name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (27) கூடாரை வெல்லும் சீர் !

எங்கள் நோன்புக்குப் பரிசு கொடு; பெற்றுக் கொள்கிறோம் ! 


கூடாரை வெல்லும்சீர்  கோவிந்தா உன்றன்னை,
.........பாடிப்  பறைகொண்டு யாம்பெறும்  சம்மானம்,
நாடு  புகழும்  பரிசினால்  நன்றாகச்
.........சூடகமே  தோள்வளையே  தோடே செவிப்பூவே
பாடகமே  என்றனைய  பல்கலனும்  யாமணிவோம்
.........ஆடை உடுப்போம்  அதன்பின்னே பாற்சோறு
மூட  நெய் பெய்து முழங்கை  வழிவாரக்
.........கூடி இருந்து  குளிர்ந்துஏல்ஓர்  எம்பாவாய் !

----------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

பகைவர்களை வெல்லுகின்ற கோவிந்தா ! உன்னைப் பாடிப் பாடி நாங்கள் மகிழ்கின்றோமே, இது எங்களுக்குப் போதும். ஆனாலும், உன் கையால்  ஏதாவது சன்மானம் தர விரும்புகிறாயா ?  மெத்தச் சரி ! அள்ளிக் கொடு ! எங்கள் நோன்புக்குப் பரிசு கொடு; வாங்கிக் கொள்கிறோம் ! கைக்குச் சூடகம் கொடு; தோளுக்கு வளையல் கொடு; காதுக்குத் தோடு கொடு; மேல் செவிக்குக் கொப்புக் கொடு; எல்லாவற்றையும் அணிந்து கொள்கிறோம் ! புதிய பட்டாடை அணிகிறோம். அதன் பிறகு நிறைய நெய் ஊற்றிச் சர்க்கரைப் பொங்கல் செய்து உனக்குப் படைக்கிறோம் ! அந்த நெய் முழங்கை வழியாக வடியும்படி, கூடியிருந்து சாப்பிடுகிறோம் ! கொடு ! கொடு !

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
---------------------------

கூடாரை = பகைவரை; உன்றன்னை = உன்னை; பாடிப் பறை கொண்டு = இனிய சொற்களைக் கொண்டு போற்றிப் பாடி; சம்மானம் = வெகுமதி; நாடு புகழும்  பரிசினால்  நன்று  ஆக = ஊரே புகழ்ந்து பேசி மெச்சுமளவுக்கு; சூடகமே = கைகளுக்கு சூடகம் (BRACELET) ; தோள் வளையே = மேற் கைகளுக்கு நெளிவளையல் ; தோடே = காதுகளுக்குத் தோடு; செவிப் பூவே = செவி மடலுக்கு பொற்பூ; பாடகமே = கால்களுக்குப் பாடகம் ; என்று = என ; அனைய = அனைத்து; பல்கலனும் = அணிகலன்களும்; யாம் அணிவோம் = நாங்கள் அணிந்து கொள்வோம்; மூட நெய் = உடலுக்குக் குளிர்ச்சி தரும் நெய் ; வழிவார = வழிந்து வர; கூடியிருந்து குளிர்ந்து = ஒன்றாகக் கூடி இருந்து

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை :
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 26]
. (10-01-2019)
------------------------------------------------------------------------------------------------------
       
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !    

------------------------------------------------------------------------------------------------------




திருப்பாவை - (26) மாலே ! மணிவண்ணா !

திருமாலே ! மணிவண்ணா ! என்ன வேண்டும்என்று கேட்கிறாயா ?


மாலே  மணிவண்ணா  மார்கழிநீர்  ஆடுவான்
.........மேலையார்  செய்வனகள்  வேண்டுவன  கேட்டியேல்
ஞாலத்தை  எல்லாம்  நடுங்க  முரல்வன
.........பாலன்ன  வண்ணத்து  உன்பாஞ்ச சன்னியமே
போல்வன  சங்கங்கள்  போய்ப்பாடு  உடையனவே
.........சாலப்  பெரும்பறையே  பல்லாண்டு  இசைப்பாரே
கோல  விளக்கே  கொடியே  விதானமே
.........ஆலின்  இலையாய்  அருளேலோர்  எம்பாவாய் !

---------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

திருமாலே ! மணிவண்ணா ! மார்கழி நீராடுவதற்கு என்ன வேண்டும், என்று கேட்கிறாயா ? வேறொன்றும் வேண்டாம்; பூமியே அதிரும்படி ஒலிக்கிறதே, உன் சங்குபாஞ்ச சன்னியம்அதுபோல சில சங்குகள் வேண்டும். மிகப் பெரிய இசைக்கருவிகள் வேண்டும். அவற்றை முழக்கி, அகங்காரத்தை விலக்கி நாங்கள் பல்லாண்டு பாட வேண்டும் ! கோல விளக்கே ! கொடியே ! விதானமே ! ஆலிலைக் கண்ணா ! அருள் புரிய மாட்டாயா ?

----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

மார்கழி நீராடுவான் = மார்கழி நீராடுவதற்கு; மேலையார் = இனிமேல்; செய்வனகள் வேண்டுவன = என்ன செய்ய வேண்டும் என ; கேட்டியேல் = கேட்பாயானால்; ஞாலத்தை = இந்த உலகத்தை நடுங்க முரல்வன = நடுக்கம் கொள்ளச் செய்யும் வகையில் உரத்து முழங்கும்; பால் அன்ன = பால் போன்ற வெள்ளையான ; உன் பாஞ்சசன்னியமே = உன் கைகளில் தவழும் சங்கு ; போல்வன சங்கங்கள் = அதைப் போன்ற சில சங்குகள் ; போய்ப் பாடு உடையனவே = கொண்டு முழங்க வேண்டும்; சாலப் பெரும் பறையே = பெரிய பறை போன்ற இசைக் கருவிகளை இயக்கி; பல்லாண்டு இசைப்பாரே = உன்னை வாழ்த்தி பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவெனப் பாட வேண்டும்; கோல விளக்கே = அழகிய திருவிளக்கு போன்றவனே ! கொடியே = அலங்காரக் கொடிபோன்ற நெடுமாலே ! விதானமே = சுடர்விடும் பன்மணித் திரளே ! ஆலின் இலையாய் = ஆலிலை மேல் பாற்கடலில் துயின்ற மணிவண்ணா ! அருள் = அருள் புரிவாயாக ! ஏல் ஓர் எம்பாவாய் = வாருங்கள் பாவையரே கண்ணனைப் பாடி வணங்குவோம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
  வை. வேதரெத்தினம்,
ஆட்சியர்.
திருப்பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 25]
(09-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
    
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------



திருப்பாவை - (25) ஒருத்தி மகனாய் !

தேவகி மகனாகச் சிறையிலே பிறந்தாய் !


ஒருத்தி  மகனாய்ப்  பிறந்து  ஓரிரவில்
.........ஒருத்தி  மகனாய்  ஒளித்து  வளரத்
தரிக்கிலான்  ஆகித்  தான்தீங்கு  நினைந்த
.........கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே ! உன்னை
.........அருத்தித்து  வந்தோம்  பறைதருதி  யாகில்,
திருத்தக்க  செல்வமும்  சேவகமும்  யாம்பாடி,
.........வருத்தமும் தீர்ந்து  மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய் !

---------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

தேவகி மகனாகச் சிறையிலே பிறந்தாய்; யசோதை மகனாக ஆயர் பாடியில் மறைந்து வளர்ந்தாய்; அது தாளாது, தீங்கு செய்தான் உன் மாமன் கம்சன். அவனுக்கு நெருப்பாக நின்றாய். உனக்கு ஆரத்தி எடுத்து அருச்சித்து வழிபட வந்திருக்கிறோம். எங்கள் நோன்பின் நோக்கம், உன்னைப் பாடிப் பணிவதே ! நீ  எங்களை ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு அருளினால், நாங்கள் செல்வம் பெறுவோம்; சேவை செய்யும் வாய்ப்பினைப் பெறுவோம்; எங்கள் கவலை எல்லாம் தீரும்; ஏற்றுக் கொள் கண்ணா !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
---------------------------

ஒளித்து வளர = மறைந்து வளர்ந்தாய்; தரிக்கிலான் ஆகி = தாங்கிக் கொள்ள மாட்டாதவனாக ஆகி; தான் தீங்கு நினைந்த கருத்தை = கம்சன் உனக்குத் தீங்கு செய்த செய்கையை; பிழைப்பித்து = குற்றமாகக் கருதி; கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற = கம்சனுக்கு நெருப்பாக நின்ற; நெடுமாலே = மணிவண்ணா; அருத்தித்து = யாசித்து; வந்தோம் = வழிபட  வந்திருக்கிறோம்;  பறை தருதியாகில் = அருள் செய்வாயாகில்; திருத் தக்க செல்வமும் = உன் பேரருளாகிய செல்வமும் (பெறுவோம்); சேவகமும் =  உனக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பையும் (பெறுவோம்); யாம் பாடி வருத்தமும் தீர்ந்து = உன்னைப் பாடி வணங்கி வருத்தம் தீர்ந்து; மகிழ்ந்து ஏல் ஓர் = மகிழ்ச்சி அடைவோம். எம்பாவாய் = பாவையரே வாருங்கள் கண்ணனைப் பாடி வணங்கி மகிழ்வோம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 24]
(08-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
     
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------