name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், அக்டோபர் 24, 2019

கவிதை (51) (1975) தலைமைப் பொறுப்பேற்ற தகுதிசால் (பயிற்சி நிறைவு)




         கொத்து (01)                                                     மலர் (051)
-------------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர்  தொழிற் பயிற்சி நிலையம்
மின்னிணைப்பியல்  பிரிவு  பயிற்சி
நிறைவு  விழாவின் போது நான் ஆற்றிய
உரை !
(ஆண்டு 1975)
------------------------------------------------------------------------------------------------------------
               
தலைமைப்  பொறுப்பேற்ற தகுதிசால் பெருந்தகையே !
         தளிர்த்துவரும்  செடிகளுக்கு  நீர்வார்க்கும்  பயிற்றுநர்காள் !
கலைமகள்  அருள்பெற்ற  கரம்பொலியும்  நண்பர்களே !
         கவின்சுவை  உணவளித்த  காஞ்சிவிளை  அரும்புகளே !
               
               
 விலைதந்து  பெறற்கரிய  வெண்ணிலவாம்  பேழைகளே !
          வெற்றித் திருவாசல் விரைந்தணுகும்  வேங்கைகளே !
  உலையிட்ட அரிசியென  உள்மலர்ந்த  வாலைகளே !
           உரிமையுடன்  அழைத்தோரே !  உளங்கனிந்த நல்வணக்கம் !

               
 மின்னிணைப்பு  இயல்பயின்ற  மெய்யறிவுச்  சிட்டுகளே !
          மிடிமைத்  தளையுடைத்து  மேலெழுந்த  மொட்டுகளே !
 மென்கரத்தில்  கலைச்செல்வம்  துயில்கொள்ளும்  ஏந்தல்களே !
          மைபிடித்த  கரமுடையோன்  மனதார  வாழ்த்துகிறேன் !
               
               
 ஈராண்டுப்  பயிற்சியிலே  இறுதிநிலை  எய்திவிட்டீர் !
          இனிய எதிர்காலம்  இமைவலிக்க  நோக்குகிறீர் !
 ஆராவமு  தடைய   அடையாளம்  தேடுகிறீர் !
          அருங்கலையின்  துணைகொண்டு  ஆல்போல  வாழியவே !

 இனியகன வெல்லாம்  இலங்கட்டும்  நனவாக !
           எடுக்கின்ற  நெய்யடிசில்  எழில்பெறட்டும்  அமுதாக !
 கனிந்துவரும்  எதிர்காலம்  கைவரட்டும்  களிப்பாக !
           கைவினைஞர் நும்வாழ்வு  கரைமலிக  தீம்புனலாய் !
               

  உழைப்புதான் நல்வாழ்வின்  உருத்துலக்கும்  கண்ணாடி
           உந்தல்  உணர்வொன்றே  வளம்பெருக்கும்  தேன்மாரி !
  பிழைப்பின் கடைக்கால்தான்  பீடுடைய  நல்லறிவு !
           பெருஞ்செல்வம்  மண்டியிடும்  பிழையில்லா இலக்குஎனில் !

  இனிய  சுவையுண்டி  ஈங்களித்த  மாணவர்காள் !
           இன்றமிழில்  கவிதையிலே  அழைப்புவிட்ட  இளவல்களே !
   கனித்தமிழில்  சொல்லெடுத்துக் களங்கமின்றி  வாழ்த்துகிறேன் !
            கலைஞர்களே  வாழியநீர் ! கடல்மணியீர்  என்நன்றி !

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------