name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (42) (1971) ஆறாத அன்புநிறை அவைத் தலைவ ! (இராசகோபால்)

புதன், அக்டோபர் 23, 2019

கவிதை (42) (1971) ஆறாத அன்புநிறை அவைத் தலைவ ! (இராசகோபால்)






            கொத்து (01)                                                                  மலர் (043)

--------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை அலுவலகத்தில் சிறிது காலம்
பணியாற்றிவிட்டு, பணியிலிருந்து நீக்கம் பெற்று விலகிச்
சென்ற எனது உதவியாளர் பெ.இராசகோபாலனுக்கு அளிக்கப்பெற்ற
தேனீர் விருந்தில் நான் ஆற்றிய உரை !
(ஆண்டு.1971)

----------------------------------------------------------

          ஆறாத        அன்புநிறை      அவைத்தலைவ ! செயல்பறவ !
              சீறாத         உணர்வலைகள்  சிந்தையுள       ஊழியர்காள் !
          மாறாத       நன்னினைவை   மனதிருத்திப்     பிரிந்தேகும்
              ஏறாத         மலைமுடியீர் !   இயம்புவநான்    நல்வணக்கம் !

          வானுயரப்        பறக்கின்ற        பருந்தைப்        போல
              வல்லாண்மைப்  புகழ்கொண்ட    வல்லோர்        ஊடே ,
          கானுறையும்     கௌதாரிப்       பறவை            அன்ன
              கற்றோரின்       நடுவினிலே      நிற்கின்றேன்     யான் ! 

          கோனுயரப்       பாடுகின்ற        புலவர்            போல ,
              குழுமியுள்ள      ஊழியர்காள்     பொறுமை     கொள்க !
          நானுயர          வழிதேடி         வந்தேன்           இல்லை ,
              நவின்றிடுவேன்  நல்வணக்கம்    ஏற்றுக்         கொள்க !

          சிலதிங்கள்       இம்மனையில்       பணிகள்       ஆற்றி ,
              சிந்திவிழும்      தேன்துளிபோல்       சிதறிச்    செல்லும்
          மலரனையோய்  தங்களது            அறிவின்        மாட்சி
              மாளாது !         மறையாது !          மடிவும்         ஏது ?


          பணிபுரிந்த       காலமதைக்      கைவிரலில்      எண்ணிடலாம் !
              பழகிவந்த        நல்முறையைச்  சிலவரியில்      கூறிடலாம் !
          அணிமிகுந்த     ஒப்புரவைக்      கவிதைகளில்   பாடிடலாம் !
              அழியாத          நினைவூற்றை   அடைத்திடுதல்   இயலாது

          ஊக்கம்       மிகவுண்டு ;      ஒப்புரவு          அறிகின்றீர் ,
              உறுவலியைக்    கைக்கொண்டு   வினைபலவே   ஆற்றவலீர் !
          ஆக்கம்       பெறுதற்கு        ஆள்வலிமை     உண்டாகின் ,
              ஏற்றம்       அடைவதுடன்    இசையுடனே     வாழ்ந்திடலாம் !


          காலத்தின்        கோலமிது        வருந்தல்         வேண்டா !
              கற்பூரம்           என்றைக்கும்     மணமே          போகா !
          ஞாலத்தில்       தங்கட்கும்        ஏற்றம்            உண்டு !
              நலமுடனே       வாழ்ந்திடுவீர் !   புகழ்ச்சி           இல்லை !


          அன்னைத்      தமிழ்த்தாயின்    அருளென்றும்    நுமக்குண்டு !
              ஆதவனாம்       அண்ணாவின்    நல்லாசி          மிகவுண்டு !
          மன்றத்துள்     கூடியுள        மனங்களெலாம் வாழ்த்துதுவே !!
              மங்காத         ஒளிவிளக்கே !      வாழியநீர் !       வாழியவே !

          அறிவிற்கும்      செயலுக்கும்       அழிவே           இல்லை !
              அடைந்திடுவீர்   வெகுவிரைவில்  உயர்வை          நீரே !
          முறிந்துவிட்ட    தளிரேநீர்          முயன்றால்       வாழ்வில் ,
              மூதறிஞர்         அண்ணாபோல்   வாழ்வீர் !         வாழி !!


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .