name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி
நல்வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (09) ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் !

வற்றிவிட்டாலும் கூட  ஆறு,  ஊற்று  நீரை  உலகுக்கு அளிக்கிறது !

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆற்றுப்   பெருக்கற்    றடிசுடு  மந்நாளு  மவ்வாறு
ஊற்றுப்   பெருக்கால்  உலகூட்டும்  -  ஏற்றவர்க்கு
நல்லகுடிப்  பிறந்தார்  நல்கூர்ந்த   ரானாலும்
இல்லையென  மாட்டா    ரிசைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------------------------

ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்  -  ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
---------------------

ஆற்றில் வெள்ளம் வற்றிப் போய், நடந்து செல்வோரின் பாதங்களை ஆற்று மணல் சுட்டெரிக்கும்  கோடை காலத்திலும் கூட, அந்த ஆறானது, ஊற்று நீரைத் தந்து, மக்களின் தாகத்தைத் தணிக்கிறது. அதுபோல நற்குடியிற் பிறந்தவர்கள், தம் செல்வமெலாம் இழந்து வறுமை உற்ற காலத்திலும் கூட, இரவலர்களுக்கு (பிச்சை எனக் கேட்போர்) மனமிசைந்துஇல்லைஎனச் சொல்ல மாட்டார்கள். (இயன்றதைத் தருவர் எனப் பொருள்)

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

பெருக்கு = நீர்ப் பெருக்கு ; அற்று = வறண்டுபோய் ; அடி சுடும் = நடப்போர்  பாதங்களை மணல் சுடுகின்ற ; ஊற்று = ஆற்று மணலிடையே தோண்டப் பெறும் கிணறு போன்ற பள்ளம் ; உலகு ஊட்டும் = மக்களின் தாகத்தைத் தணிக்கும் ; ஏற்றவர்க்கு = இரவலர்களுக்கு ; நல்ல குடிப் பிறந்தார் = உயர்ந்த குடியில் பிறந்த மனிதர்கள் ; நல்கூர்ந்தார் = வறியவர்கள்; (நல்குரவு = வறுமை) ; இசைந்து = மனம் ஒப்பி.

------------------------------------------------------------------------------------------------------------
        
  “தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[தி.: 2050, மீனம்,05]
{19-03-2019}

------------------------------------------------------------------------------------------------------------




நல்வழி (02) சாதி இரண்டொழிய வேறில்லை !

உதவுவோர் உயர் சாதி ; உதவாதோர் இழிந்த  சாதி !


நல்வழி என்பது  ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று  !  ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். நல்வழியை அருளிய ஔவையார் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.2.
----------------------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்
இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

இந்தப் பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் இல்லை. இந்த இரண்டு சாதிகளும் எவை தெரியுமா ? நீதி தவறாது நல்வழியில் நின்று, முறையோடு, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர். பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு உணவு கூடத் தராத, உதவி செய்கின்ற மனம் கருகிப் போன கருமிகள் இழிந்த சாதியினர். பட்டாங்கு எனப்படும் நீதி நூல்கள் குறிப்பிடும் இரண்டு சாதிகள் இவ்விரண்டே !

------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------

சாற்றுங்கால் = சொல்லப் போனால் ; வழுவா = தவறாத ; நெறி = நல்வழி ; முறையின் = முறையோடு ; மேதினி = பூமி ; இட்டார் = தருவோர் ; இடாதோர் = தராதோர் ; பட்டாங்கு = நீதிநூல்கள் (சாத்திரங்கள்)

-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம், 04]
{18-03-2019}

-----------------------------------------------------------------------------------------------------------