name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (19) பொய்த்தல் இறுவாய நட்புக்கள் !

வெள்ளி, மார்ச் 05, 2021

நான்மணிக்கடிகை (19) பொய்த்தல் இறுவாய நட்புக்கள் !

இளமையின் வனப்பு, ஈர்ப்பு எல்லாமே நிலையற்றவை !
 

ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் நான்மணிக் கடிகை என்னும் பெயர் பெற்று விளங்கும் இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் ! பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த  இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இருக்கின்றன ! அவற்ருள் ஒரு பாடல் இதோ !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (19).

-----------------------

 

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்  மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்  திளைநலந்   தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்  தத்தம்

தகுதி  இறுவாய்த்  துயிர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------------------------

 

பொய்த்தல்  இறுவாய  நட்புக்கள்மெய்த்தாக

மூத்தல்  இறுவாய்த்து  இளைநலம்தூக்கில்

மிகுதி  இறுவாய  செல்வங்கள்தத்தம்

தகுதி  இறுவாய்த்து  உயிர்.

 

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

 

ஆராய்ந்து பார்த்தால், நமது கேண்மைகள் (நட்புகள்) எல்லாம் பொய்மை ஒழுக்கம் புகும்போது கெட்டு அழிந்து  போகின்றன !

 

இளமையின் வனப்பு (அழகு),  துடிப்புஈர்ப்பு எல்லாமே நம் வாழ்நாளில் நம் கண்ணுக்கு எதிரிலேயே மூப்பினால் சிதைந்து போகின்றன  !

 

ஆசைக்கு ஆட்பட்டு அகலக் கால் வைத்தால்எத்துணைச் செல்வம் இருந்தாலும்அவை   எல்லாம்  கெட்டழிந்து போகின்றன !

 

அதுபோல், மனிதர்களின்   உயிர்  என்பது அவர்களது வாழ்நாள் என்னும் எல்லையின் இறுதியை அடையும் போது  அவர்களை விட்டுப் பிரிந்து விடுகிறது !

 

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------

நண்பர்கள் தமக்குள் பொய்யொழுக்கம் புகும்போது, அவர் நட்புக் கெடும்மூப்புத் தோன்றியதும், இளமை நலம் கெடும்; மீறிய செயல்களைத் தொடங்கியதும்  செல்வம் கெடும்; வாழ்நாள் எல்லையை அடைந்ததும் உயிர் பிரிந்து விடும் !

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

 

தூக்கில் = ஆராந்து பார்த்தால்; நட்புகள் = நேசங்கள் ; பொய்த்தல் இறுவாய = பொய்யொழுக்கமாகிய இறுதியை உடையன; இளைநலம்= இளமையின் அழகு; மெய்த்தாக = கண்ணுக்கு நேராக ; மூத்தல் இறுவாய்த்து = மூப்பாகிய இறுதியை உடையது; செல்வங்கள்= பொருட்செல்வமும் செல்வாக்கும்; மிகுதி இறுவாய = மிகையான செயல்களை இறுதியாக உடையன; உயிர்=மக்கள் உயிர்; தத்தம் தகுதி இறுவாய்த்து= தத்தமது வாழ்நாள் எல்லையை இறுதியாக உடையது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

-------------------------------------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .