name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (57) (2015) எங்கள் கண்களில் நீரில்லை ! (சென்னை வெள்ளம்)

வெள்ளி, நவம்பர் 01, 2019

கவிதை (57) (2015) எங்கள் கண்களில் நீரில்லை ! (சென்னை வெள்ளம்)


        கொத்து (01)                                                              மலர் (059)
-------------------------------------------------------------------------------------------------------
                      கடந்த 2015 டிசம்பர் திங்களில் சென்னையில்    
                             ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால்
                      மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைத்து
               தமிழ்ப் பணி மன்றம்  முகநூலில்  நான் எழுதிய கவிதை !
                                                             (9-12-2015)

--------------------------------------------------------------------------------------------------------

               எங்கள் கண்களில் நீரில்லை !!

----------------------------------------------------------------------------------------------
               மழையே ! மழையே ! மாமழையே ! – தமிழ்

                            மக்களை வாட்டிய மாமழையே !
                
                அழையா விருந்தாய் ஏன்வந்தாய் ? – இங்கு
                      
                            ஆத்திரம் உனக்கு யார்மீதோ ?
               
                 பிழைகள் செய்தோர் பெருநரிகள்அவர்
                     
                             பிருந்தா வனத்தில் உலவுகிறார் !
                
                 ஏழைகள் உடைமை உயிருடலைகீண்டு
                      
                             ஏன்தான் விழுங்கி மகிழ்ந்தாயோ ?

                

                  
                  நீர்நிலை எல்லாம் வீடுகளாய்இன்று
                      
                              நிற்பதன் காரணம் ஏழைகளா ?
                
                 தூர்ந்து மறைந்தன நீர்வழிகள் ! – அதில்
                      
                              தோன்றிய கட்டடம் யார்நிதியம் ?
                
                 சோர்ந்து மயங்கிய ஏழைகளைஇன்று
                      
                               சுமைதாங் கிகளாய் மாற்றினையே !
                
                 போர்க்களம் போலவே ஆனதடி ! – நீ
                      
                              புண்செய லாமோ தமிழ்நாட்டை ?

                வீடுகள் சிறைபோல் ஆகினவே ! – நகர்
                      
                             வீதிகள் ஆறாய் மாறினவே !
                
                 கூடுகள் இல்லாப் பறவைகளாய்பலர்
                      
                             குளிரில் தெருவில் குமுறுகிறார் !
                
                 ஈடிணை இல்லாப் பேரழிவால்இன்று
                     
                             எங்கள் தமிழினம் வாடுதுகாண் !
                
                  ஆடிய ஊழித் தாண்டவமே ! – இனி
                      
                             அடங்கிடு ! போதும் ! போதுமடி !

                


                  மக்களை இனியும் வருத்தாதே ! – எமன்
                      
                            மடியில் அவர்களை வீழ்த்தாதே !
                
                  தக்கார் தகவிலர் தெரியாதோ ? – உன்
                      
                            தண்ணளி எங்கே போனதடி ?
               
                  பக்குவ மாகநீ விலகிவிடு ! – எமை
                     
                            பங்கப் படுத்துதல் முறையில்லை !
               
                   இக்கண மேநீ விலகிவிடு ! – இனி
                      
                            எங்கள் கண்களில் நீரில்லை !

------------------------------------------------------------------------------------------------------
                                   ஆக்கம் + இடுகை,
                                வை.வேதரெத்தினம்,
                                  [veda70.vv@gmail.com]
                                            ஆட்சியர்,
                               தமிழ்ப் பணி மன்றம்,
                                             09-12-2015        

-----------------------------------------------------------------------------------------------------       


4 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா
    கவிதை பலரது கண்ணீர்களின் ரணத்தை வடித்து இருந்தது.
    இதை அருமை என்று வாழ்த்த இயலாது காரணம் "பொருள்" அப்படி.

    நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது தளத்தில் தங்களது கருத்தை கண்டு மகிழ்ந்தேன்.

    எவ்வளவோ நபர்கள் கருத்துரை தந்து இருந்தாலும் எனது கருத்தை ஒட்டி யாரும் கருத்துரை தரவில்லையே என்ற ஆதங்கத்தை தங்களது கருத்து தணித்தது மிக்க நன்றி ஐயா.

    (ஆனால் முனைவர் ஐயா அ. கோவிந்தராஜூ அவர்கள் எனது கருத்தை வழி மொழிந்து இருந்தார்கள் அவர்களுக்கும் நன்றிகள் பல)

    நட்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ! நமக்கு அறிவையும் ஆற்றலையும் வாரி வழங்கி இருக்கும் தமிழுக்கு நாம் என்ன நன்றிக் கடன் செலுத்திட முடியும் - மொழி வளர்ச்சிக்கு நமது உழைப்பை நல்குவதை விட ? தொடர்ந்து தங்கள் கருத்துரைகளைப் பதிவு செய்து வாருங்கள் !

      நன்றி மற்றும் நட்புடன்,
      வை.வேதரெத்தினம்.

      நீக்கு
  2. கவிதை புனையும் வல்லமையும் விழிப்புணர்வுக்
    கட்டுரை எழுதும் பக்குவமும் கதையில்
    காட்டும் மொழியாளுமையும் தமிழுக்கு
    ஊட்டும் அமுதன்றி வேறெதுவாக இருக்க முடியுமய்யா!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கருத்துரைகள் எனது ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறது; மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ! மிக்க நன்றி ! ”இவ்வாறு கருத்துரை இடு” என்பதற்கு அருகில் கறுப்பு நிற முக்கோணக் குறி தெரிகிறதல்லவா ? அதைச் சொடுக்குங்கள் ! அந்தப் பெட்டி விரிவடையும் ! அதில் பெயர் / URL என்று உள்ள இடத்தின் உங்கள் பெயரைப் பதிவு செய்தபின், “வெளியிடு” என்பதை சொடுக்குங்கள். கருத்துரைஇ எழுதும் உங்கள் பெயர் பதிவாகிவிடும். பெயருடன் கருத்துரை எழுதுவதை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .