name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (32) திருவின் திறலுடையது இல்லை !

வெள்ளி, அக்டோபர் 15, 2021

நான்மணிக்கடிகை (32) திருவின் திறலுடையது இல்லை !

 

விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் படைத்த இலக்கியம் நான்மணிக்கடிகை !  ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளை எடுத்துச் சொல்கிறார். அவை ஒவ்வொன்றும் முத்து முத்தான கருத்துகள். உயர்நிலைப் பள்ளி அளவிலேயே இந்தக் கருத்துகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் ! இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (32)

----------------------

 

திருவின்  திறலுடைய  தில்லை  -  ஒருவற்குக்

கற்றலின்  வாய்த்த  பிறவில்லை  -  எற்றுள்ளும்

இன்மையின்  இன்னாத  தில்லையில்   லென்னாத

வன்மையின்  வன்பாட்ட தில்.

-------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-- --------------------------------------

 

திருவின்   திறலுடையது   இல்லை   -  ஒருவற்குக்

கற்றலின்   வாய்த்த   பிறஇல்லை  -  எற்றுள்ளும்

இன்மையின்   இன்னாதது   இல்லைஇல்   என்னாத

வன்மையின்   வன்பாட்டது  இல்.

-------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

------------

 

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குச் செல்வத்தைப் போல்  வலிமை உடையது  வேறொன்றும் இல்லை !

 

துளக்கமறக் கற்ற கல்வி அறிவைப் போல உற்ற நேரத்தில் அவனுக்குப் பயன் தருவதும் வேறில்லை !

 

வறுமையைப் போல்  மனிதனுக்குத்  துன்பம்   தருவதும்  இவ்வுலகில்  வேறு எதுவும்  இல்லை !

 

அதைப்போல, எந்தச் சூழ்நிலையிலும்  இரவலர்களுக்கு  இல்லைஎன்று சொல்லாத  மனவுறுதியைப்  போல்  திட்பமானதும்  வேறு  இல்லை !

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

------------------------------

ஒருவற்கு = ஒருவனுக்கு ; திருவின் = செல்வத்தைப் போல ; திறல் உடையது = வலிமை உடையது ; இல்லை = பிறிதில்லை; கற்றலின் = கல்வியறிவைப்போல் ; வாய்த்த = உற்ற நேரத்தில் பயன் தருவது ; பிற இல்லை = வேறு இல்லை; எற்றுள்ளும் = எதனுள்ளும் ; இன்மையின் = வறுமையைப் போல் ; இன்னாதது = துன்பமுடையது ;  இல்லை = வேறு யாதுமில்லை ; இல் என்னாத = இரப்பார்க்கு இல்லை என்னாத ; வன்மையின் = மனவுறுதியைப் போல் ; வன்பாட்டது = திட்பமானது ; இல் = வேறு இல்லை.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

----------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .