name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான்மணிக்கடிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 23, 2021

நான்மணிக் கடிகை (27) அஞ்சாமை அஞ்சுதி !

விளம்பி நாகனார் என்னும் சங்க காலப் புலவர் படைத்த நூல் நான்மணிக்கடிகை !  முழுவதும் வெண்பாக்களால் ஆன இந்நூலில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இடம்பெற்றுள்ளன ! இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------

பாடல் எண்: (27)

--------------------------

அஞ்சாமை   அஞ்சுதி   ஒன்றின்   தனக்கொத்த

எஞ்சாமை   எஞ்சல்   அளவெல்லாம்    நெஞ்சறியக்

கோடாமை   கோடி   பொருள்பெறினும்   நாடாதி

நட்டார்கண்   விட்ட   வினை.

------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

அஞ்சுதற்குரிய  செயல்களைக்  கண்டு  அஞ்சவேண்டும்; அதற்கு மாறாக  அஞ்சாமலிருப்பது தவறு; எனவே அதைக்   கைவிடுவாயாக !

 

பிறருக்கு  உதவி  செய்யும்  நற்பண்பினை  எந்நாளும்   கைக்கொள்வாயாக;  அப்பண்பு உன்னைவிட்டு    நீங்க  விடாதே !

 

மனசாட்சிக்கு  எதிராக  நடுநிலை  தவறி ஒருசார்பாக  நடந்துகொள்ளும்  தவறைச் செய்யாதே;  நடு நிலையைப் போற்றுவாயாக !

 

அதுபோல்,  பெருஞ் செல்வம் உன்னை வந்து அடைவதாயினும்  கூட, நண்பர்கள் மீது ஐயம் கொண்டு  அவர்களிடம்  ஒப்படைத்த  செயலைப் பற்றி ஆராய்ச்சி செய்யாதே !

-----------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

அஞ்சாமை = அஞ்சுதற்குரிய செயல்களில் அஞ்சாமலிருக்கும்   பண்புக்கு ; அஞ்சுதி =  நீ அஞ்சுவாயாக ; ஒன்றில் = ஒரு செயலில் ; தனக்கு ஒத்த = தனக்குக் கூடுமான ; அளவு எல்லாம் = அளவுக்கு ; எஞ்சாமை = பிறருக்கு உதவி செய்யும் பண்பினை ; எஞ்சல் = குறைய விடாதே ; நெஞ்சு அறிய = உள்ளமறிய ; கோடாமை = ஒருசார்பாக ஒழுகாச் செயலை ; கோடி = கொள்வாயாக ; பொருள் பெறினும் = எத்துணைப் பெருஞ்  செல்வம் கிடைப்பதாயினும் ;  நட்டார்கண் = நண்பர்களின் பொறுப்பில் ;  விட்ட வினை = ஒப்படைத்த செயல் பற்றி ; நாடாதி =  ஐயம் கொண்டு ஆராய்ச்சி செய்யாதே.

------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------

அஞ்சவேண்டிய  செயல்களுக்கு அஞ்சுக !  உன்னால் இயன்ற அளவுக்குப் பிறருக்கு உதவி செய்வதில்  பின்வாங்காதே ! எதிலும் நடுநிலை தவறி ஒருசார்பாக நடந்து கொள்ளாதே !  நண்பர்களிடம் ஒப்படைத்த பணியைப்  பற்றி  வீண் ஆராய்ச்சி செய்யாதே !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கடகம்(டி),06]

{22-07-2021}

-------------------------------------------------------------------------------------



 

சனி, ஜூலை 10, 2021

நான்மணிக் கடிகை (26) நகைநலம் நட்டார் கண் நந்தும் !

 

பதினெண் கீழ்க் கணக்கு என்னும் இலக்கிய வகைப்பாட்டின் கீழ்  வரும் நூல் நான்மணிக்கடிகைஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைக்கும் அறநெறி இலக்கியம். இதைப் படைத்தவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்:(26)

-------------------------

நகைநலம்   நட்டார்கண்   நந்தும்சிறந்த

அவைநலம்  அன்பின்  விளங்கும்;  விசைமாண்ட

தேர்நலம் பாகனாற்  பாடெய்தும்;  ஊர்நலம்

உள்ளானால்  உள்ளப் படும்.

