name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (57) வெளிச்சம் பரவட்டும் ! விடியல் பிறக்கட்டும் !

சனி, ஜூன் 27, 2020

சிந்தனை செய் மனமே (57) வெளிச்சம் பரவட்டும் ! விடியல் பிறக்கட்டும் !

மக்கள் ஏதாவதொரு அரசியல் கட்சி மீது பற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் !



வெளிச்சத்தில் இருக்கும் பொருள்கள் நம் கண்களுக்குப் பளிச்செனத் துலங்குகின்றன! இருளில் இருப்பவை நம் பார்வைக்குத் தென்படுவதில்லை ! இருளில் இருப்பனவற்றையும் நாம் பார்க்க வேண்டுமானால், நமக்கு ஒரு விளக்குத் தேவை !

இந்த விளக்கு தான் நமது அறிவு ! அறிவு என்னும் விளக்கைப் பயன்படுத்தினால், இதுவரை நாம் அறியாமல் புதைந்து கிடக்கும் மறை பொருள்கள் பலவும் நம் அகக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும் ! அறிவு என்னும் இந்த விளக்கை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும் !

பற்றுஎன்னும் திரை, நமது அறிவு விளக்குக்குப் பகையாகக் குறுக்கே வந்து மறித்து நிற்கும் !

நமது அகக் கண்களை மறைக்கும் பற்றினைவிலக்கி விட்டு அறிவு வெளிச்சம் கொண்டு தேடினால் புதைந்து கிடக்கும் எந்தப் பொருளும் நம் ஞானக் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் !

நம் நாட்டில் அரசியல் களத்தில் நடக்கும் தவறான செயல்களை நாம் நமது அறிவால் பகுத்துப் பார்க்கவேண்டும் !

ஆனால், அவ்வாறு பகுத்துப் பார்க்கத் துணியும் முன், நமக்கு எந்தவொரு அரசியல் கட்சியின் மீதும் பற்றுஇருக்குமானால், அதை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்க்கும் திறன் நமக்கு இருக்க வேண்டும்!

ஆனால், தமிழ் நாட்டில் நிலைமை அப்படி இல்லை ! அறுபது விழுக்காடு மக்கள் ஏதாவதொரு அரசியல் கட்சி மீதுபற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் !

இந்தப் பற்றை ஒதுக்கி வைத்து விட்டு, அந்தக் கட்சியின் செயல்பாடுகள் பற்றிப் பகுத்தறியும் திறனை அவர்கள் முற்றிலுமாக இழந்து நிற்கிறார்கள்!

மக்களிடம் காணப்படும் இந்த பற்றுதான் பல அரசியல் கட்சிகளுக்கும் வலுவூட்டும் அடித் தளமாகப் பயன்படுகிறது !

எந்த அரசியல் கட்சியும் செய்யும் தவறான செயல்களை, மேற்கொள்ளும் தவறான அணுகு முறைகளைப் பகுத்து ஆய்ந்து பார்க்கும் திறனை இந்தப் பற்றுதான் பறித்துக் கொள்கிறது !

கட்சிப் பற்றுக் கொண்ட 60 % மக்களை இனி தொண்டர்கள்என்று அழைப்போம் !

எஞ்சிய 40% -ல், 20% மக்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை ! வாக்களிப்பதற்கு எந்தக் கட்சிக் கூடுதலாகப் பணம் தருகிறதோ, அதற்கு வாக்களிப்பார்கள் !

மீதமுள்ள 20% மக்கள் இராமன் ஆண்டால் என்ன ?, இராவணன் ஆண்டால் என்ன ? ” என்று மெய்ப்பொருள் பேசும் ஞானிகளாக (தத்துவ ஞானி)த் தங்களைக் கருதிக் கொள்பவர்கள்!

மக்கள் தொகையில் 60% அளவுக்கு இருக்கும் தொண்டர்கள்பற்றி இனி பார்ப்போம். இந்தத் தொண்டர்கள் ஏதாவது ஒரு கட்சி மீது பற்றுவைத்திருப்பவர்கள். இவர்களுக்கு இந்தப்பற்றுஎப்படி ஏற்பட்டது ?

தன் கட்சித் தலைவர் பிறரை விடப் புள்ளி விவரங்களுடன் ஏற்ற இறக்கமாக நன்றாகப் பேசுகிறார் என்பதற்காகச் சில தொண்டர்கள் அவர் கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

தனது தலைவர், தான் விரும்பிச் சுவைத்த நடிப்புக் கலையின் நாயகனாகத் திரைவானில் கொடிகட்டிப் பறந்தவர் என்பதற்காக அவர் கட்சி மீது சில தொண்டர்கள் பற்றுவைக்கிறார்கள்!

தனது சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு கட்சி மீதும் கட்சித் தலைவர் மீதும் பற்றுவைக்கிறார்கள் !

