name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வீரராகவர் பாடல்
வீரராகவர் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரராகவர் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 30, 2022

வீரராகவர் பாடல் (06) முன்னாள் இருவர்க்கும் யாக்கை !

பின்னாளில் நம் நிலை எப்படியோ ?


----------------------------------------------------------------------------------------------------

 

அந்தகக் கவி வீரராகவ முதலியார் தன் மனைவியுடன் உரையாடுவது போல் காட்சியை அமைத்து எழுதியது இந்தப் பாடல் !

 

வாழ்க்கையே நிலையில்லாதது. அதிலும் ஒவ்வொரு பருவமும் நிலையின்றி மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மாறிவரும் வாழ்க்கைப் பருவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------------

 

முன்னா ளிருவர்க்கும் யாக்கை யொன்றாக முயங்கினமால்

பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் பேசலுறும்

இந்நாட் கொழுநன் மனைவி யென்றாயின மின்னமுமோர்

சின்னாளி லெப்படியோ வையநீயின்று செப்புகவே.(4)


------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------

 

முன்னாள் இருவர்க்கும் யாக்கை ஒன்றாக முயங்கினம் ஆல்

பின்னாள் பிரியன் பிரியை என்று ஆயினம் பேசல் உறும்

இந்நாள் கொழுநன் மனைவி என்று ஆயினம் இன்னமும் ஓர்

சின்னாளில் எப்படியோ ஐய நீ இன்று செப்புகவே !

 

-----------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

 

முன்பு களவொழுக்கம் பூண்டிருந்த காலத்தில் (முன்னாளில்) ஒருவருக்குள் ஒருவராக நம் உடம்பைப் புகுத்திக்கொண்டு ஓருடம்பாய்க் கிடந்தோம். பின்னர்  காதலன் என்றும் காதலி என்றும் ஆனோம். இப்போது கணவன் மனைவி என்று வாழ்கிறோம். சில நாள்களுக்குப் பிறகு (நம்மில் ஒருவர் காலமானால்)  எப்படி இருப்போமோ ?

 

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

முன்னாள் = பிறருக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து பழகிய களவொழுக்கக் காலத்தில் ; இருவர்க்கும் யாக்கை ஒன்றாக = ஓருடல் ஈருயிராக ; முயங்கினமால் = இணைந்து கிடந்தோம் ; பின்னாள் = அதற்குப் பிந்திய காலத்தில் ; பிரியன் பிரியை ன்று ஆயினம் = காதலன் காதலி என்று நம்மை ஊருக்கு வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தோம் ; 


பேசலுறும் இந்நாள் = இப்பொழுது ; கொழுநன் மனைவி ன்றாயினம் = திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம் ; இன்னமுமோர் சின்னாளில் = இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு ; எப்படியோ = நம்மில் ஒருவர் மறைந்த பிறகு என்னவாகுமோ ? ; ஐய நீ ன்று செப்புகவே = என் மனைவியே நீ செப்புவாயாக !

 

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-----------------------------------------------------------------------------------------------------



வீரராகவர் பாடல் (05) வாழுமிலங்கைக் கோமானில்லை !

தம்பிக்கு எதிராக கைகளில் வில்லை ஏந்திடலாமா ?

-----------------------------------------------------------------------------------------------------

 

சீர்காழிப் பகுதியை ஆண்ட சிற்றரசன் அபிராமன். அவனுடைய தம்பி அபிராமனுக்கு எதிராகச் செயல்பட்டதால், அவனுடன் போரிட்டு அடக்க முடிவு செய்து, கைகளில் வில்லுடன் போர்க்களம் புக முற்பட்டான் அபிராமன் !

 

இதைக் கேள்விப்பட்ட வீரராகவர், அபிராமனிடம் சென்று பரதனுக்கு எதிராக இராமன் போர் தொடுத்ததில்லை. அபிராமன் தன் தம்பிக்கு எதிராக வில்லைக் கையில் எடுக்கலாமா என்று சொன்ன நல்லுரை அபிராமனின் போர் முடிவைக் கைவிடச் செய்தது !

 

சிற்றரசன்  அபிராமனை இராமாயணக் கதை இராமனோடு ஒப்பிட்டு வீரராகவர் பாடிய பாடல் இதோ:

 

-----------------------------------------------------------------------------------------------------

 

வாழுமிலங்கைக் கோமானில்லை, மானில்லை !

ஏழுமரா மரமோ வீங்கில்லை - ஆழி

அலையடைத்த செங்கை யபிராமா வின்று

சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.

 

-----------------------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

-------------------------

 

(அபி) ராமா ! நீ இலங்கைக் கோமான் இராவணனும் இல்லை; மாய மானை அனுப்பி சீதாபிராட்டியை ஏமாற்றியவனும் இல்லை; ஏழு மரா மரங்களுக்குப் பின்புறம் ஒளிந்திருந்து அம்பு விட்டு வாலியைக் கொன்றவனும் இல்லை ! நீ இராமனில்லை;  உன் பெயர் அபிராமன். சீர்காழி நகருக்குள் கடல் அலை பெருகி வந்தமையால், அதைத் தடுக,  தடுப்புச் சுவர் அமைத்து மக்களைக் காத்தவன் நீ ! அத்தகைய மாட்சிமை பொருந்திய நீ உன் தம்பிக்கு எதிராக  உன் கைகளில்  சிலையை (வில்) எடுக்கலாமா ? சொல் !

 

------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

 

வாழும் இலங்கைக் கோமான் இல்லை = இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நீ இராவணனுமில்லை  ; மானில்லை = மாயமானை அனுப்பி யாரையும் ஏமாற்றியவனும் இல்லை ; ஏழு மரா மரமோ ஈங்கு இல்லை = ஏழு மரா மரங்களும் இங்கு இல்லை ; ஆழி அலை அடைத்த = கடல் அலைகள் பெருகி வந்த போது அதற்குத் தடுப்புச் சுவர் எழுப்பி காப்புச் செய்த நீ (இராமாயணக் காலத்து இராமனில்லை; இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அபிராமன்)  ; செங்கை அபிராமா = சிவந்த கைகளையுடைய அபிராமா ; இன்று = இத்தகைய மாண்புடைய நீ இப்பொழுது ; சிலை எடுத்த ஆறு = தம்பிக்கு எதிராக உன் கைகளில் வில்லை ஏந்தியது ஏன் ; எமக்குச் செப்பு = எனக்குச் சொல்வாயாக !

 

-------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-------------------------------------------------------------------------------------------------------



 

வீரராகவர் பாடல் (04) செஞ்சுடரின் மைந்தனையும் !

 

பரதனையும் இராமனையும் பார் !


-----------------------------------------------------------------------------------------------------


சீகை எனப்படும் சீர்காழியில் வாழ்ந்து வந்த ஒரு சிற்றரசன் இராமன்; இவரது முழுப்பெயர் அபிராமன். இவருடைய தம்பி இவருக்கு எதிராகச் செயல்பட்டதால் தம்பி மீது போர் தொடுக்க எண்ணிக் கிளர்ந்தெழுந்தார் அபிராமன் !

 

இதைக் கேள்விப்பட்ட வீரராகவர் அபிராமனிடம் சென்று, வில் வீரர்களான  கன்னன் (சூரியனின் மகன்), இராவணன், அருச்சுணன் ஆகியோரை நினைத்துக்கொண்டு வில்லைக் கையில் எடுக்காதே !

 

பரதனுக்கு நாட்டைத் தந்த இராமனையும், இராமன் பாதுகையை அரியணை ஏற்றி வைத்துக்கொண்டு நாடாண்ட பரதனையும் எண்ணிப்பார். தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக என்று அபிராமனிடம் எடுத்துச் சொன்னார் !

 

மனம் தெளிவடைந்த அபிராமன் தம்பி மீது போர் தொடுக்கும் திட்டத்தைக் கைவிட்டார் ! வீர்ராகவர் தனது கருத்தை ஒரு வெண்பா மூலம் அபிராமனுக்குத் தெரிவித்தார்.

 

------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்த வெண்பா !

------------------------------------------------------------------------------------------------------

 

 

செஞ்சுடரின் மைந்தனையுந் தென்னிலங்கை வேந்தனையும்

பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே விஞ்சு

விரதமே பூண்டிந்த மேதினியை யாண்ட

பரதனையும் ராமனையும் பார்.

 

------------------------------------------------------------------------------------------------------

  சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------

 

செஞ்சுடரின் மைந்தனையும் தென் இலங்கை வேந்தனையும்

பஞ்சவரில் பார்த்தனையும் பாராதேவிஞ்சு

விரதமே பூண்டு இந்த மேதினியை ஆண்ட

பரதனையும் இராமனையும் பார் !

 

-----------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------------------

 

அபிராமா ! சிறந்த வில் வீரர்களான சூரியதேவனின் மைந்தனாகிய கர்ணனாகவும், இலங்கை மன்னனாகிய இராவணனாகவும், பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனனாகவும் உன்னை  எண்ணிக்கொண்டு உன் தம்பிக்கு எதிராகப் போர் புரிய வில்லினை எடுக்காதே !

 

நாடாளும் உரிமையைப் பரதனுக்கு விட்டுக் கொடுத்த இராமனையும், அண்ணன் இருக்கையில் தான் அரியணையில் அமர்வதா  என்று கூறி அண்ணனின் மிதியடிகளை அரசனின் இருக்கையில் வைத்து, அண்ணன் சார்பாக ஆட்சியைக் கவனித்த பரதனையும் எண்ணிப்பார் !

 

பெருந்தன்மையாக நடந்துகொள்வதில் தான் ஒரு அரசனின் மாட்சிமை உலகிற்கு வெளிப்படும். எனவே உன் தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக !

 

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------------------


செஞ்சுடர் = சூரியன்; மைந்தன் = மகன்; தென்னிலங்கை = தெற்கில் உள்ள இலங்கை நாடு; வேந்தனையும்= இராவணனையும்; பஞ்சவரில் = பஞ்ச பாண்டவரில் ; பார்த்தனையும் = அருச்சுனனையும் ; பாராதே = உன்னை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதே; விரதமே பூண்டு = மனத்தில் உறுதி ஏற்று ; மேதினி = நாட்டை ;

 

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

------------------------------------------------------------------------------------------------------

கன்னன்


வியாழன், ஏப்ரல் 28, 2022

வீரராகவர் பாடல் (03) இல்லெனுஞ் சொல்லறியாத சீகையில் !

ஒரு வாய்க்கே சோறு கிடைக்கவில்லை ! நால்வாய்க்கு எப்படி அளிப்பேன் ?

 

--------------------------------------------------------------------------------------------------

 

இல்லை என்னும் சொல்லை வாயிலிருந்து உதிர்த்து அறியாத வள்ளல் ஒருவன் (இராமன்) சீகை என்னும் சீர்காழியில் வாழ்ந்து வந்தான். அவனைக் காண பாணனாகிய இந்தப் புலவர் சென்றார். இராமனிடம் “யான் யாழ் மீட்டும் பாணன்என்று சொல்லிப் பல்லைக் காட்டி நெளிந்து குழைந்து  இரந்தார் !

 

 

சில நாள்களுக்குப் பசியாற உண்பதற்கு ஒரு சில பொதிகள் அரிசியும் உடுத்துவதற்குத் துணிமணிகளும் அவன் கொடுத்து அனுப்புவான் என்று அவர் எதிர்பார்த்தார். அவனோ அவற்றைக் கொடுக்காமல் தொங்குகின்ற தும்பிக்கையுடைய  (நால்வாய்) யானை ஒன்றைக் கொடுத்தான் !

 

 

திகைத்துப் போனார் புலவர்.  பசியாற உண்பதற்கு எனது ஒருவாய்க்குச் சோற்றுக்கே வழியில்லாத   நான் (நாலு வாய்க்கு - சிலேடைப் பொருள், நால் வாய் = தொங்கு வாய், அதாவது யானை) நால்வாய்க்கு இரை தர என்ன செய்வேன் ?  கொடை என்ற பெயரில் யானையைத் தந்து கொல்கிறானே இந்த வள்ளல் - என்று பாடுகிறார் புலவர் !


-------------------------------------------------------------------------------------------------

இதோ பாருங்கள் பாடலை !

-------------------------------------------------------------------------------------------------

 

இல்லெனுஞ் சொல்லறியாத சீகையில் வாழ்,

……..தன்னைப்போய்  யாழ்ப்பாணன் யான்

 

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும்,

……..பழந்தூசும் பாலியாமல்

 

கொல்ல நினைந்தே தனது நால்வாயைப்,

………பரிசென்று கொடுத்தான், பார்க்குள்

 

தொல்லையென தொருவாய்க்கு நால்வாய்க்கு,

……… இரையெங்கே துரப்புவேனே!

 

-------------------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:

 -------------------

இல்” எனுஞ் சொல்றியாத = தன் வாயிலிருந்து “இல்லை” என்னும் சொல்லை உதிர்த்து அறியாத ;  சீகையில் வாழ் = சீகை என்னும் சீர்காழியில் வாழ்கின்ற; தன்னைப்போய் = வள்ளலாகிய இராமன் என்பவரிடம் சென்று; யாழ்ப்பாணன் யான் = யாழ் மீட்டுகின்ற பாணனாகிய நான்;  பல்லை விரித்து இரந்தக்கால் = பற்களைக் காட்டி நெளிந்து குழைந்து உதவி கோரியபோது; 

 

வெண்சோறும் பழந்தூசும் பாலியாமல் = சில நாள்கள் வயிறார உண்பதற்கு சில பொதிகள் அரிசியும் துணிமணிகளும் தராமல்; பார்க்குள் தொல்லை து  ருவாய்க்கு = இந்தப் பூமியில் என் ஒரு வாய்க்கே உணவின்றி அல்லற்பட்டு வருகையில்; நால்வாய்க்கு = எனக்குப் பரிசாக இந்த வள்ளல் கொடுத்திருக்கும் நால்வாய் எனப்படும் யானைக்கு; இரையெங்கே துரப்புவேனே = இரை அளிப்பதற்கு  நான் என் செய்வேன் ?

 -------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

 -----------------


சீர்காழியில் வாழ்ந்து வந்த இராமன் என்பார் வள்ளல் தன்மை மிக்கவர். அவரிடம் யாழ் மீட்டும் புலவர் (பாணன்) ஒருவர் சென்று தனக்கு உதவி செய்யக் கோரினார்.  அந்த வள்ளல் யானை ஒன்றை புலவருக்குக் கொடுத்தார். தன் ஒரு வயிற்றுக்கே சோறு கிடைக்காத போது யானையைக் கட்டித் தீனி போடுவது எப்படி என்று அவர் கலங்குகிறார் !

 --------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

 ---------------


வள்ளலின் கொடைத் திறத்தை அந்தகக் கவி வீரராகவர் நகைச் சுவை மிக்க பாடலாக வெளிப்படுத்தியுள்ளார் !

 

---------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.ஆ: 2053, மேழம் (சித்திரை) 15]

{28-04-2022}

---------------------------------------------------------------------------------------------------

நால்வாய்