name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக் கடிகை (20) மனைக் காக்கம் மாண்ட மகளிர் !

புதன், ஜூன் 30, 2021

நான்மணிக் கடிகை (20) மனைக் காக்கம் மாண்ட மகளிர் !

 

முற்றிலும் வெண்பாக்களால் ஆன 106 பாடல்களைக் கொண்ட நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! கி.பி 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய  இந்நூலை விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் படைத்துள்ளார். அதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (20).

-------------------------------------------------------------------------------------------------

 

மனைக்காக்கம்  மாண்ட  மகளிர்;  ஒருவன்

வினைக்காக்கஞ்  செவ்விய  னாதல்  -  சினச்செவ்வேல்

நாட்டாக்கம்  நல்லனிவ்  வேந்தென்றல்  கேட்டாக்கம்

கேளிர்  ஒரீஇ  விடல்.

 

-------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------------

 

மனைக்குஆக்கம்  மாண்ட  மகளிர்;  ஒருவன்

வினைக்குஆக்கம்  செவ்வியன்  ஆதல்;  -  சினச்செவ்வேல்

நாட்டுஆக்கம்  நல்லன்  இவ்வேந்து  என்றல்;  கேட்டுஆக்கம்

கேளிர்  ஒரீஇ விடல்.

-------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

நற்பண்புகளும்  நல்லியல்புகளும்    நிறைந்த   பெண்மக்களைப் பெற்றிருத்தல்    ஒரு ஆடவனின்  இல்லற வாழ்வுக்கு  உயர்வைத் தரும் !

 

வீரனொருவன் படைப்பயிற்சியில்  தேர்ச்சி உடையவனாய் இருத்தல் போர் முதலிய ஆள்வினைகட்கு மிகுந்த உயர்வைத் தரும் !

 

நாடாளும் வேந்தன்  நல்லவன் என்று குடிமக்களால் பாராட்டப்படுதல், அந்த   நாட்டுக்கு உயர்வை தரும் !

 

அதுபோல், சுற்றத்தாரைச் சுமையாக எண்ணி அவர்களைத் தன்னிடம் அண்டவிடாமல் விலக்கி வைத்தல் ,   மனிதனின் கேட்டுக்கு வழிவகுத்துவிடும் !

-----------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------

மாண்ட மகளிர் = பெருமைப்படத் தக்க  பெண்மக்கள் ;  மனைக்கு ஆக்கம்= மனை வாழ்வுக்கு உயர்வைத் தரும்; ஒருவன்=வீரன் ஒருவன்; சினச் செவ்வேல்= கூரிய வேல்; செவ்வியன் ஆதல் = தேர்ச்சி உடையவன் ஆதல்; வினைக்கு ஆக்கம்= போர் முதலிய  வினைகளுக்கு உயர்வு தரும் ; இவ்வேந்து = இந்த அரசன்; நல்லன் என்றல் = நல்லவன் என்று குடிமக்களாற் பாராட்டப் பெறுதல்; நாடு ஆக்கம் = நாட்டுக்கு உயர்வு தரும்; கேளிர்=சுற்றத்தார்; ஒரீஇ விடல்= விலக்கி விடுதல்; கேடு ஆக்கம் = கேட்டுக்கு வழி வகுக்கும்.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி),16]

{30-06-2021}

----------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .