name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (24) அன்றிவ் வுலகம் அளந்தாய் !

இவ்வுலகத்தை வாமனனாய் வந்து அளந்தாய் !


அன்றுஇவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
.........செங்குன்றத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி !
.........கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி !
குன்று குடையாய் எடுத்தாய்  குணம்போற்றி !
.........வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !
என்றென்றுன்  சேவகமே  ஏத்திப்  பறைகொள்வான்,
.........இன்றுயாம்  வந்தோம்  இரங்கேலோர் எம்பாவாய் !


-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

அன்று இவ்வுலகத்தை வாமனனாய் வந்து அளந்தாய்; இராமனாக இலங்கைக்குச் சென்று வென்றாய்;  சகடாசுரனை உதைத்தாய்; கன்றின் வடிவெடுத்து வந்தான் வத்சாசுரன்,; கன்றைத் தூக்கி வீசி அவனைக் கொன்றாய் ! கோவர்த்தனகிரியைக் குடையாக எடுத்தாய் ! எதிரியை வெல்லுவது உன் கையில் உள்ள வேல் ! என்றும் உனக்குப் பணி செய்து  புகழ் பெறவே இன்று நாங்கள் வந்திருக்கிறோம். அதற்கு இடம் கொடு ! எம்மை ஏற்றுக் கொள் !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

இவ்வுலகம் அளந்தாய் = வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி மண் கேட்டு, இவ்வுலகத்தை ஒரு அடியாலும், மேலுலகை இன்னொரு அடியாலும் அளந்து, மூன்றாவது அடியை மாவலியின் தலை மீது வைத்து அழுத்தி அவனைக் கொன்றவனே ! அடி போற்றி = உன் காலடிகளை வணங்கிப் போற்றுகிறோம் ! .தென்னிலங்கை சென்றங்கு செற்றாய் = தெற்கே உள்ள இலங்கைக்குச் சென்று அங்கு இராவணனைப் போரில் வென்று அழித்தாய் ! திறல் போற்றி = உன் வெற்றியைப் போற்றி வணங்குகிறோம் ! பொன்றச் சகடம் உதைத்தாய் = சக்கர வடிவம் எடுத்து வந்த சகடாசுரனைக் காலால் உதைத்துக் கொன்றாய் ! புகழ் போற்றி =  உன் புகழைப் போற்றி வணங்குகிறோம் ! கன்று குணிலா வெறிந்தாய் = கன்றின் உருவத்தில் வந்த வத்சாசுரனைக் குறுந்தடியாக்கித் தூக்கி எறிந்து கொன்றவனே ! உன் கழல்களைப் போற்றி வணங்குகிறோம் ! மழை கொட்டோ கொட்டென்று கொட்டி ஊழிப் பெருவெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஆயர் குலத்தை வருத்தியபோது, கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்து அவர்களைக் காத்தவனே ! உன் அருட்குணத்தைப் போற்றி வணங்குகிறோம் ! பகைவர்களை எல்லாம் வென்றொழிக்கும் உன் கையிலுள்ள வேலினைப் போற்றி வணங்குகிறோம்! என்றென்றும் உன் தாளடியில் கிடந்து பணி செய்ய எங்களுக்கு வரமருள்வாய் ! இதற்காகவே இன்று இங்கு வந்துள்ளோம்! மனம் இரங்கிடுவாய்  மணிவண்ணா !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 23]
(07-01-2019)

-------------------------------------------------------------------------------------------------------------
      
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------





திருப்பாவை - (23) மாரி மலை முழஞ்சில் !

குகையிலே உறங்கிய சிங்கம்  விழித்து எழுந்தது !


மாரி  மலைமுழஞ்சில்  மன்னிக்  கிடந்துறங்கும்
.........சீரிய  சிங்கம்  அறிவுற்றுத்   தீவிழித்து
வேரி  மயிர்பொங்க  எப்பாடும்  பேர்த்துதறி
.........மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா  போலேநீ  பூவைப்பூ  வண்ணாஉன்
.........கோவில்நன்  றிங்கனே  போந்தருளிக் கோப்புடைய
சீரிய  சிங்கா  சனத்திலிருந்து   யாம்வந்த
.........காரிய  மாராய்ந்து  அருளேலோர்   எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------
     
பொருள்:-
---------------

அதோ எங்கள் கண்ணன் எழுந்து வந்துவிட்டான்.  மழைக் காலத்தில் குகையிலே உறங்கிய சிங்கம் கதுமென விழித்து எழுந்தது; அதன் பிடரி மயிரைச் சிலிர்த்தது; நிமிர்ந்து பார்த்தது; விண்ணைப் பார்த்து உரத்து முழங்கியது; புறப்பட்டது ! 

அதுபோல வந்துவிட்டாயேபூவையர்க்கெல்லாம் பூப்போன்ற கண்ணா ! உன் கோயிலிலிருந்து மெதுவாக வந்து அரண்மனையில் உள்ள மாணிக்க அரியாசனத்தில் உட்கார் ! அதன் பிறகு நாங்கள் வந்திருப்பதன் காரணத்தைக் கேட்டு அருள் புரி ! கண்ணன் வரும்வரை அவனைப் போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள் பாவையரே !

---------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

மாரி = மழைக்காலத்தில்; மலை முழைஞ்சு = மலையில் உள்ள குகை;  மன்னி = (நிலையாக) நெடு நாள்களாக;  அறிவுற்று = விழித்தெழுந்து; தீ விழித்து = தீப்பொறி பறக்கும் கண்களால் பார்த்து; வேரி மயிர் பொங்க = மெல்லிய மணம் வீசும் பிடரி மயிரைச் சிலிர்த்து;  எப்பாடும் பேர்த்து உதறி = மறுபடியும் தலையை ஆட்டிப் பிடரியைக் குலுக்கி உதறி; மூரி நிமிர்ந்து = சோம்பல் தீரத் தலையைச் ஆட்டிச் சிலிர்த்து; முழங்கி = உரத்து ஒலி எழுப்பி முழக்கமிட்டு (கர்ஜித்து), புறப்பட்டுப் போதருமாப் போல = புறப்பட்டு வருதல் போல்; பூவைப் பூவண்ணா = மகளிர் மனம் கவரும் காயா மலர் வண்ணனே; உன் கோயில் = உன் கோயிலிலிருந்து ; நன்று இங்ஙனே = நல்லபிள்ளையாக உன் அரண்மனைக்கு;  போந்தருளி = எழுந்தருள்வாய்; கோப்பு உடைய = பன்மணிகள் கோத்து அழகாகத் திகழும்; சீரிய சிங்காசத்திலிருந்து = பெருமை மிகு அரியாசனத்தில் அமர்ந்து ; யாம் வந்த காரியம் ஆராய்ந்து = நாங்கள் வந்திருக்கும் நோக்கம் அறிந்து; அருள் = அருள் புரிவாயாக ! ஏல் ஓர் எம்பாவாய் = அதுவரைக் கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவோம், வாருங்கள் பாவையரே !

-------------------------------------------------------------------------------------------------------

முழைஞ்சு = மலைக் குகையை குறிக்கும் சொல். இந்த புதிய சொல்லை மனதில் இருத்துங்கள் நண்பர்களே ! முழங்கி = விண்ணைப் பார்த்து உரத்து ஒலி எழுப்பி (முழங்கி என்று பொருள்). சிறு வயதிலிருந்து நமக்குசிங்கம் கர்ஜிக்கும்என்று தான் சொல்லித் தந்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இனிமேல் ”கர்ஜிக்கும்” என்பதை விட்டு விட்டுமுழங்கும்என்று சொல்லிப் பழகுவோம்.

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 22]
{06-01-2019}

------------------------------------------------------------------------------------------------------
     
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------




திருப்பாவை -(22) அங்கண்மா ஞாலத்து !

      உன் காலடியில் வந்து  கூடிக் கிடப்பார்கள் !


அங்கண்மா ஞாலத்து  அரசர்  அபிமான
.........பங்கமாய்  வந்துநின்  பள்ளிக்கட்  டிற்கீழே,
சங்கமிருப்  பார்போல்  வந்து தலைப்பெய்தோம் !
.........கிண்கிணி  வாய்ச்செய்த  தாமரைப் பூப்போல,
செங்கண்  சிறுச்சிறிதே  எம்மேல்  விழியாவோ !
..........திங்களும்  ஆதித்  தனும்எழுந்  தாற்போல்
அங்கணிரண்  டும்கொண் டெங்கள்மேல்  நோக்குதியேல்,
.........எங்கள்மேற்  சாபம்  இழிந்தேலோ  ரெம்பாவாய் !

----------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

மன்னாதி மன்னரெல்லாம் தங்கள் அரசபோகத்தைக் கைவிட்டு, கைகட்டி வாய் புதைத்து உன் காலடியில் வந்து  கூடிக் கிடப்பார்கள் !  அவர்களைப் போலவே நாங்களும், எல்லாவற்றையும் வெறுத்து விட்டு, நீயே கதி என்று நம்பி வந்து விட்டோம் ! உனது திருவிழிகள், காற் சதங்கை வாய் பிளந்தாற்போல்  பாதியாவது  திறந்து பாராதோ ! தாமரைப் பூப் போன்ற உன் சிவந்த விழிகள் மெல்லத் திறந்து எம்மைப் பாராவோ ? திங்களும் கதிரவனும் ஒரே நேரத்தில் எழுந்து வந்ததைப் போல ஒளி வீசும், உன் இரண்டு கண்களும் எங்களைப் பார்த்தால், நாங்கள் செய்த பாவங்களும் தீவினைகளும்  பறந்தோடிப் போய்விடுமே ! கொஞ்சம் கண்களைத் திற கண்ணா !  ஏல் ஓர் எம்பாவாய் = வாருங்கள் பாவையரே ! நம் கண்ணனைப் பாடி வணங்குவோம் !

----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

அங்கண் = அவ்விடத்தில்; மாஞாலத்து = இந்தப் பரந்த பூமியின் ; அரசர் = மன்னர்கள்; அபிமான பங்கமாய் = செருக்கை எல்லாம் விட்டொழித்து; வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே = வந்து நீ துயில் கொள்ளும் கட்டிலின் கீழே; சங்கம் = கூடி ; இருப்பார் போல் = இருப்பதைப் போல; வந்து = நாங்களும் இங்கு வந்து; தலைப் பெய்தோம்= கூடி இருக்கிறோம்; கிங்கிணி = கால்களில் கட்டும் சதங்கை; வாய்ச் செய்த = சதங்கையின் சிறிய வாய் போல, தாமரைப் பூப்போல = தாமரை மலர் போல; செங்கண் = உன சிவந்த விழி இரண்டும் ; சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ = சிறிதாவது  திறந்து எம்மைப் பார்க்கலாகாதோ !;  திங்களும் ஆதித்தனும் = சந்திரனும் சூரியனும்; எழுந்தாற்போல் = ஒருசேர எழுந்து வந்தாற் போல; அங்கண் = உன் அழகிய கண்கள்; இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் = இரண்டையும் மெல்லத் திறந்து எங்களைப் பார்த்தாயானால்; எங்கள் மேற் சாபம் = நாங்கள் செய்த பாபங்களும் தீவினைகளும் ; இழிந்து = பறந்தோடிப் போய்விடுமே கண்ணா ! ஏல் ஓர் எம்பாவாய் = நம் கண்ணனை போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள் பாவையரே !

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2049, சிலை, 21.]
(05-01-2019)

-----------------------------------------------------------------------------------------------------
       
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------