழகிய தமிழ்ப் பெயரால் தனித்து நிற்கிறார். இளம் அகவையிலேயே தனது பெயரை :வெள்ளை வாரணன்என்றி மாற்றிக் கொண்டார் போலும் ! அதனால் இவரது இயற்பெயர் என்னவென்று அறிய இயலவில்லை. வெள்ளை வாரணனார்பொற்றடங்கண்ணி என்னும் இந்த தமிழ் இணையரின் பெயர்கள் நம் உள்ளத்திலும் தமிழ் உணர்வை ஊட்டி எழுப்புமா ? காலம் தான் விடை சொல்ல வேண்டும் !


-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051, சுறவம் (தை),25]
{08-02-2020}

------------------------------------------------------------------------------------------------------------




 























தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற





















 கட்டுரை ! 


 



 

 

 





 


-----------------------------------------------------------------------------------------------------------