name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வரலாறு பேசுகிறது (25) க.வெள்ளைவாரணனார் !

ஞாயிறு, பிப்ரவரி 09, 2020

வரலாறு பேசுகிறது (25) க.வெள்ளைவாரணனார் !



மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !


க.வெள்ளை வாரணனார் !




தோற்றம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேசுவரம் என்னும் ஊரில் 1917 –ஆம் ஆண்டு, சனவரித் திங்கள், 14 –ஆம் நாள் வெள்ளை வாரணன் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் கந்தசாமி. தாயார் அமிர்தம் அம்மையார் !

பெயர்க் காரணம்:

வெள்ளை வாரணன் என்றால் வெள்ளை யானை என்று பொருள். வெள்ளைப் பிள்ளையார் என்றும் சொல்லலாம். வாரணம் என்ற சொல்லுக்கு சங்கு, யானை, கோழி, கடல், கேடகம் எனப் பல பொருள்கள் உள்ளன !

கல்வி:

வெள்ளை வாரணன், தமது தொடக்கக் கல்வியைத் திருநாகேசுவரத்தில் கற்றார். அடுத்து, திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து, திருமுறைப் பாடல்களை இசையுடன் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார் !

வித்துவான்:

பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் (இளநிலைப் புலவர்) படிப்பில் சேர்ந்து 1935 –ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்றார். அடுத்து 1935 -37 –இல் இங்கேயே ஆய்வு மாணவராகச் சேர்ந்து “தொல்காப்பியம்-நன்னூல்” எழுத்ததிகாரம் ஒப்பீடு என்னும் ஆய்வேட்டினை எழுதி அளித்தார் !

விரிவுரையாளர்:

தஞ்சையில் உள்ள  கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் 1938 முதல் 1943 வரை ஐந்தாண்டுகள்  தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். பின்பு 1943 –ஆம் ஆண்டு, சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார் !

இந்தி எதிர்ப்பு:

1938 –ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், வெள்ளை வாரணன் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ”பாந்தளூர் வெண்கோழியார்என்ற புனைப் பெயரில், வெள்ளைவாரணன்காக்கை விடு தூதுஎன்னும் நூலை எழுதி, முலமைச்சராக இருந்த இராசகோபாலாச்சாரிக்கு அனுப்பி வைத்ததன் மூலம் போராட்டத்திற்குத் தமது பங்களிப்பையும் நல்கினார்

திருமணம்:

விரிவுரையாளராகக் கரந்தையில் பணிபுரிந்த போது வெள்ளை வாரணனுக்கு 1939 –ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் பொற்றடங் கண்ணி அம்மையார். இவ்விணையரின் பெயர்களைப் பார்க்கையில் இருவரும் ஆழ்ந்த தமிழ்ப் பற்றின் காரணமாக அழகிய தமிழில் பெயரை மாற்றி வைத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது !

இணைப்பேராசிரியர்:

1943 –ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்த வெள்ளை வாரணனுக்கு, அவரது புலமைத் திறனைக் கருத்திற் கொண்டு, பல்கலைக் கழகம், பணி விதிகளைத் தளர்த்தி, இணைப் பேராசிரியர் பணிப்பொறுப்பினை 1962 –ஆம் ஆண்டு அளித்தது !

பிற பொறுப்புகள்:

பின்பு 1977 –ஆம் ஆண்டு துறைத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக் கழக ஆளவை மன்றம் (SYNDICATE) ஆட்சிக் குழு (SENATE) ஆகியவற்றிலும் அமர்வு பெற்றுத் திறம்படத் தமது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றி வந்தார். தனது 62 –ஆவது அகவையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணியிலிருந்து 1979 –இல் ஓய்வு பெற்றார். பின்பு 1979 முதல் 1982 வரை மூன்றாண்டுகள்  மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார் !

நற்றமிழ் அறிஞர்:

பேராசிரியர் வெள்ளைவாரணனார், மாணாக்காரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம்  ஆகியவற்றைக் கற்றுத் துறைபோகிய நற்றமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். இவரது உரை நூல்கள் இவரது நுண்மாண் நுழைபுலத்தினைக் காட்டுவனவாக அமைந்தன !

படைப்புகள்;

தமிழ் இலக்கிய வரலாறுதொல்காப்பியம்; தொல்காப்பியம்நன்னூல் எழுத்ததிகார ஒப்பீடு; தொல்காப்பியநன்னூல் சொல்லதிகார ஒப்பீடு; தொல்பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்); குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி; சங்க காலத் தமிழ் மக்கள்; திருவுந்தியார்; திருக்களிற்றுப்பாடியார்; சேக்கிழார் நூல்நயம்; பன்னிரு திருமுறை வரலாறு (இரு தொகுதிகள்); தில்லைப் பெருங்கோயில் வரலாறு; திருவருட்பாச் சிந்தனை; தேவார அருள்முறைத் திரட்டுரை; திருமந்திர அருள்முறைத் திரட்டுரை; திருவருட்பயன் விளக்கவுரை; காக்கை விடு தூது; இசைத்தமிழ்; அற்புதத் திருவந்தாதி; சைவ சித்தாந்த சாத்திர வரலாறு; திருத் தொண்டர் வரலாறு போன்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்துள்ளார் !

சிறப்புகள்:

சித்தாந்தச் செம்மல்”, ”தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோர்”, ”திருமுறை உரைமணி”, “செந்தமிழ்ச் சான்றோர்”, “தமிழ் மாமணி”, “சிவகவிமணி”, “திருமுறைத் தெய்வமணி”, “தமிழ்ப் பேரவைச் செம்ம்ம்ள்போன்று பல பட்டங்களையும் விருதுகளையும் பல்வேறு அமைப்புகள் இவருக்கு வழங்கியுள்ளன

மறைவு:

இவர் தனது இறுதிக் காலத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார். அபோது அவருக்கு உடல் நலம் குன்றியது. அதனால் தில்லை (சிதம்பரம்) சென்று அங்கே தங்கி வாழ்ந்து வந்த போது 1988 –ஆம் ஆண்டு, சூன் மாதம், 13 –ஆம் நாள், தமது 72 –ஆம் அகவையில் தமிழ்த் தாயிடவிருந்து விடைபெற்று, இப்பூவுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார்

முடிவுரை:

எத்துணையோ அறிஞர்கள் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர்அறிவுலகம் போற்றும் ஆயிரக் கணக்கான நூல்களையும் அளித்துள்ளனர். அவர்கள் எல்லோருள்ளும் இவர் தனது அழகிய தமிழ்ப் பெயரால் தனித்து நிற்கிறார். இளம் அகவையிலேயே தனது பெயரை :வெள்ளை வாரணன்என்றி மாற்றிக் கொண்டார் போலும் ! அதனால் இவரது இயற்பெயர் என்னவென்று அறிய இயலவில்லை. வெள்ளை வாரணனார்பொற்றடங்கண்ணி என்னும் இந்த தமிழ் இணையரின் பெயர்கள் நம் உள்ளத்திலும் தமிழ் உணர்வை ஊட்டி எழுப்புமா ? காலம் தான் விடை சொல்ல வேண்டும் !


-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051, சுறவம் (தை),25]
{08-02-2020}

------------------------------------------------------------------------------------------------------------




 























தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற





















 கட்டுரை ! 


 



 

 

 





 


-----------------------------------------------------------------------------------------------------------



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .