name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: எட்டுத்தொகை
எட்டுத்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எட்டுத்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (03) ஐங்குறுநூறு !

இந்நூலின் செய்யுள்கள் மொத்தம் ஐந்நூறு ! ஆனால்129, 130 ஆகியவை  மறைந்து போயின.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளில் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறை பெற்ற நூறு நூறு பாடல்களைத் தனித் தனிப் பெற்றுள்ளமையால்ஐங்குறுநூறுஇப் பெயர்பெற்றது. இதில் அமைந்த பாடல்கள் அகவற்பாவின் கீழ் எல்லையாகிய மூன்று அடிச் சிறுமையையும் ஆறு அடிப் பேரெல்லையும் கொண்டவை !

    
நூலுக்குப் புறம்பாகிய இறை வணக்கப் பாடலைப் படியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்னும் ஐவராவார் !

    
ஒவ்வொரு நூறும், பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக உள்ளது. இவற்றுள் ஒவ்வொன்றும்பத்துஎன்று குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு பத்தும் தனித் தனியான கட்டுக் கோப்பு உடையது !

    
இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் என்றும், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்றும் பழங் குறிப்பினால் தெரியவருகிறது !

    
இந்நூலின் செய்யுள்கள் மொத்தம் 500 ஆகும். ஆனால், 129, 130 ஆம் செய்யுள்கள் மறைந்து போயின. இந்நூலில் பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்கள் சில, சிறப்பாகக் காணப்படுகின்றன !

    
இந்நூலில் உள்ள இனிய பகுதி ஒன்றைப் பார்ப்போம் ! தலைவியைப் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவன், தலைவியின் தோழியை நோக்கி, “யான் பிரிந்திருந்த போது நீங்கள் எவ்வாறு அதைத் தாங்கிக் கொண்டீர்கள் ?” என்று கேட்டான் !

    
அதற்குத் தோழி கூறும் மறுமொழிகள் நினைந்து நினைந்து இன்புறத்தக்கன. அவள் சொல்கிறாள், “ நாட்டில் பருவமழை தவறாமற் பெய்க; வயல் விளைக; இரவலர் வருக; அறம் பல சிறக்க; தீயன கெடுக; பசி இல்லையாகுக; நோய் ஒழிக; அரசன் முறை (நீதி) செய்க என்று எங்கள் தலைவி வேண்டிக் கொண்டிருந்தாள். யானும் என் தோழியரும், இத்தகைய கற்பரசியினிடத்து நினது அன்பு பெருகுவதாகுக என்று வேண்டினோம்” !

    
பண்டைத் தமிழ்ப் பெண்களின் உயர்ந்த குறிக்கோளும், விரிந்த மனப்பான்மையும் இதிலிருந்து புலனாகின்றதல்லவா ?

    
ஐங்குறுநூறு பாடல்களில், புதிய தமிழ்ச் சொற்கள் பல நமக்கு முகம் காட்டி, என்னைப் பயன்படுத்தி, ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் வகையில் மொழியாக்கம் செய்திடுக என்று முகம் மலர்ந்து கூவுவதைக் கேட்க முடிந்தது. ஓஓ ! விட்டுவிட முடியுமா என்ன ? படைக்கப் பெற்ற புதிய சொற்களைக் காண்போமே 

-------------------------------------------------------------------------------------------------------

INSTRUMENTALIST.............= இயவர் (ஐங்.215.3)
TOUCH STONE....................= கட்டளைக் கல் (ஐங்.215.1)
WELL.....................................= கூவல் (ஐங்.203.3)
PLAY GROUND.....................= பண்ணை (ஐங்.73.2; 74.4.)
CAMP.....................................= பாசறை (ஐங்.427.3; 446.3)
TUBE.....................................= தூம்பு (ஐங்..20.3)
REFUGEE.............................= ஏதிலி (ஐங்.34.4)
BASKET.................................= வட்டி (ஐங்.47.2)
BUNGALOW..........................= வளமனை (ஐங்.66.4)
DRUM....................................= அரிப்பறை (ஐங்.81.2)

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,07]
{22-06-2019}

----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

எட்டுத்தொகை (02) குறுந்தொகை !

பத்தினிப் பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு !


நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் மூன்றும், பாவகையிலும் பிற திறங்களிலும் பெரிதும் ஒப்புமை உடையன. குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை 4 அடி; பேரெல்லை 8 அடி. நீண்ட பாடல்கள் அடங்கிய அகநானூற்றைநெடுந்தொகைஎன்று குறித்தல் போல, அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடி வரையறையைக் கொண்ட பாடல் தொகுதி குறுந்தொகைஎன்று பெயர் பெறுவதாயிற்று !

      
குறுந்தொகையில், இறைவணக்கப் பாடலைத் தவிர்த்து 400 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை ஏறத்தாழ 205 புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர். இந்நூலின்கண் உள்ள பழமொழிகளும் உவமைகளும் மிக்க நயமுடையவை. உள்ளத்தை உருக்கும் அகப்பொருட் செய்திகள் பல இக் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன !

      
பத்தினிப் பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்னும் அரிய செய்தியை எடுத்துக் கூறும்கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ...” என்னும் இறையனார் செய்யுள் இந்நூலில்தான் உள்ளது !

      
அகவன் மகளே ! அகவன் மகளே ! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல், அகவன் மகளே ! பாடுக பாட்டே !...” என்னும் ஔவையாரின் பாடலும் இந்நூலில்தான் இடம் பெற்றுள்ளது !

      
கவிஞர் வைரமுத்துவால் அடிக்கடி எடுத்துக் கையாளைப் பெறும் யாயும் ஞாயும் யார் ஆகியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?....” என்னும் செம்புலப் பெயல் நீராரின் பாடலும் இந்நூலில் தான் மலர்ந்து மணம் பரப்பி நிற்கிறது.


பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே !
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து,
படிவ உண்டிப் பார்ப்பன மகனே !’


என்னும் வியப்பு ஏற்படுத்தும் பாடலும் (156) குறுந்தொகையில் தான் இடம்பெற்றுள்ளது !

      
அருமையான அகவற்பாக்கள் பூத்துக் குலுங்கும் குறுந்தொகை என்னும் இத்தோட்டத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் நிரம்பவே பரவிக் கிடக்கின்றன.  அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !

----------------------------------------------------------------------------------------------------------

MY MOTHER................= யாய் (குறு.9.1)
ANVIL............................= உலைக்கல் (குறு.12.2)
YOUTH..........................= விடலை (குறு.15.5)
GO-DOWN.....................= பொதியில் (குறு.15.2)
CREASE (Cricket)..........= ஆடுகளம் (குறு.31.4)
YOUR MOTHER............= ஞாய் (குகுறு.40.1)
PORTICO.......................= முன்றில் (குறு.41.4)
STAR..............................= மீன் (குறு.44.3)
DUMB.............................= ஊமன் (குறு.58.4)
MATERNITY HOME.......= ஈனில் (குறு.85.3)
POND (குளம்)...............= இலஞ்சி (பறு91.2)
BOTTLE..........................= மணிக்கலம் (குறு.193.1)
RICE (சோறு)................= அமலை (குறு.277.2)
THERMOS FLASK..........= சேமச்செப்பு (குறு277.5)
DRIVER...........................= வலவர் (குறு.311.2)
SQUARE..........................= சதுக்கம் (நற்.319.5)
DEWY SEASON............. = அற்சிரம் (முன்பனிக்காலம்) (நற்.84.6)


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,06]
{21-06-2019}
--------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

எட்டுத் தொகை (01) நற்றிணை !

நற்றிணையில் காணப்படும் உவமைகள் பொருத்தமும் நயமும் உடையவை !



எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை 09 முதல் 12 அடி  வரையிலுள்ள 400 அகவற் பாக்களின் தொகுதி. குறுந்தொகை, நெடுந்தொகை (அகநானூறு) இரண்டிற்கும் இடைப்பட்டு, அளவான அடிகளை உடைமையினால் இதுநற்றிணைஎன வழங்கப் பெற்றது போலும் !

     
ஏறத்தாழ 175 புலவர் பெருமக்கள் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பே இந்நூல். அகப்பொருள் செய்திகள், தெளிவாகவும், அழகாகவும் இந்நூலில் எடுத்து உரைக்கப்பட்டுள்ளன. இதன்கண் காணப்படும் உவமைகள் பொருத்தமும் நயமும் உடையவை !

     
உவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு: தலைவன் ஒருவன் பொருள் தேடுதற்குத் தன் மனைவியை விட்டுப் பிரிந்தான். நடுக் காட்டிற்குச் சென்றவுடன், அவன் மனம், மனைவியை நினைத்து வீட்டிற்குச் செல்லக் கருதியது. அவனது அறிவு பொருள் தேடிக் கொண்டே செல்லுதல் வேண்டும் என்றது !

     
இவ்வாறு மனமும் அறிவும் மாறுபட்ட நிலையில், அவன் உடல் மெலிந்தது. அந்நிலையில்தேய்ந்த புரியினை உடைய  பழைய கயிற்றின் இரண்டு பக்கத்தினையும் இரண்டு யானைகள் பற்றி  இழுத்தால், அக்கயிறு எளிதில் அறுந்துவிடுதல் போல, என் உடம்பும், விரைவில் அழிந்துவிடும் போலும்!” என்று தலைவன் வருந்தினான் (செய்யுள்.284). இத்தகைய சுவை மிக்க உவமை கூறியதனால், இச்செய்யுள் இயற்றிய புலவர்தேய்புரிப் பழங் கயிற்றினார்என்றே பெயர் வழங்கப் பெற்றார் !

      
நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234 ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை.  385 ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று !

      
ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பல நற்றிணைப் பாடல்களில் காணக் கிடக்கின்றன.  அவற்றுள் ஒரு சிலவற்றைக் காண்போமா !

---------------------------------------------------------------------------------------------------------

BAZAAR, SHOP.............= அங்காடி (நற்.258.7)
KITCHEN........................= அட்டில் (நற்.120.9)I
INSTRUMENTALIST.......= இயவர் (நற்.113.10)
POND..............................= இலஞ்சி (நற்.160.8)
CART...............................= ஒழுகை (நற்.183.3)
DRAWING.......................= ஓவம் (நற்.268.4)
HUNTING DOG...............= கத நாய் (நற்.212.5)
MECHANIC.....................= கம்மியர் (நற்.94.4)
WAREHOUSE.................= கிடங்கில் (நற்.65.2)
WELL...............................= கூவல் (நற்.240.7)
JAR..................................= சாடி (நற்.295.7)
STORE ROOM................= பொதியில் (நற்.379.11)
SQUARE..........................= சதுக்கம் (நற்.319.5)
DEWY SEASON.............. = அற்சிரம் (முன்பனிக்காலம்) (நற்.84.6)


--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,05]
{20-06-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------