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------

முகமலர்ச்சியும், குளிர்ந்த பார்வையும் தான் நண்பர்களிடையே நட்புணர்வைச் செழித்து வளரச் செய்யும் !

 

பலதரப்பட்ட  மக்கள் குழுமியுள்ள அவையில் நாம் வெளிப்படுத்தும் அன்பு ஒன்றே நமக்கு நன்மதிப்பை ஈட்டித் தரும் !

 

தேர்ப்படையால் ஒரு மன்னன் பெறுகின்ற நன்மை,  அதை இயக்கும் தேரோட்டியின்  மதிநலத்தைப்  பொறுத்து உயர்ந்து  விளங்கும் !

 

அதுபோல், ஊர் மக்கள் பெறும் நன்மை அந்த ஊரை  ஆள்கின்ற அரசனின் திட்டங்களால் தான் செழித்துச் சிறக்கும் !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

நகை நலம் = முகமலர்ச்சியின் நன்மை ; நட்டார்கண் = நண்பர்களிடத்தில் ; நந்தும் = சிறக்கும் ; சிறந்த = மேலான ; அவை நலம் = அவையினால் பெறும் நன்மை ; அன்பின் விளங்கும் = நமது அன்பினால் சிறக்கும் ; விசை மாண்ட = விரைவு மிகுந்த ; தேர் நலம் = தேர்ப் படையால் கிடைக்கும் நன்மை ; பாகனால் = தேரோட்டியின் மதி நலத்தால் ; பாடு எய்தும் = சிறப்படையும் ; ஊர் நலம் = குடி மக்கள் பெறும் நன்மைகள் ; உள்ளானால் = அவ்வூரை ஆளும் அரசனால் ; உள்ளப்படும் = மதிக்கப்படும்.

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

முகமலர்ச்சியும் குளிர்ந்த பார்வையும்  நட்பை வளர்க்கும்அவையில்  நாம் பெறும் மதிப்பு  நமது அன்பினால்  உயர்வடையும்  !  தேர்ப்படையின் நன்மை பாகனின் மதி நலத்தால்  சிறக்கும்  ! குடிமக்கள் பெரும் நன்மை  மன்னனின்  திட்டங்களால் மேம்பாடு அடையும் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,ஆடவை(னி),26]

{10-07-2021}

------------------------------------------------------------------------------------------------------------





 

புதன், ஜூன் 30, 2021

நான்மணிக் கடிகை (25) மலைப்பினும் வாரணம் தாங்கும் !

 

கி.பி,2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் விளம்பி நாகனார் என்பவரால் படைக்கப் பெற்றது. கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்ட இந்நூல் அறத்தை வலியுறுத்துகிறது !. இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்; (25)

--------------------------

 

மலைப்பினும்   வாரணம்   தாங்கும்    அலைப்பினும்

அன்னேயென்   றோடும்    குழவி,  சிலைப்பினும்

நட்டார்  நடுங்கும்  வினை  செய்யார்,  ஒட்டார்

உடனுறையும்   காலமும்   இல்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

 

பாகன் தன்னைக்  கவை முள் கருவி கொண்டு குத்தி  ஒறுத்தாலும் , அவனை வெறுக்காமல், யானையானது  அவனைச் சுமந்தே  செல்கிறது  !

 

தன்னை அடித்து வருத்தினாலும்,  அதை மனதில் கொள்ளாது , குழந்தையானதுஅம்மாஎன்று அழுது கொண்டே தாயின் பின்னால் தான் ஓடுகிறது  !

 

தவறு கண்டு சினந்து உரைத்தாலும் , உண்மையான நண்பர்கள் நமக்கு எந்நாளும் தீமை செய்யத் துணிவது  இல்லை  !

 

ஆனால், பகைவர்களோ தமக்குள் வேற்றுமைகளை  மறந்து  ஒன்றாகக் கூடி வாழ்தல் என்பது  இவ்வுலகில் ஒருபோதும்  இருந்ததில்லை  !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

மலைப்பினும் = பாகன் தன்னை ஒறுத்தாலும் ; வாரணம்  தாங்கும் = யானை அவனைச் சுமந்து செல்லும் ;  அலைப்பினும் = தன்னை அடித்து வருத்தினாலும் ; குழவி = குழந்தை ; அன்னே என்று ஓடும் = “அம்மாஎன்று அழுது கொண்டே அவளருகில் ஓடும் ; சிலைப்பினும் = தவறு கண்டு சினந்து கொண்டாலும் ; நட்டார் = நண்பர் ; நடுங்கும் வினை செய்யார் = நாம் நடுங்கும்படித் தீயவை செய்ய மாட்டார் ; ஒட்டார் = பகைவர்கள் ; உடன் உறையும் காலமும் = தம்முள் ஒன்று கூடி நீங்காமல் வாழும் காலமும் ; இல் = ஒருபோதும் இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------

 

யானையைப் பாகனும், குழந்தையைத் தாயும்,   நண்பர்களை நண்பர்களும்,  வருத்தினாலும் ஒருவரையொருவர் தழுவியே நிற்பர்; ஆனால் பகைவர்களோ  எக்காலத்தும் தமக்குள் ஒன்றுபட்டு  நிற்பதில்லை !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி) 16]

{30-06-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

 



நான்மணிக் கடிகை (24) புகழ் செய்யும் பொய்யா விளக்கம் !

 

கடைச்சங்க காலத்து நூலான நான்மணிக் கடிகை, கடவுள் வாழ்த்து உள்பட மொத்தம் 106 வெண்பாக்களை உடையது. விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்த  இவ்விலக்கியம் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று ! இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (24)

--------------------------

புகழ்செய்யும்  பொய்யா  விளக்கம்  – இகந்தொருவர்ப்

பேணாது  செய்வது  பேதைமை    காணாக்

குருடனாச்  செய்வது  மம்மர்இருள்  தீர்ந்த

கண்ணராச்  செய்வது கற்பு.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

 

பொய்யாமை   என்னும்  ஒளியில் நடை பயிலத்  தொடங்கினால் , அது புகழைக் கொண்டு வந்து சேர்க்கும் ! 

 

முறை கடந்து, ஒருவரையும் மதியாது,  அறியாமை வழிச் செல்லல்  தீமையைக் கொண்டு வந்து சேர்க்கும் !

 

கல்வியறிவற்ற மனிதனின் மதி மயக்கம்,  இரு  கண்களிருந்தும் அவனைக் குருடனாகச் செய்துவிடும் !

 

ஆனால்,  கல்வியானது   ஒரு மனிதனின் குருட்டுத் தனத்தை  அழித்து அவனை அறிவாளி  ஆக்கிவிடும் !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

 

பொய்யா விளக்கம் = பொய்யாமையாகிய ஒளி;  புகழ் செய்யும் = எங்கும் புகழை உண்டாக்கும்; பேதைமை = அறியாமை;   இகந்து = முறை கடந்து ; ஒருவர்ப் பேணாது = ஒருவரையும் மதியாமல்;  செய்வது = தீயவை செய்வதாம்;  மம்மர் =  கற்றறிவில்லா மயக்கம்;  காணா = வழி காணாத;  குருடனாச் செய்வது = குருடனாகச் செய்வதாம்;  கற்பு = கல்வியறிவு;  இருள் தீர்ந்த = குருடு நீங்கிய; கண்ணராச் செய்வது  = கண்ணொளி உடையராகச் செய்வதாம்.

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------

 

பொய்யாமை புகழையும்,  அறியாமை  தீயவை செய்தலையும், கல்லாமை அறியாமையையும்,  கல்வியானது  அறிவையும் உண்டாக்கும் !

-------------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை;


வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி) 16]

{30-06-2021}

-------------------------------------------------------------------------------------------------------------