தான் சார்ந்த இனத்தை முன்னேற்ற வந்த தலைவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில தொண்டர்கள் அவர் கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

தன் தந்தை ஆதரித்த கட்சி என்பதற்காகச் சில தொண்டர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சி மீதும், கட்சித் தலைவர் மீதும் பற்றுவைக்கிறார்கள். !

தமக்கு வேலைவாய்ப்பு அளித்தவர் என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவர் மீதும் அவரது கட்சி மீதும் பற்றுவைக்கிறார்கள் !

தமக்குப் பிடிக்காத தலைவர் ஒருவரை கிழி கிழியென்று கிழிக்கிறார் என்பதற்காக ஒரு குறிப்பிட்டக் கட்சித் தலைவர் மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும் சில தொண்டர்கள் பற்றுவைக்கிறார்கள் !

தமது மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு தலைவர் மீதும் அவரது கட்சி மீதும் பற்று வைக்கிறார்கள் !

தான் மிகவும் நேசிக்கும் மடலாட்ட வீரர்(CRICKET PLAYER) ஆதரிக்கும் கட்சி என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

ஆன்மிகம் சார்புள்ள கட்சி என்பதற்காக, சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

போலி ஆன்மிகத்தைத் தோலுரித்துக் காட்டும் கட்சி என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

மொழியுணர்வு மிக்கவர்கள் நிறைந்த கட்சி என்பதற்காக, சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

குறிப்பிட்ட தெய்வத்திற்குக் கோயில் கட்டுவதே தமது கோட்பாடு என்று கொள்கை உடைய கட்சி என்பதற்காக சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

குறிப்பிட்ட விலங்கினைக் காக்க வந்திருக்கும் காவலர்களாகச் சிலரைக் கருதி அவர்கள் சார்ந்த கட்சி மீது சில தொண்டர்கள் பற்றுவைக்கிறார்கள் !

இவ்வாறு ஏதோ சில காரணங்களின் அடிப்படையில் தொண்டர்கள், கட்சிகள் மீதுபற்றுவைக்கிறார்களே அன்றி, அந்தக் கட்சியினால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்குமா என்பதைப் பகுத்துப் பார்த்து பற்றுவைக்கின்ற திறனைத் தொண்டர்கள் முற்றிலுமாக இழந்து நிற்கிறார்கள். !

தனது கட்சித் தலைவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, அது நேர்மையாக ஈட்டிய வருமானத்தால் வாங்கப் பட்டவையா என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

தனது கட்சி, செல்வந்தர்களுக்கு மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்புகளை வழங்கி வருவது ஏன் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

தனது கட்சி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வாய்ப்புகளை வழங்கி வருவது ஏன் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

தனது கட்சித் தலைவர்கள் மக்களைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து அறிக்கை விடுவதுடன் நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, போராட்டம் நடத்திச் சிறை செல்ல அஞ்சுவது ஏன் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை!

தானோ தனது குடும்பத்தினரோ எந்தக் காலத்திலும் எந்தப் பதவியையும் ஏற்கமாட்டோம் என்று மக்களுக்குத் தந்த உறுதிமொழியை, தான்

பற்றுவைத்திருக்கும் கட்சித் தலைவர் மீறியது ஏன் என்று எந்தத் தொண்டரும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !


எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு ஆளிநருடனும், பேசக் கூடாது, அவர்கள் எதிரில் வந்தால் விலகிப் போகவேண்டும், அவர் குடும்பத்து நல்லது கெட்டதுகளுக்குப் போகக் கூடாது, அவர் வணக்கம் சொன்னாலும் திரும்ப வணக்கம் சொல்லக் கூடாது, அவரைப் பார்த்துப் புன்னகை செய்யக் கூடாது என்று தன் தலைவர் எழுதப்படாத கட்டுப்பாடுகளை ஏவியது சரிதானா என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !

ஒரு குடும்பத்தினரே கட்சிக்குள் மேலாண்மை செலுத்தும் வகையில், தன் குடும்ப உறுப்பினர்களைக் கட்சிப் பதவிகளில் அமர்த்துவது ஏன் என்று அந்தக் கட்சித் தலைவர் மீதும் அவரது கட்சி மீதும் பற்றுவைத்திருக்கும் தொண்டர்கள் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !

அமைச்சர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, அனைத்து மதத்தவர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானராக இருக்க வேண்டும். இந்த கோட்பாடுகளைப் பின்பற்றி காமராஜரோ, பக்தவத்சலமோ, இராஜாஜியோ, அண்ணாவோ, நேருவோ, இந்திரா காந்தியோ, ஜெயலலிதாவோ, ம.கோ.இரா.வோ தமது மதச் சின்னங்களை நெற்றியில் அணிந்து கொண்டதில்லை !

ஆனால், இப்போதைய அமைச்சர்கள் சிலர், நெற்றியில் திருநீறு அல்லது திருநீற்றுடன் குங்குமமும் அணிந்து கொள்ளாமல் வெளியில் தோன்றுவதே இல்லை. இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடா அல்லது மக்களை ஏமாற்றி வாக்கு வங்கியைப் பெருக்கும் மலிவான அரசியல் தந்திரமா என்பதை எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

ஆளுநரைச் சந்தித்து விண்ணப்பம் தந்தவர்களின் பதவி பறிக்கப்பட்டது; ஆனால் அரசைக் கவிழ்க்கும் வகையில் சட்ட மன்றத்தில் எதிர்த்து வாக்களித்தவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுகிறது. இது என்ன ஞாயம் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !

கண்மூடித் தனமாக அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் தொண்டர்களால் தான், தவறு செய்யும் கட்சிகள் மேலும் மேலும் தவறுகளைச் செய்யத் துணிகின்றன!

60% அளவுக்கு உள்ள கட்சித் தொண்டர்கள், பகுத்தறிந்து பார்க்க வேண்டும். குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதால், ஒட்டு மொத்த மக்களுக்கும் என்ன நன்மை என்பதை இந்தத் தொண்டர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

இரட்டியார், நாயுடு, கம்மவார், பத்மசாலியர், இராஜு, நாயக்கர், 24 மனைத் தெலுங்குச் செட்டியார், தெலுங்குப் பார்ப்பனர், ஆதி ஆந்திரர், ஒட்டர், கம்பளத்தார், போயர், தேவாங்கர், பட்ராஜு, தாசரி, தொம்மாரா, ஜங்கம், ஜோகி என்று பல இனங்களைச் சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில், வாழ்ந்து வருகிறார்கள் !

ஆனால், ஒரு அரசியல் தலைவரை மட்டும் குறி வைத்து, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வடுகர்என்ற பொய்ப் பரப்புரையைச் செய்து ஆட்சிக்கு வர நினைக்கும் உணர்ச்சித் தலைவரின் தொண்டர்கள், தங்கள் தலைவர் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் இதுவரை என்ன தொண்டு செய்திருக்கிறார், மக்களுக்காக என்ன ஈகம்(தியாகம்) செய்திருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது இல்லை ?

மேற்குறிப்பிட்ட அனைவருமே தெலுங்கு பேசுபவர்கள்என்னும் நிலையில் அவர்களது வாக்குகள் இல்லாமல், “உணர்ச்சித் தலைவர் ஆட்சிக்கு வந்து விட முடியுமா, என்பதை எந்தத் தொண்டரும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை ?

தொண்டர்கள் தவிர்த்து, 20% அளவுக்கு உள்ள மெய்ப்பொருள் ஞானிகள்எனத் தங்களைக் கருதிக் கொள்வோர், தங்கள் நிலைசரிதானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

தவறு செய்யும் அரசியல் வாதிகளைக் குப்புறக் கவிழ்க்க இவர்கள் முன்வந்தாலன்றி, அரசியல் அரங்கில் உள்ள களைகளை எப்படி அகற்ற முடியும் என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

தேர்தல் நேரத்தில் விலைபோகும் எஞ்சிய 20% மக்களே! உங்கள் செயல் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது அல்லவா ?

உங்கள் செயல், உங்களுக்கு நீங்களே தோண்டிக் கொள்ளும் சவக்குழி அல்லவா ?

மக்களே ! சிந்தியுங்கள் ! அரசியல் அரங்கில் தவறு செய்பவர்களை ஆதரிக்காதீர்கள் !

கட்சிப்பற்றுக்குகட்டுப்பட்டு மீண்டும் மீண்டும் தவறு செய்யாதீர்கள் ! தேர்தல் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை!

இனி, கட்சிக் கூட்டங்களுக்குப் போகாதீர்கள்! கட்சி சார்பு நிகழ்ச்சிகளுக்குப் போகாதீர்கள் ! கட்சி சார்ந்த தலைவர்கள்வீட்டு நிகழ்ச்சிகளைப் புறக்கணியுங்கள் !

கட்சித் தலைவர்களுக்குக் கொடி பிடித்து அவர்கள் பின்னே அணி வகுத்துச் செல்லாதீர்கள் ! கட்சித் தலைவர்களைப் பார்த்து வாழ்கஎன்று முழங்காதீர்கள்!

இவை எல்லாம் கட்சித் தலைவர்களுக்கு நீங்கள் விடுக்கும்எச்சரிக்கைசைகையாக அமையும் ! இந்த எச்சரிக்கையக் கண்டாவது தலைவர்கள் திருந்தக் கூடுமல்லவா ? வெளிச்சம் பரவட்டும் ! புதிய விடியல் பிறக்கட்டும் !

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),13]
{27-06-2020}
-------------------------------------------------------------------------------------------------------
              தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .