name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (13) கன்றாமை வேண்டும் கடிய !

வியாழன், மார்ச் 04, 2021

நான்மணிக்கடிகை (13) கன்றாமை வேண்டும் கடிய !

மன வயிரம் கொள்ளல் மாண்பு தராது !

-------------------------------------------------------------------------------

முற்றிலும் வெண்பாக்களால் யாக்கப் பெற்ற நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106  செய்யுள்கள்  உள்ளன . கடைச்சங்க காலத்ததான இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு வகையைச் சார்ந்தது ! இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (13).

-----------------------------------------------------------------------------------------------------------

 

கன்றாமை வேண்டுங்  கடிய  பிறர்செய்த

நன்றியை நன்றாக்  கொளல்வேண்டும்என்றும்

விடல்வேண்டுந்  தங்கண்  வெகுளி  அடல்வேண்டும்

ஆக்கஞ்  சிதைக்கும் வினை.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

 

பிறர் செய்கின்ற அஞ்சத்தக்கக, கடுஞ் செயல்களை நினைந்து நினைந்து மனதில் கறுவாமை  (மன வயிரம் கொள்ளாதிருத்தல்) வேண்டும் !

 

பிறர் செய்யும் நன்மைகளை மறவாமல் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் !

 

தம்மிடம் உண்டாகும்  பெரும் சினத்தை  வளரவிடாமல் மனதைவிட்டு நீக்குதல் வேண்டும் !

 

அதுபோல், முற்போக்கான பயன் தரும் செயல்களைக் கெடுத்து  அழித்துவிடும் தவறான  முனைவுகளை முற்றாக ஒழித்துவிட வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------------------அருஞ்சொற்பொருள்:

------------------------------------

 

கன்றாமை = நினைத்து நினைத்துப் புழுங்கி மன வயிரம் கொள்ளாதிருத்தல்; கடிய = பிறர் செய்யும் அஞ்சத்தக்க கடுஞ் செயல்களை ; நன்றாக் கொளல் = மறவாமல் நினைவில் இருத்துதல்; விடல் வேண்டும் = விட்டுவிட வேண்டும்; வெகுளி = பெருஞ்சினம்;  அடல் வேண்டும் = ஒழித்தல் வேண்டும்; ஆக்கம் = முற்போக்கான பயன் தரும் செயல்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),20]

{04-03-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

கன்றாமை வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .