name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: விழிப்புமை
விழிப்புமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2021

சிந்தனை செய் மனமே (83) வெறுப்புணர்வு விலகும் காலம் வாராதா ?

 

விடலைப் பிள்ளைகளின் மனதில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தும் திரைப்படங்கள் !

அன்பு, அமைதி, அடக்கம், அறிவுடைமை, வெகுளாமை, நல்லொழுக்கம், இன்மொழி ஆகியவை மனிதன் என்னும் சொல்லுக்கு இலக்கணமாக அமையும் பண்புகள் ! இவற்றில் எந்தவொன்று குறைந்தாலும் அவன் முழுமையான மனிதனாக மாட்டான் !


இந்தப் பண்புகளை இளமையிலேயே கற்றுத் தரவேண்டியவை பள்ளிக் கூடங்கள் ! ஆனால் இக்காலக் கல்விக் கொள்கையும் செயல் திட்டங்களும் தன் அடிப்படைத் தடத்திலிருந்து புரண்டு, திசை தவறித் தொலைவாகப் போய்விட்டன. இக்கால மாணவர்கள், தம் வாழ்விடச் சூழலுக்கு ஏற்ப, தாமாகவே சிலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்பவற்றுள் நல்லனவும் உள்ளன; தீயனவும் இருக்கவே செய்கின்றன !


இளமைப் பருவத்தில் இருப்பவர்களைத் தம்பால் ஈர்க்கும் புறவுலகக் காரணிகள் நிரம்பவே இருக்கின்றன. அவற்றுள் பெரும் பங்கு வகிப்பது திரைப்படங்கள் ! இன்றைய திரைப்படங்கள் காதல்என்னும் ஒற்றை அடிக்கல்லின் மீது எழுப்பப் படும் அருவருப்பு மாளிகைகளாகத் திகழ்கின்றன. அடிக்கல்லை உருவிவிட்டால், கட்டடமே சரிந்து வீழ்ந்துவிடும் !


வாழ்வில் காதல் என்பது ஒரு சிறு பகுதி. இதற்கு அப்பாலும் பல நிகழ்வுகள் மனித வாழ்வில் நடை பெறுகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, “காதல்என்னும் மின்மினிப் பூச்சியை மட்டுமே பேசு பொருளாகக் கொண்டு எடுக்கப்படுகின்ற திரைப்படங்களின் எண்ணிக்கை இலக்கக் கணக்கில் (இலட்சக் கணக்கில்) பெருகி வருகின்றன !


நடைமுறை வாழ்வில் எந்தவொரு ஆணும் பெண்ணும், ஆற்றங்கரையிலும், அடர்ந்த காடுகளிலும், கடற்கரைகளிலும் மலை முகடுகளிலும் ஆடிப் பாடுவதும், அருவருப்பாகக் கட்டிப் பிடிப்பதும் நாம் காண முடியாத காட்சிகள் ! கட்டிப் பிடி, கட்டிப் பிடிடா, என்னைக் கண்டபடிக் கட்டிப் பிடிடாஎன்று ஓடியம் (OBSCURE) நிறைந்த பாடல் வேறு !


முகைப் பருவம் (TEEN - AGE) என்பது இயற்கையாகவே பாலுணர்வுகள் கிளர்ச்சி அடைகின்ற பருவம். இப்பருவத்தில், விடலைப் பிள்ளைகளின் மனதில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தும் திரைப்படங்களை நம் வீட்டு நடுக்கூடம் வரைக் கொண்டு வந்து சேர்ப்பதில் தான் தொலைக் காட்சி ஊடகங்களுக்குள் எத்துணைப் போட்டி !


பதினைந்து அகவைப் பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடப் பாடங்களைச் சொல்லித் தந்தால், பிள்ளைகளின் எதிர்காலமும் வளம்பெறும்; நாடும் நலம் பெறும் ! ஆனால் காசு வெறி பிடித்த கயவர்களின் கைகளில் சிறைப்பட்டுக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், காதலைப் பற்றிய காட்சிகளை மட்டுமே காட்சிப் படுத்தும் திரைப்படங்களைக் காட்டி அவர்களைப் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப் போக வைத்து விடுகின்றன !


இரண்டடி நீளக் குச்சியின் முனையில் சுவைக்கும் கோந்தினை (SEWING GUM) பிணித்து வைத்துக் கோயில் உண்டியலில் நுழைத்து பணத்தாள்களை வெளியில் எடுக்கும் திருட்டுக் கலையைச் சொல்லித் தந்தது ஒரு திரைப்படம். அதைப் பார்த்து அப்படியே செய்து காவலர்களிடம் மாட்டிக் கொண்டு கம்பி எண்ணுகிறான் ஒரு கயவன் ! மாட்டிக் கொண்ட கயவனை மறந்துவிட்ட மக்கள் , சொல்லித் தந்த கயவனை மறவாமல் நினைவில் வைத்துக் கொண்டு , “ஆகா ! ஓகோஎன்று நாள்தோறும் கொண்டாடி மகிழும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது ?


எப்படியெல்லாம் களவாணித்தனம் செய்வது என்பதைக் கற்றுக் கொடுக்கும் திரைப்படங்களுக்கு நம் நாட்டில் கட்டுப்பாடே கிடையாது. முத்தக் காட்சிகளைப் படத்தில் திணித்துப் பண்பாட்டுச் சீர்குலைவைப் பத்து அகவைச் சிறுவனுக்கும் கற்றுக் கொடுக்கும் பரமக்குடிப் பாண்டை மனிதர்கள் இப்போது அரசியலிலும் கால்பதித்துப் பகட்டுக் காட்ட முனைந்திருக்கிறார்கள் !


நான் உன்னை லவ் பண்றேன்” ” ஐ லவ் யூடா”, ” இந்த Figure எனக்கு work out ஆகுமாஎன்பன போன்ற கேவலமான சொற்கள் இடம்பெறாமல் எந்தத் திரைப்படமாவது வெளியாகிறதா ? “First Night” என்னும் சொல், உரையாடலில் இல்லாமல் நடிகர்கள் தோன்றும் காட்சி எந்தப் படத்திலாவது இருக்கிறதா ?


ஐந்து அகவை குழந்தை தன் தந்தையிடம் கேட்கிறது ,”அப்பா ! அந்த அங்கிள் First Night என்கிறாரே ! அப்படியென்றால் என்ன? “ இது தான் திரைப்படங்கள் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் நல்லொழுக்கப் பாடம். இத்தகைய படங்களை எடுக்கும் பன்றிக் கூட்டங்களையும் , காசுக்காக அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகையரையும் விளக்குமாற்றால் விளாசும் காலம் தமிழ்நாட்டில் வரவே வராதா ?


திரைப்படத்துறை என்பது இன்று கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டது ! ஒழுக்கமுள்ள மனிதர்கள் மழைக்குக் கூட ஒதுங்க முடியாத கறுப்பு உலகமாகக் காட்சி அளிக்கிறது ! பணம் ! பணம் ! பணம் !” என்று பேயாக அலைகின்ற பித்தர்களின் முதலீட்டுத் தொழிலகமாகச் செழித்து வளர்ந்து நிற்கிறது !


130 கோடி மக்கள் வாழ்கின்ற நம் நாட்டில் , அன்றாடம் உழைத்தால் தான் வயிறு நிரம்பும் என்ற நிலையில் 60 % மக்கள் இருக்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்க்கைத் தரம் படைத்த மக்கள் நிரம்பவும் இருக்கின்ற ஒரு நாட்டில் திரைப்படம் என்னும் பொழுதுபோக்குக் கேளிக்கைக் கூத்துகள் தேவைதானா ?


அரசியலின் அடிப்படை நோக்கம் என்னவென்பதை அறியாத தேநீர்க்கடை வணிகர்கள் எல்லாம் நமக்குப் பொருளாதாரம் கற்றுக் கொடுக்க முனைந்து முன்வருகிறார்கள். யார் யார் எந்தப் பதவிக்குத் தகுதி படைத்தவர்கள் என்னும் கோட்பாட்டை பளிச்சென்று பகர்ந்திடாத சட்டங்களும், அவற்றை ஏந்தி நிற்கும் சட்டப் புத்தகங்களும் கயவாளிகளையும், களவாணிகளையும் அரசியல் அரங்கினுள் இழுத்து வந்து நிறுத்தி வைத்திருக்கின்றன !


கொரோனாவின் கொடிய தாண்டவத்தால் எத்தனை அல்லற்பட்டாலும், எத்தனை உறவினர்களையும் நண்பர்களையும் இழந்திருந்தாலும், அறிவை அடகு வைத்துவிட்டு, மீன் சந்தைகளிலும், துணிக் கடைகளிலும், ஐந்து பைசா ஊன்சோறு (பிரியாணி) விற்பனைக் கடைகளிலும் முட்டி மோதி முண்டியடித்து முன்னே செல்ல முயலும் முட்டாள்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை !


மக்களை நெறிப்படுத்தி, ஒழுங்கு தவறாமல் ஆட்சி செய்ய வேண்டிய அரசியல் ஆளிநர் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. பொழுது விடிந்தால், இன்று என்ன நல்ல திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கலாம் என்று சிந்திக்க வேண்டியஅறிஞர்கள்கூட்டம் இன்று எந்த மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கலாம்என்று சிந்திக்கிறது ! ஆட்பிடிப்புஅரசியலை நடத்தி, தங்களை அழுக்கு மனிதர்களாகக் காட்சிப் படுத்திக் கொள்ள அஞ்சுவதில்லை !


நாட்டில் நடக்கும் இத்தகைய அவலங்களைப் பார்க்கக் கண்கள் கூசுகின்றன ! மக்களாட்சிக் கோட்பாடு சிதைக்கப்படுவதை நினைத்தால் வெறுப்புதான் விளைகிறது ! நல்லொழுக்கச் சிந்தையுள்ள எந்த மனிதனும்வெறுப்புஎன்னும் சகதியில் வீழ்ந்துவிடாமல் தாண்டிச் சென்று முன்னேற முடியவில்லை !


புதிய விடியல் நம்மை நாடி வருமா ? தீயன அழியுமா ? நல்லன நடக்குமா ? மனிதன் மனிதனாகமாறும் வரை இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கப் போவதில்லை !

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 13]

{29-07-2021}

---------------------------------------------------------------------------------------------

 

சனி, மே 01, 2021

சிந்தனை செய் மனமே (82) மூட நம்பிக்கை நம்மை மூழ்கடித்துவிடும் !

முற்பிறவிதலைவிதி என்பனவற்றை   நம்பாதீர்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

அறிவின் துணைகொண்டு எடுக்கப்படும்  முடிவு நம்பிக்கை !  அறிவைப் பயன்படுத்தாமல், உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு மூடநம்பிக்கை !  இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் தமிழக மக்கள் துன்பப்பட்டு வருகிறர்கள் !

 

மனிதன் ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்க முடிகிறது; ஆனால் ஒரு எல்லைக்கு அப்பால் செல்கையில் அவனால் விடையளிக்க முடிவதில்லை ! உலகம் எப்படித் தோன்றியது ? அவனால் விடையளிக்க முடிகிறது ! உலகத்தில் உயிரினங்கள் எப்படித் தோன்றின ? ஊன்மத்திலிருந்து (PROTOPLASAM) முதல் உயிர் தோன்றி, அதிலிருந்து படிவளர்ச்சி முறையில்  பிற உயிர்கள்  தோன்றின  என்று அவனால் விடையளிக்க முடிகிறது !

 

அந்த ஊன்மம் (PROTOPLASAM) எப்படித் தோன்றியது ? அவனால் விடையளிக்க முடிவதில்லை ! விடையளிக்க முடியாத ஒரு நிலை வரும்போது, அவன் சிந்திக்கிறான் ! ஊன்மம் தோன்றுவதற்கு  நம் அறிவுக்குப் புலப்படாத இன்னொரு ஆற்றல் காரணமாக இருந்திருக்க வேண்டும் ! இப்படிப்பட்ட ஆற்றலுக்கு அவன் கடவுள் என்று பெயர் இட்டான் !

 

விடை தெரியாத ஒவ்வொரு வினாவுக்கும் காரணமாக இருக்கும் அந்த இன்னொரு ஆற்றலே கடவுள் ! இந்த இடத்தில்கடவுள்என்பது ஒரு நம்பிக்கையின் அடையாளம் ! அறிவுக்குப் புலப்படாத அந்தகடவுள்என்னும் நம்பிக்கைமனிதனின் வினாவுக்கான விடை ! அவ்வளவு தான் !

 

அந்தக் கடவுளுக்கு மனிதன் வடிவங்கள் கொடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு மதமும் வெவ்வேறு வடிவங்களைக் கொடுக்கத் தொடங்கின ! பிற மதங்களில், இறைவனுக்குக் கொடுத்த வடிவங்கள் மிகக் குறைவு; ஆனால் இந்து மதத்தில் இறைவனுக்குக் கொடுத்திருக்கும் வடிவங்களுக்கு அளவே இல்லை !

 

இறை நம்பிக்கையை நிலைநிறுத்தப் பண்டை மனிதனுக்கு ஒரு உருவம் தேவைப்பட்டது.  உலகத்தையே உய்விக்கும் வல்லமையுள்ளது  என்பதால் சூரிய வடிவில் இறைவனைக் கண்டான் அன்றைய மனிதன். அடுத்தடுத்துத் தோன்றிய மனித குலம், இயற்கை ஆற்றல்களானதீ”, ”மழைபோன்றவற்றையும் இறைவனின் கூறுகளாக நம்பியது !

 

காலப்போக்கில் மனித குலத்திற்கு அச்சமூட்டும் ஆற்றல்களாக விளங்கும் இடி, மின்னல், போன்றவையும், இறைவனின் கூறுகளாக மனித குலத்திற்குத் தோன்றின.  அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல்களாகத் திகழ்ந்த  தீ, இடி, மின்னல், வெள்ளம், பாம்பு  போன்றவற்றைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன்  அவற்றை அமைதிப் படுத்தினால், தமக்குத் தீங்கு நேராது என்னும் நம்பிக்கையில், அவற்றை வணங்கவும், காய் கனி, உணவு வகைகளை அவற்றுக்குப் படையல் செய்யவும் தொடங்கினான் !

 

அறிவு வளர்ச்சியில், தொடக்க நிலையில் இருந்த அன்றைய மனிதனின் இறை நம்பிக்கைச் செயல்கள், தவறு என்று சொல்ல முடியாது !  காலங்கள் கடந்தன ! அறிவு வளர்ச்சியில் மனிதன் முதிர்ச்சி அடையத் தொடங்கினான். அறிவு வளர வளரக் கற்பனையும் அவனுள் சிறகடித்துப் பறந்தது !

 

தன் கற்பனைக்கு ஏற்பவெல்லாம் இறைவனுக்கு உருவம் கொடுக்கத் தொடங்கியது மனித குலம்.  இறைவனுக்கு முதலில் மனித உருவைக் கொடுத்து வழிபடத் தொடங்கிய மனித குலம், பிறகு நான்கு கைகள், பன்னிரண்டு கைகள், நான்கு முகங்கள், ஆறு முகங்கள், எனப் பல உருவங்களை இறைவனுக்குக் கொடுத்துப்  படைக்கத் தொடங்கியது ! ஒவ்வொரு வேறுபட்ட உருவத்திற்கும்  ஏற்பப் பல்வேறு கதைகளையும் புனைந்து மக்களிடையே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினர் !

 

கற்பனை வளம் கொண்ட மாந்தர்கள் இறைவனுக்குப் பல உருவங்களைக் கொடுத்ததுடன் பல ஊர்திகளையும் (வாகனங்கள்) படைத்தனர். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மனைவி அல்லது பல மனைவிகளையும், பிள்ளைகளையும் படைத்தனர்.  இதன் தொடர்பாகப் பல கதைகளையும் இலக்கியங்கள், தொன்மங்கள் (புராணங்கள்), இதிகாசங்கள் (மறவனப்புகள்) என்ற பெயரில் எழுதிவைத்தனர்.  பல தோற்றரவுகளை (அவதாரங்கள்)  படைத்து மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினர் !

 

கோள்களுக்கு இடையே இருக்கும் ஈர்ப்பு ஆற்றல் போல ஒரு உயர்வான ஆற்றல் உடையவனாகக் கருதப் பட்ட இறைவனை, சராசரி இல்லறவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு மனிதனின் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர் கற்பனை வளம் கொண்ட கதாசிரியர்களும், நூலாசிரியர்களும் !

 

இதைப் பயன்படுத்தி, மக்களில் ஒரு சாரார், கடவுளை வணங்கினால் அவர் மக்களுக்கு வேண்டியதைக் கொடுப்பார் என்றும், அவரை வழிபடக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்றும் பரப்புரை செய்து மக்களிடையே ஒரு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினர் ! மக்களிடம் இறைவன் பற்றி இருந்தநம்பிக்கைஇங்கு தான்மூடநம்பிக்கையாக உருமாற்றம் அடையத் தொடங்கியது !

 

கோயில்கள் நிரம்பவும் எழுந்தன ! அங்கு நிலைநிறுத்தப் பெற்றப் படிமத்தை மக்கள் வழிபடுவதற்குத் தங்கள் உதவி தேவை என்று அவர்கள் அறிவித்தனர்.  தாங்களே பூசாரியாக இருந்து கடவுளிடம் மக்களின் குறைகளை எடுத்துச்  சொல்லி அவற்றைத் தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்வோம் என்றும் அறிவித்தனர். கடவுளின் மொழி சமற்கிருதம் என்றும், சமற்கிருதத்தில் தான் கடவுளிடம் மக்கள் குறைகளை எடுத்துச் சொல்ல முடியும் என்றும் மக்களை நம்ப வைத்ததுடன்,  ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரே பூசாரியாக அமர்ந்து தங்கள் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டனர் !

 

குறிப்பிட்ட வகுப்பைப் சேர்ந்த மக்கள் தான், கோயிலில் பூசாரியாக இருக்க முடியும் என்றும், சமற்கிருதம் வாயிலாகத்தான் கடவுளை வழிபட முடியும் என்றும் பிற வகுப்பைச் சேர்ந்த மக்கள் எப்போது நம்பத் தொடங்கினார்களோ, அப்போது, இரண்டாவது முறையாக கடவுள் மீது வைத்திருந்தநம்பிக்கை”, “மூட நம்பிக்கையாக மாறிப்போனது !

 

கடவுளைப்பற்றி முழுமையாக அறிந்த அறிஞர்கள் கூட, கோயில் பூசாரிகளின் முன்பு அடக்க ஒடுக்கமாக நின்று அவர்களிடம் திருவமுது (பிரசாதம்) பெறுகையில்மூடநம்பிக்கைகொண்டவர்களாகவே காட்சி அளிக்கின்றனர் !

 

கடவுள்நம்பிக்கைஎன்பது அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்தும் ஒரு கருவி ! கடவுளை வணங்குவது என்பது சில நிமிடங்களாவது  அமைதி என்னும் புள்ளியில் மனதை நிலைநிறுத்தும் ஒருநம்பிக்கைசார்ந்த  பயிற்சி !

 

கடவுள் நமக்கு வேண்டியதைத் தருவார் என்று நம்புவது தவறானநம்பிக்கை. கடவுளை வழிபடும் இரண்டு மாணவர்களில் ஒருவர் தேர்வில் வெற்றி பெறுகிறார்; இன்னொருவர் தோல்வி அடைகிறார். ஏன் ஒருவர் தோல்வி அடைந்தார் என்று பூசாரியிடம் கேட்டால், அவர் சொல்கிறார்அது அவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலன்  !

 

முற்பிறவி”, ”பாவத்தின் பலன்” ”தலைவிதிஎன்பதெல்லாம், மக்களிடையே நிலவும் கடவுள் நம்பிக்கையை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகப் பூசாரிகள் கண்டு பிடித்திருக்கும் தந்திரம் ! இதை உணர்ந்தும் உணராதவர்களாக, தாம் பேசும் தமிழைப் பலி கொடுத்து விட்டு, கோயில் கருவறைக்குள் புகமுடியாத பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கூட்டம், இன்னமும் கோயிலை நோக்கி  அணிவகுத்துச் செல்வதில் நாட்டம் கொண்டிருக்கிறது என்றால் அது அவர்களை ஆட்சி செய்யும்மூடநம்பிக்கையின் விளைவன்றி வேறன்று !

 

கடவுள் நம்பிக்கை கொண்டிருங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை ! ஆனால், கடவுளை வணங்கினால் அவர் உங்களுக்கு வாரி வாரி வழங்குவார் என்று தவறாக நம்பாதீர்கள் ! ”முற்பிறவி”, “பாவம்”, “தலைவிதிஎன்பதைச் சொல்லி உங்களை யார் ஏமாற்ற முயன்றாலும் அவரை நம்பாதீர்கள். அவர் சொல்வது சரி என்று அவர் மீதுமூடநம்பிக்கைகொள்ளாதீர்கள் !

 

அரசு அலுவலகங்களில் கழிவறையைத் துப்புரவு செய்யும்தூய்மைப் பணியாளர்பணியிடம் தொடங்கி, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பணியிடம் வரை அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு இருக்கும் போது, கோயில் பூசாரி பணியிடங்களை மட்டும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பது மக்களிடம் இருக்கும்மூட நம்பிக்கையால்  விளைந்த பயன் என்பதை இப்போதாவது உணருவோம் !

 

அருமைத் தமிழ் மக்களே ! வாழ்வில்நம்பிக்கைவையுங்கள்; ஆனால் யாரிடமும்மூடநம்பிக்கைவைக்காதீர்கள் !


-------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:


வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.பி: 2051, கடகம் (ஆடி),06]

{21-07-2020}

-------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

  

 

 

சனி, அக்டோபர் 03, 2020

சிந்தனை செய் மனமே (81) - மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


----------------------------------------------------------------------------------------------------------

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று, வீடு தோறும் நீரிழிவு நோயாளி ஒருவராவது இருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பு மூட்டுவலியைப் பற்றி யாருக்கும் தெரியாது.  இன்றைய நிலைமை என்ன? ஐம்பது விழுக்காடு மக்கள் மூட்டு வலியால்  அவதிப்பட்டு  வருகிறார்கள். இத்தகைய நிலைமை ஏன் வந்தது ?

மைய அரசில் மக்கள் நலம் காக்க  ஒரு துறை இருக்கிறது. அதற்கு முதனிலை அமைச்சர் (CABINET MINISTER) இடைநிலை அமைச்சர் (DEPUTY MINISTER) என நான்கைந்து  அமைச்சர்களும்  உள்ளனர். மாநிலங்களிலும் மக்கள் நலத்துறையும் அதற்கென அமைச்சர்களும் இருக்கின்றனர். இவர்கள் தமது கடமையாகக் கருதுவது  ஒன்றைத்தான். மக்களை நோயாளி ஆகாமல் தடுப்பது அல்ல ! நோயாளி ஆன பின்பு அவர்களுக்குப் பண்டுவம் (TREATMENT) செய்திட புதிய மருத்துவ மனைகளைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவது மட்டுமே !

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நலமுடன் திகழ்ந்த இந்தியக் குடும்பங்கள், இன்று நோயாளிக் குடும்பங்களாகிவிட்டதே என்று இந்த அமைச்சர் பெருமக்களில் யாராவது, கவலைப் படுகிறார்களா ? இல்லை ! அதற்கு அவர்களுக்கு நேரமுமில்லை ! அவர்கள் கவலை எல்லாம் வேறு விதமாக இருக்கிறது !

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு  ஒரு குறிப்பிட்ட மருந்தினை ஒரு மருந்தாக்க நிறுவனம் (PHARMACEUTICAL COMPANY) அறிமுகப்படுத்திச் சந்தைப்படுத்துகிறது. அம்மருந்தில் என்னென்ன பொருள்கள் (INGREDIENTS) கலக்கப் பெற்றுள்ளன, அம்மருந்து மெய்யாகவே, குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்துகிறதா, பக்க விளைவுகளேதும் ஏற்படுகிறதா  என்பதைத் துல்லியமாக ஆய்வு செய்து, அதன்பின் அதைத் தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் அனுமதிக்க வேண்டிய மைய அரசு, இப்பணியைச் செய்வது இல்லை. மாநில அரசும் இதைப் பற்றிச் சிந்திப்பது இல்லை !

நம்மை ஆள்கின்ற அரசுகள், இந்தப் புலனத்தில் (விஷயத்தில்) தமது கண்களை இறுக மூடிக்கொண்டு விட்டன. இதன் விளைவாக, மருந்தாக்க நிறுவனங்கள், குறிப்பிட்ட நோய்க்கு மருந்து தயாரிப்பதாகச் சொல்லி, வேறுவகை நோய்க்கு நம்மை ஆட்படுத்தும் விதமாகக் கூட்டு மருந்தில் உள்ள ஓரிரு பொருள்களின் (INGREDIENTS)  கலவை வீத அளவைச் சிறிது கூடுதலாக்கி அம்மருந்தினை மெல்லிய நச்சுத் தன்மை உடையதாக  ஆக்கிவிடுகின்றன என ஆய்வாளர்கள் பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர் !

ஒரு கூட்டு மருந்து, 10 வகையான பொருள்கள் கலக்கப்பெற்று தயாரிக்கப் பெறுவதாக வைத்துக்கொள்வோம்., கலவைப் பொருள்களுள் ஒருசில (SOME INGREDIENTS), குறிப்பிட்ட நோயைக் குணமாக்கத் தேவையில்லாமல் (NOT NECESSARY) இருக்கலாம். என்றாலும் அவற்றையும் கலந்து, அவற்றின் மெல்லிய  நச்சுத் தன்மை (SLOW POISON)  காரணமாக நம்மை வேறு வகையான நோயாளியாக மாற்றக் கூடிய மருந்தாக அதை உருவாக்கிச் சந்தைப் படுத்தி விடுகின்றனர், என்பது ஆய்வாளர்களின் குற்றசாட்டு.  இதைப்பற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்ட மைய அரசு, ஆய்வு செய்து அனுமதிக்கும் கொள்கையைப் பின்பற்றாததால், மருந்தாக்க நிறுவனங்களின் கமுக்க (SECRET) நடவடிக்கைகளால், நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்திலும் இருக்கும் மென்மையான நச்சுப் பொருள் நம்மை நிரந்தர (PERMANENT) நோயாளி ஆக்கிவிடுகிறது !

எடுத்துக்காட்டாக,  முறைக் காய்ச்சலுக்கு (MALERIA FEVER) மருந்து சாப்பிடும், ஒரு மனிதன், 10 நாள்களில் காய்ச்சலிலிருந்து விடுபடுகிறான். ஆனால் காலப்போக்கில் அவன் நீரிழிவு நோயாளியாகவோ, மூட்டுவலி நோயாளியாகவோ, உயர் குருதி அழுத்த (HYPER TENSION) நோயாளியாகவோ, குண்டிக்காய் செயலிழப்பு (KIDNEY FAILURE) நோயாளியாகவோ மாறிவிடுகிறான் !

மருந்தாக்க நிறுவனங்கள் ஏன் இந்த கமுக்க (SECRET) நடவடிக்கைகளில் இறங்குகின்றன. நோயாளிகள் பெருகினால் தான் மருந்து விற்பனை பெருகும். விற்பனை பெருகினால் தான் கொள்ளை கொள்ளையாகப் பணம் சேர்க்க முடியும். மைய, மாநில அரசுகள் ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டால் மருந்தாக்க நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாக தேர்தல் நிதி கிடைப்பது பறிபோய்விடுமே !

மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரும்பான்மையோர் அவர்கள் செய்யக் கூடாததைச் செய்து, நோயாளி ஆவதில்லை. மருந்தாக்க நிறுவனங்களின் பேராசையால், நலமுள்ள மனிதனும் நோயாளி ஆக்கப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை !

மக்களைக் காப்பாற்ற வேண்டிய மைய, மாநில அரசுகளின் செயல்பாடின்மை, மருந்தாக்க நிறுவனங்களின் பேராசை ஆகியவற்றால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நீரிழிவு நோயாளியோ, ஒரு மூட்டு வலி நோயாளியோ இருக்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது !

ஆங்கில முறை மருத்துவராக உள்ள நம்மவரே, அவர்களையும் அறியாமல், மருந்தாக்க நிறுவனங்களின் சம்பளமில்லா முகவர்களாக மாறி, ஒரு நோய்க்கு ஏழெட்டு மருந்துகளை எழுதித் தந்து எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர் !

மைய, மாநில அரசுகளின் மக்கள் நலத்  துறை அமைச்சர்கள் இனிமேலாவது தமது கடமையை உணர்ந்து செயல்படுவார்களா ? அல்லது  வீட்டுக்கு ஓரிருவரை நிரந்தர நோயாளியாக மாற்றும் மருந்தாக்க நிறுவனங்களின் சூழ்ச்சிக்குத் துணை போவார்களா ? வாக்களிக்கும் மக்கள் தான் விழிப்படைய வேண்டும் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்,
[தி.: 2050, சுறவம், 11.]
{25-01-2019}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------