name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (22) சத்துணி ( CHUTNEY )

செவ்வாய், டிசம்பர் 15, 2015

புதிய தமிழ்ச் சொல் (22) சத்துணி ( CHUTNEY )

புதுச்சொல் புனைவோம் !



CHUTNEY = சத்துணி 
--------------------------------------------------------------------------------------------------------

உணவுப் பொருள்களான அரிசி, காய்கள், கிழங்கு, கீரை முதலியவை சமைத்துப் பயன்படுத்தப்பட்டால் அதில் உள்ள சத்துப் பொருள்கள் பெருமளவுக்கு அழிந்து விடுகிறன என்பதைப் படித்திருக்கிறோம் !

அவித்தல், வறுத்தல், பொரித்தல், வதக்கல் போன்ற சமையல் செயல்பாடுகளின் போது இவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்கள் (Vitamins) பெருமளவு அழிந்து போகின்றன. இறுதியில் உயிச்சத்துக்களை இழந்துவிட்டு, சத்துக் குறைந்த வெறும் சக்கைகளைத்தான் நாம் உண்கிறோம் !


”உண்” என்ற வினைச் சொல்லின் அடிப்படையில் பல சொற்கள் உருவாகிப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம் !

1. உண் - உண்டி = உணவு 

2. உண் -  உணா = உணவு 

3. உண் - ஊண் = உணவு

4 .உண் -  உணி = உணவு

5. உண் - [ உணி ]- உணவு

உண்டி”கொடுத்தோர்உயிர்கொடுத்தோரே என்னும் முதுமொழியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் வரும் “உண்டி” என்பது ”உணவைக்” குறிக்கும் சொல் !

கட்டுச்சோறு என்பதைக் ”கட்டுணா” என்பது முன்னோர் வழக்கு. இதற்கு “ஆற்றுணா” என்ற இன்னொரு பெயருமுண்டு. இதில் வரும் “உணா” என்னும் சொல்லும் ”உணவைக்” குறிப்பதே !

“ பழியஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின்...” என்பது வள்ளுவர் வாக்கு. இதில் வரும் “ஊண்” என்ற சொல்லும் ”உணவு” என்பதைக் குறிக்கும் சொல்லே !

“உணி” என்றால் என்ன ? உண்ணப் பெறுவது எல்லாமே “உணி” தான் என்கிறது தமிழகராதி. உண்ணப் பெறுவதற்கு “உணவு” என்று தானே பெயர். அப்படி உண்ணப்பெறும் உணவும் சத்து மிகுந்ததாக இருப்பின் அதன் பெயர் சத்துணி. (சத்து + உணி = சத்துணி) எனப்படும். அதென்ன சத்துணி ?

நாம் இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்கிறோமே, அந்த சட்னியில் பல வகைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும் !

தேங்காய்ச் சட்னி , தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி, புதினாச் சட்னி, இன்னும் சிலவும் உண்டு. சரி ! 

தேங்காய்ச் சட்னியில் என்னென்ன சேர்க்கப் படுகின்றன ? துருவிய தேங்காய், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய் ,சிறிது புளி, இஞ்சி, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை. கொஞ்சம் உப்பு !

இவற்றுள் பொட்டுக்கடலை வறுபட்டதாயினும் சத்து மிகுந்தது, குழந்தை உணவாகப் பயன்படுவது. மற்றவை எல்லாம் பச்சையானவை – அதாவது - வெப்பம் காணாதவை !

நாம் சமைக்கும் உணவு வகைகளில் வெப்பம் காணாத ஒன்றேயொன்று சட்னிதான். வெப்பப் படுத்தலுக்கு உட்படாத எந்த உணவும் சத்து மிகுந்தது என்பது நமக்குத் தெரியும் !

எனவே, அவித்தல், வறுத்தல், பொரித்தல், வதக்கல், துவட்டல்  போன்ற எந்தவிதமான சமையல் கூறுகளுக்கும் உட்படுத்தப் படாத “சட்னி” தான் நாம் உண்பதிலேயே சத்து மிக்க உணவு ஆகும் !

சத்து + உணி (உணவு) = சத்துணி என்பது காலப்போக்கில் உருமாறி இன்று “சட்னி” ஆகிவிட்டது. சட்னி என்பது எந்த மொழிச் சொல் என்பதில் பலருக்கு ஐயப்பாடு உண்டு. இப்போது புரிகிறதா ? சட்னி என்பது தமிழ்ச்சொல்லே ! 

எழுத்து வடிவில் வரும்போது மட்டுமாவது “சத்துணி” என்று எழுதுங்களேன் !!

”இட்லி” என்பது “இட்டளி” என்பதன் சிதைந்த வடிவம். இடு + அவி -  இட்டு + அவி = இட்டவி -  இட்டளி -  இட்லி.

==============================================================


ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

==============================================================








7 கருத்துகள்:

  1. அருமையான ஆராய்ச்சி. திரிந்தும், வழக்கிழந்தும் வரும் சொற்களின் மூலத்தை ஆராய்ந்து கூறியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ! தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ள நண்பரிடமிருந்து ஒவ்வொரு பதிவின் மீதும் கருத்துரை எதிர்பார்க்கிறேன் ! நன்றி !

      நீக்கு
  3. வியக்கத்தக்க ஆய்வு ! பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .