name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (01) புணர்ச்சி !

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (01) புணர்ச்சி !

புணர்ச்சி வகைகளும்   விதிகளும் !




01.புணர்ச்சி (பக்.138) :- தனித்தனியான இரண்டு சொற்கள் ஒன்றாக இணைவதற்குப் புணர்ச்சி என்று பெயர். இரண்டு சொற்களும் ஒன்றாக இணைந்து புதிய சொல் ஒன்று உருவாகும்.


02. நிலைமொழியும் வருமொழியும் (பக் 138) :- பொன் + வளையல். இதில் பொன் என்பது நிலைமொழி; வளையல் என்பது வருமொழி.


03. இயல்புப் புணர்ச்சி (பக் 138) :- இரண்டு சொற்கள் இணைந்து ஒரு புதிய சொல் ஒன்று உருவாகும் போது இணைந்த இரு சொற்களிலும் மாற்றம் ஏதுமின்றி அவை இயல்பாகப் புணர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி ஆகும். (எ-டு) பொன் + வளையல் = பொன்வளையல்.


04. விகாரப் புணர்ச்சி (உருமாற்றம் ஏற்படும் புணர்ச்சி) (பக் 138) :- இரண்டு சொற்கள் சேரும்போது, அந்தச் சொற்களிலோ அல்லது அந்த சொற்களுக்கு இடையிலேயோ ஏதாவது உருமாற்றம் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். (எ-டு) (01) வாழை + பழம் = வாழைப்பழம். (இங்கு புதாக ஒரு ப் வந்து சேர்ந்துள்ளது) (02) கருமை + விழி = கருவிழி. ( இங்கு நிலைமொழியின் ஈற்றெழுத்து மறைந்துவிட்டது)


05. விகாரப் புணர்ச்சிகள் (பக் 138) விகாரப் புணர்ச்சி, தோன்றல் விகாரம், கெடுதல் விகாரம், திரிதல் விகாரம் என மூவகைப்படும்.


06. தோன்றல் விகாரம்:- வாழை + பழம் = வாழைப்பழம். இங்கு நிலைமொழி வருமொழி சொற்களுக்கு இடையே ப் என்னும் எழுத்து புதிதாகத் தோன்றியுள்ளது. எனவே இது தோன்றல் விகாரம் எனப்படும்.


07. கெடுதல் விகாரம் :- கருமை + விழி = கருவிழி. இங்கு நிலைமொழியின் ஈற்று எழுத்தான மை என்பது புணர்ச்சியில் மறைந்துவிட்டது. (அதாவது கெட்டுவிட்டது). எனவே இது கெடுதல் விகாரம் எனப்படும்.


08. திரிதல் விகாரம் :- பொன் + குடம் = பொற்குடம். இங்கு நிலைமொழியின் ஈற்றெழுத்தான ன் என்பது புணர்ச்சியில் ற் என உரு மாற்றம் (அதாவது திரிந்து விட்டது) அடைந்துவிட்டது. எனவே இது திரிதல் விகாரம் ஆகும்.


09. திசைப்பெயர்ப் புணர்ச்சி (பக் 138) :- திசைப் பெயர்கள் இரண்டு ஒன்றாகச் சேரும்போது என்ன நிகழ்கிறது என்பதைப் பார்ப்போம். வடக்கு + கிழக்கு = வடகிழக்கு. இங்கு நிலைமொழியின் ஈற்று எழுத்தும் ஈற்றயல் எழுத்தும் (க், கு) மறைந்துவிட்டன. இவ்வாறு வடக்கு என்னும் திசைப் பெயருடன் கிழக்கு மேற்கு ஆகிய திசைப் பெயர்கள் சேரும்போது நிலைமொழியின் ஈறு மற்றும் ஈற்றயல் எழுத்துகளான க், கு ஆகியவை மறைந்து வடகிழக்கு, வடமேற்கு ஆகிய புதிய சொற்கள் சொற்கள் பிறக்கின்றன. (இது கெடுதல் என்னும் விகாரம்)


10. திசைப்பெயர் புணர்ச்சி (பக்.138) :- தெற்கு என்னும் திசைப் பெயருடன் கிழக்கு, மேற்கு என்னும் திசைப் பெயர்கள் புணரும் போது என்ன நிகழ்கிறது ? தெற்கு + கிழக்கு = தென் கிழக்கு; தெற்கு + மேற்கு = தென் மேற்கு. இங்கு நிலை மொழியின் ஈற்று, ஈற்றயல் எழுத்துகளான ற், கு ஆகியவை மறைந்து புணர்ச்சியில் ன் என்னும் புதிய எழுத்து தோன்றுகிறது. (இது கெடுதல் மற்றும் தோன்றல் விகாரம்).


11. திசைப்பெயரோடு பிற பெயர்கள் புணர்ச்சி :- (01) வடக்கு + மலை = வடமலை. (கெடுதல் விகாரம்) (02) தெற்கு + திசை = தென்திசை. (கெடுதல் மற்றும் திரிதல் விகாரம்) (03) கிழக்கு + நாடு = கீழ்நாடு. (கெடுதல், திரிதல் விகாரம்) (04) மேற்கு + நாடு = மேல்நாடு / மேனாடு. (கெடுதல் மற்றும் திரிதல் விகாரம்)


12. பண்புப் பெயர் (பக் 139) :- நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றைக் குறிப்பிடும் சொற்கள் பண்புப் பெயர்களாகும். (எ-டு) (1) செம்மை, கருமை, பொன்மை, வெண்மை (02) இனிமை, உவர்மை (03) பருமை, மென்மை, சிறுமை, பெருமை, சேய்மை, அண்மை . பண்புப் பெயர்களுக்கு மையீற்றுப் பண்புப் பெயர் எனவும் ஒரு பெயருண்டு.


13. பண்புப் பெயர் புணர்ச்சி (01) கருமை + விழி = கருவிழி. ஈறு போதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் ஈற்று எழுத்தான மை நீங்கிப் புணர்ந்தது.


(02) பெருமை + அன் – [பெரு + அன்] ; [பெரி + அன்] ; [பெரி + ய் + அன்] = பெரியன். ஈறு போதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் ஈற்றெழுத்தான மை நீங்கி, பின் பெரு என்பதன் உகரம் இடை உகரம் எ ஆதல் என்னும் விதிப்படி பெரி ஆகி, பின் யகர உடம்படு மெய் பெற்று, பெரி + ய் + அன் என்பது உடல் மேல் உயிர் வந்து உன்றுவடு இயல்பே, என்னும் விதிப்படி, ய் + அ = ய என்றாகி, பெரியன் எனப் புணர்ந்தது.


(03) பசுமை + கூழ் = பைங்கூழ் , சிறுமை + ஓடை = சிற்றோடை, செம்மை + ஆம்பல் = சேதாம்பல், கருமை + குயில் = கருங்குயில் ஆகியவற்றுக்கான புணர்ச்சி விதிகளை புத்தகத்தில் படித்து தெளிவு பெறுக.


14. மகர ஈற்றுப்புணர்ச்சி: (பக்.140)


(01) மரம் + அடி = மரவடி { மர + அடி } {மர + வ் + அடி } = மரவடி. மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது நிலைமொழியின் ஈற்று மகரம் { ம் } கெட்டு, உயிர் ஈறு போல நின்று { மர }, உடம்படு மெய் பெற்று { வ் } புணரும்.


(02) வட்டம் + கல் = வட்டக்கல் {வட்டம் + கல்} { வட்ட + கல் } {வட்ட + க் + கல்} = வட்டக்கல். நிலைமொழியின் மகர ஈறு {ம்} கெட்டு, வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து {க} மிக்குப் {க்க ஆகி} புணர்ந்துள்ளது.


(03) நிலம் + கடந்தான் = நிலங்கடந்தான் . நிலைமொழியின் மகர ஈறு {ம்} வருமொழி முதலில் உள்ள வல்லினத்துக்கு இனமான {ங்} மெல்லினமாகத் திரிந்து புணர்ந்துள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .