name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (18) கடற்குட்டம் போழ்வர் கலவர் !

வெள்ளி, மார்ச் 05, 2021

நான்மணிக்கடிகை (18) கடற்குட்டம் போழ்வர் கலவர் !

மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன்    யார் ?


பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப் பெற்ற இலக்கியங்களைத் தவிர்த்து, எஞ்சிய பல இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வகைப்படுத்தப் பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்று தான் நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் இந்நூல் நான்மணிக் கடிகை என வழங்கப்பெறுகிறதுஇதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (18).

-----------------------------

கடற்குட்டம்  போழ்வர்  கலவர்  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்குந்  -  தோமில்

தவக்குட்டந்  தன்னுடையான்  நீந்தும்  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------

 

கடல்குட்டம்  போழ்வர்  கலவர்;  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்கும்;  -  தோம் இல்

தவக்குட்டம்  தன்உடையான்  நீந்தும்;  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

குட்டம் = ஆழம்;  ஆழம் உடைய கடல்

-------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

படகு, தோணி, நாவாய்,  போன்ற மரக்கலம்  உடையவர்கள்  ஆழமான கடலாக இருந்தாலும் கூட, அதன் நீரைப் பிளந்து கொண்டு செல்வார்கள் !

 

காற்று போல் கடிது செல்லும் படைக் குதிரையை உடைய வீரன், பகைவரது படை என்னும் கடலின் கரையை  உடைத்துக் கொண்டு செல்வான் !

 

மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன், குற்றங் குறைகளற்ற தவம் என்னும் ஆழ்கடலை  நீந்திக் கரையேறுவான் !

 

அதுபோல், தெள்ளத் தெளிவாகக் கல்வி கற்றவன், கற்றறிந்த அறிஞர்கள் நிறைந்த  அவை என்னும் ஆழ்கடலை எளிதில் எதிர்கொண்டு கடந்து செல்வான் !

-------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

கலவர் = மரக்கலம் உடையவர் ; கடல் குட்டம் = கடலின் ஆழமான நீரை ; போழ்வர் = பிளந்து செல்வர் ; பாய்மா உடையான் = காற்று போல் கடிது செல்லும் வலிமையான குதிரையை உடைய வீரன் ; படைக்குட்டம் = படை என்னும் ஆழ்கடலின் கரையை ; உடைக்கிற்கும் = போரிட்டு உடைத்து விடுவான் ; தன் உடையான் = தன் மனதைத் தன்வயப்படுத்தியவன் ; தோம் இல் = குற்றமில்லாத ; தவக்குட்டம் = தவம் என்னும் ஆழ்கடலை ; நீந்தும் = நீந்திக் கரையேறுவான் ; கற்றான் = தெளியக் கற்றவன் ; அவைக்குட்டம் = கற்றறிவுடையோர் நிரம்பிய  அவை என்னும் கடலை ; கடந்துவிடும் = எதிர்கொண்டு கடந்து செல்வான்.

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),21]

{05-03-2021}

-------------------------------------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .