name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (34) பிணியன்னர் பின் நோக்காப் பெண்டிர் !

வெள்ளி, அக்டோபர் 15, 2021

நான்மணிக்கடிகை (34) பிணியன்னர் பின் நோக்காப் பெண்டிர் !

 

சங்க கால இலக்கியமான நாண்மணிக் கடிகையில் கடவுள் வாழ்த்து உள்பட 106 வெண்பாக்கள் உள்ளன.  கடவுள் வாழ்த்து நீங்கிய பிறபாடல்கள் ஒவ்வொன்றிலும் நந்நான்கு கருத்துகள் எடுத்துரைக்கபடுகின்றன. இதிலிருந்து ஒரு பாடல் இதோ !

---------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (34)

--------------------------

 

பிணியன்னர் பின் நோக்காப் பெண்டிர் உலகிற்கு

அணியன்னர் அன்புடை  மாக்கள்பிணிபயிரின்

புல்லன்னர்  புல்லறிவின் ஆடவர்கல்லன்னர்

வல்லென்ற நெஞ்சத்  தவர்.

 

---------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

வரவுக்கு மேல் செலவு செய்து தன் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கருதிப் பார்க்காத மனைவி, கணவனுக்கு  நோய்க்கு ஒப்பானவள் !

 

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி  அவற்றை  நேசிக்கும் நன்மக்கள் இந்த உலகத்திற்கு மதிப்பு மிக்க அணிகலனுக்கு ஒப்பாவர் !

 

அறியாமை நிறைந்த  ஆண்மக்கள், வளரும் பயிரினைச் சூழ்ந்து கொண்டு அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்  களைகளுக்கு ஒப்பாவர் !

 

அதுபோல், பரிவுணர்வு இல்லாத  வன்மையான நெஞ்சத்தை உடையவர், இளக்கமற்ற கொடிய கல்லுக்கு ஒப்பாவர் !

 

---------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------------

 

பின் = பின் வருவது  பற்றி ; நோக்காப் பெண்டிர் = கருதிப் பார்க்காத மனைவி ; பிணி அன்னர் = அவள் கணவனுக்கு நோய்க்கு ஒப்பாவாள் ;  அன்பு உடை மாக்கள் = எல்லா உயிர்களிடத்திலும் அன்புடைய நன்மக்கள் ; உலகிற்கு = உலகத்திற்கு ; அணி அன்னர் = அணிகலனுக்கு ஒப்பானவர் ;  புல் அறிவின் = சிற்றறிவுடைய ; ஆடவர் = ஆண்மக்கள் ; பயிரின் = வளரும் பயிரினைச் சூழ்ந்த ; பிணி புல் அன்னர் = வளர்ச்சியைத் தடுக்கும் களைப் புல்லுக்கு ஒப்பானவர் ; வல் என்ற = வன்மையான ; நெஞ்சத்தவர் = நெஞ்சத்தை உடையவர் ; கல் அன்னர் = கல்லுக்கு ஒப்பாவார்.

 

----------------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------

 

வருவதறியா பெண்டிர், நோய்க்கு ஒப்பாவர்; அன்புடை மக்கள் அணிகலனுக்கு நிகராவர்; புல்லறிவை உடைய ஆடவர்கள் புல்லுக்கு நேராவர்; வன்னெஞ்சமுடையவர் கல்லுக்கு இணையாவர்.

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .