name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (41) நன்றி சொல்லுங்கள்; அதுவே நயத்தக்க நாகரிகம் !

திங்கள், அக்டோபர் 07, 2019

சிந்தனை செய் மனமே (41) நன்றி சொல்லுங்கள்; அதுவே நயத்தக்க நாகரிகம் !

நன்றி சொல்லத் தெரிந்தவன் நல்ல நண்பர்களைப் பெறுவான் !


மனிதன் என்ற உயிரினத்திற்கு இலக்கணம் சொல் என்று பத்தாம் வகுப்பு ஆசிரியர் கேட்டார்; பிற உயிரினங்களிடம் இல்லாத இரண்டு கரங்களைப் பெற்றிருக்கும் உயிரினம் குரங்கைத் தவிர, ”மனிதன்மட்டுமே   என்றான் தூயமணி !

சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம், இப்பூவுலகில், “மனிதன்தான் என்றாள் மகிழ்மதி. பிற உயிரினங்களுக்குச் சிந்திக்கத் தெரியாது; மனிதனுக்கு மட்டும் தான் சிந்திக்கத் தெரியும் என்றான் நாவலர்நம்பி. பேசத்தெரிந்த உயிரினம்மனிதன்மட்டுமே என்றாள் கனித்தமிழ் !

அனைத்தும் சரியான விடைகள் தான்; எனினும் இன்னும் ஒரு சிறப்பு மனிதனிடம் இருக்கிறது; மனிதனுக்கு மட்டுமே தன் உள்ளத்து உணர்வுகளைச் சொல்லாலும் செயலாலும் வெளிப் படுத்தத் தெரியும். பிற உயிரினங்களிடம் இல்லாத இச்சிறப்பு மனித இனத்திற்கே உரியது என்று விளக்கம் தந்தார் ஆசிரியர் நலங்கிள்ளி !

இத்தகைய சிறப்பு வாய்ந்த உயர்ந்த பிறவியைப் பெற்றிருக்கும் மனிதர்கள், தங்கள் சிறப்பை முறையாக வெளிப்படுத்துகிறார்களா என்பதைச் சற்று ஆய்வு செய்வோம் !

பிறர் நமக்கு உதவி செய்யும் போது, அவர்களுக்கு உள்ளன்புடன் நன்றி சொல்வது நயத்தக்க நாகரிகம்; நற்பண்பு !  உதவிகளைப் பெற்றுப் பயனடையும் மாந்தர்களில் எத்துணை பேர் நன்றி சொல்கிறார்கள்? செல்வச் செழிப்பில் திளைப்பவர்கள், எளியவர்கள் செய்யும் உதவிக்கு நன்றி சொல்வதில்லை. மெத்தப் படித்த அறிவாளிகள் அறிவுச் செருக்கால், பிறர் செய்யும் உதவிக்கு நன்றி சொல்ல முன்வருவது இல்லை !

அதிகாரத்தில் உயர்ந்தவர்கள், சார்நிலை அலுவலர்களிடம் உதவி பெறுவார்கள்; ஆனால் நன்றி சொல்ல மனம் ஒப்புவதில்லை. அரசியல் சாயத்தில் தோய்ந்த அழுக்குமன மாமணிகள்நன்றிஎன்னும் சொல் இருப்பதையே மறந்து போனவர்கள் !  சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள எளிய மனிதர்களுக்கு நன்றி சொல்லத் தெரிவது இல்லை ! நன்றி சொல்வது நல்லதொரு பண்பாடு என்னும் எண்ணம் இல்லாத எவரும் நன்றி சொல்வது இல்லை !

நன்றி சொல்லத் தெரிந்தவன் நல்ல நண்பர்களைப் பெறுவான்; உள்ளன்போடு நன்றி சொல்பவன் உயர்ந்த மனிதர்களின் உதவியைப் பெறுவான். அடிக்கடி நன்றி சொல்பவன் அவனது சொந்த வாழ்க்கையில் என்றும் ஏறுமுகத்தையே  எய்துவான் !

நன்றிஎன்று நாக்கூசாது சொல்லத் தெரிந்தவனிடம், தாழ்வு மனப்பான்மை இருந்தால் அது தகர்ந்து போகும் ! உயர்வு மனப்பான்மை இருந்தால் அது உடைந்து நொறுங்கும் ! ஆணவம் அவனிடம் அண்டி வளராது ! கோபம் அவனிடம் குடிகொள்ள இயலாது ! ”மனிதம்அவனிடம் மலர்ந்து மணம் பரப்பும் !

நண்பர்களே ! உங்கள் குழந்தைகளுக்கு நன்றி சொல்லக் கற்றுக் கொடுங்கள் ! அவர்கள் வாழ்க்கையில் உயர்நிலையை அடைவார்கள் ! நல்ல கல்வி, நல்ல நட்பு, நல்ல எண்ணங்கள், நல்ல பழக்கங்கள் அவர்களை வந்து அடையும் ! நிறைவாக ஒன்றுமுடிந்தால் நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள்இதுவரை இப்பழக்கம் உங்களிடம் இல்லாதிருந்தால் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050:கடகம்,10]
{26-07-2019}
----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .