name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (02) உவம உருபுகள் !

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (02) உவம உருபுகள் !

      உவமானம், உவமேயம் பற்றிய விதிகள் !




01. ஒரு பொருளை அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும். கபிலன் இடி போல மேடையில் முழங்கினான் என்னும் சொற்றொடரில், கபிலனது பேச்சு வலிமை இடியுடன் ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது.

02.மேற்கண்ட சொற்றொடரில் இடி என்பது உவமை. இதனை உவமானம் என்றும் சொல்வதுண்டு. கபிலனது முழக்கம் (அதாவது பேச்சு) என்பது உவமேயம்.


03. உவமானம் (இடி), உவமேயம் (கபிலனது முழக்கம்), இரண்டுக்கும் இடையில் வருகின்ற போல என்னும் சொல் ( இடி போல முழங்கினான்) உவம உருபு ஆகும். (எ-டு) (01) தமிழ் தேன் போல இனிமையானது. (02) குழந்தையின் முகம் தாமரை போல அழகானது. (03) சர்ச்சிலின் மனம் பாறை போல உறுதியானது. (04) குமரனின் பார்வை நெருப்புப் போல அனைவரையும் சுட்டது.


04. உவம உருபுகள் (பக் 120) :- போல என்னும் உவம உருபைப் போல வேறு சில உவம உருபுகளும் உள்ளன. அவை:- (01) புரைய (02) ஒப்ப (03) உறழ (04) அன்ன (05) மான (06) நேர (07) நிகர்ப்ப (08) ஏய்ப்ப (09) கடுப்ப. (10) இயைப (11) இன்ன (பக். 120)


05. மேற்கண்ட உவம உருபுகள் அனைத்திற்கும் பொருள் ” போல ” என்பது தான்.


06. விரியுவமை (விரி + உவமை) (பக்.120) :- உவமானம் (உவமை), உவமேயம் (உவமிக்கப்படும்பொருள்) ஆகிய இரண்டனையும் பொருத்துகின்ற உவம உருபு (போல, புரைய..........) வெளிப்படையாக வருவது விரியுவமை ஆகும். இதனை உவமைத் தொடர் என்றும் கூறுவதுண்டு. (எ-டு) அவனது தீ போன்ற விழிகள் அனைவரையும் அச்சுறுத்தின. இத்தொடரில் தீ என்பது உவமானம் (உவமை) ; விழிகள் என்பது உவமேயம்; போன்ற என்பது உவம உருபு. (பக் 120).


07. தொகையுவமை அல்லது உவமைத் தொகை (பக்.121):- ஒரு சொற்றொடரில் உவமானம், உவமேயம் இரண்டுக்கும் இடையில் உவம உருபு வெளிப்படையாக வராமல், மறைந்து நின்றால் அதற்குப் பெயர் உவமைத் தொகை அல்லது தொகையுவமை எனப்படும். (பக்.121)


08. உவமை (பக் 121):- ஒரு பொருளை அதைவிடச் சிறந்த மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.


09. உருவகம் (பக் 121) :- உவமானம், உவமேயம் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டாமல், இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப் படுத்திக் காட்டுவது உருவகம். (எ-டு) (01) தமிழ்த்தேன் (02) பாதமலர்.


10. உவமையும் உருவகமும் :- (01) பவளவாய். பவளம் போன்ற வாய் என்று பொருள். இங்கு பவளம் என்பது உவமை (உவமானம்); வாய் என்பது உவமேயம். இத்தொடரில் வாய் பவளத்தோடு ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பவளவாய் என்பது உவமைத் தொடர். ஆனால் வாய்ப்பவளம் என்ற சொற்றொடரில் வாயே பவளம் எனப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. இதில் பவளம் உவமானம்; வாய் உவமேயம்.


11. உவமைத் தொகையில் ( பவள வாய் ) முதற்பகுதி (பவளம்) உவமானம்; அடுத்த பகுதி ( வாய் ) உவமேயம். (121)


12. உருவகத் தொடரில் ( வாய்ப் பவளம் ) முதற்பகுதி (வாய்) உவமேயம்; அடுத்த பகுதி (பவளம்) உவமானம். (பக். 121)


13. உவமை, உருவக எடுத்துக் காட்டுகள் (பக் 121)

உவமை.....................................................உருவகம்

அமுதமொழி........................................... மொழியமுது
கயற்கண்................................................. கண்கயல்
தேன்தமிழ்.................................................தமிழ்த்தேன்
பூவிரல்.........................................................விரற்பூ
மதிமுகம்....................................................முகமதி
மலரடி..........................................................அடிமலர்
முத்துப்பல்.................................................பல்முத்து
விற்புவம்.....................................................புருவவில்
மலர்ப்பாதம்.............................................பாதமலர்
தாமரைமுகம்..........................................முகத்தாமரை
முகிற்குழல்...............................................குழல்முகில்
நிலவுமுகம்................................................முகநிலவு


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]


----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------
                                 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .