name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (17) இன்னாமை வேண்டின் இரவெழுக !

வெள்ளி, மார்ச் 05, 2021

நான்மணிக்கடிகை (17) இன்னாமை வேண்டின் இரவெழுக !

பாதுகாப்பான  வாழ்க்கைக்கு  அறச் செயல்களே  அரணாகும்  !

---------------------------------------------------------------------------------------------------------

நாகனார் என்னும் பெரும்புலவர் விளம்பி என்னு ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் விளம்பி நாகனார் என அவர் அழைக்கப்படுகிறார் ! இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய  நான்மணிக்கடிகை என்னும் நூல் பல அரிய கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கிறதுஅதிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (17)

-----------------------

 

இன்னாமை வேண்டின் இரவெழுக; இந்நிலத்து

மன்னுதல் வேண்டின்  இசைநடுக; - தன்னோடு

செல்வது வேண்டின்  அறஞ்செய்க;  வெல்வது

வேண்டின்  வெகுளி விடல்.

 

----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

 

இழிவானவன் என்னும்  பெயரைத்  தேடிக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ அவன் தன்னிடம் போதுமான செல்வம் இருந்தும் கூட பேராசை மீக்கூரப்  பிச்சை எடுக்கும் தொழிலை  மேற்கொள்ளலாம் !

 

இந்த உலகத்தில் என்றென்றும்  நிலைபெற்று  விளங்குதலை எவனொருவன் விரும்புகிறானோ, அவன் புகழ் விளைக்கும்  செயல்களை மேற்கொள்ளலாம் !

 

தான் செல்லுமிடமெல்லாம் தனக்குத் துணையாக ஒரு பாதுகாப்புக் கவசம்  தேவை  என்று எவனொருவன் விரும்புகிறானோ, அவன் அறச் செயல்களில்  ஈடுபடுவதை மேற்கொள்ளலாம் !

 

அதுபோல், பிறரை வெற்றி கொண்டு தன்பால் ஈர்த்துக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ, அவன் சினம் (கோபம்) கொள்வதை  முற்றிலுமாக விட்டுவிடல் வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

இன்னாமை வேண்டின் = இழிவை ஒருவன் விரும்பினால் ; இரவு எழுக = இரந்து (பிச்சை எடுத்து) உண்பதை மேற்கொள்க ;  இந்நிலத்து = இவ்வுலகில் ;மன்னுதல் வேண்டின் = நிலையான பெயர் பெற்று விளங்க விரும்பினால் ; இசை நடுக = புகழ் தரும் செயல்களில் ஈடுபடுக ; தன்னோடு செல்வது வேண்டின் = தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால் ;  அறம் செய்க = அறச் செயல்களை மேற்கொள்க ;  வெல்வது வேண்டின் = பிறரை வெல்ல விரும்பினால் ; வெகுளி விடல் = சினம் (கோபம்) கொள்வதை விட்டுவிடுக.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

---------------------------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .