name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (63) (2020) அன்றைய நாளில் கால்நடையாக அயலூர் சென்றோம் !

சனி, பிப்ரவரி 13, 2021

கவிதை (63) (2020) அன்றைய நாளில் கால்நடையாக அயலூர் சென்றோம் !


         அன்றும்இன்றும் ! - ஓர் ஒப்பீடு !


---------------------------------------------------------------------------------------------

                அன்றைய நாளில் கால்நடையாக
                .....அயலூர் சென்றோம் நோயில்லை !
                ..........ஆதவன் எழுமுன் துயிலெழச் செய்தோம்
                ...............அழகிய உடலில் நோயில்லை !

                நன்றென எண்ணிக் காய்கறி உண்டோம்
                .....நலிவும் மெலிவும் வரவில்லை !
                ............நாள்தொறும் ஆற்றில் குளத்தில் குளித்து
                ..................நீச்சலடித்தோம் அயர்வில்லை !

                இன்றைய நாளில் ஊர்தியில் அன்றி
                .....எங்கும் எதற்கும் செலல் இல்லை !
                ............இரவில் விழித்துப் பகலில் உறங்கும்
.                .................இழிகுணம் இன்னும் விடவில்லை !

                கண்டதை உண்டு வயிறும் வாழ்வும்
                .....கனலாய் எரிவது நினைவில்லை !
                ..........கால்கள் அளைந்திட அறையில் குளியல்,
                ................நீச்சல் கற்கவும் வழியில்லை !

                அன்றைய மாந்தன் நீராகாரம்
                .....அருந்தி நலமுடன் வாழ்ந்திட்டான் !
                ............அமுதாய்ப் பழைய சோறும் தயிரும்
.                ..................அளவாய் உண்டு மகிழ்ந்திட்டான் !

                இன்னலம் நல்கும்  எருவை இட்டான்;
                .....எள்ளும் கொள்ளும் விளைத்திட்டான் !
                ............எங்கணும் கரும்பும் நெல்லும் விளைந்தது
                ..................இனிதாய் வாழ்வைக் கழித்திட்டான் !

                இன்றைய மாந்தன் எழுந்ததும் குளம்பியை
                ......இரைப்பைக் குள்ளே ஊற்றுகிறான் !
                ............இட்டளி சத்துணி இரண்டையும் மாந்தி
                ...................இருக்கும் வலுவையும் இழக்கின்றான் !

                நன்மைகள் தாரா உரத்தை, மருந்தை
                ......நயந்தே  வயலில் தெளிக்கின்றான் !
.                ..........நலிவை ஊட்டும் வேதிப் பொருள்களை
                .................நாளும் உண்டு இளைக்கின்றான் !

                அன்றைய மாந்தன் உண்மையைப் பேசி
                .....நன்மையைச் செய்து வாழ்ந்திட்டான் !
                ..........இன்றைய மாந்தன் பொய்களை விற்றுப்
                ..............பைகளைப் வாங்கித் தாழ்ந்திட்டான் !

                அன்றைய மாந்தன் நேரிய வழியில்
                ......ஈட்டிய பணத்தை  ஈந்திட்டான் !
                ............இன்றைய மாந்தன் கொள்ளை அடித்துக்
                .................குவிப்பதில் மிகவும் தேர்ந்திட்டான் !

                அன்றைய மாந்தன் ஏய்த்துப் பிழைத்தல்
                ......ஈனத் தொழில் என வாழ்ந்திட்டான் !
                ............இன்றைய மாந்தன் எதையும் செய்யும்
                ..................இழிகுணம் தன்னில்  வீழ்ந்திட்டான் !

                அன்றைய உலகம் அமைதியும் வளமும்
                ......அரும்பிடச் செழித்து இலங்கியது !
                ...........இன்றைய உலகம் பித்தம் பிடித்தவர்
                ...............ஆள்கையில் நித்தமும் அழிகிறது !

                கண்கள் இருந்தும் குருடாய் வாழும்
                ......மாந்தரை நினைத்தால் துயிலில்லை !
                ...........கவலை மனதில் சடுகுடு ஆடும்
                .................காட்சியை நினைத்தால் துயிலில்லை !

                பெண்கள் இங்கே பாலியல் துன்பம்
                .....அடைதல் கண்டால் துயிலில்லை !
                ............பேய்கள் போல ஊர்தியில் பறக்கும்
                ...................பேதையை நினைத்தால் துயிலில்லை !

                மன்பதை தன்னில் நீதியும் நேர்மையும்
                ......மடிவதைக் கண்டால் துயிலில்லை !
                ............மானம் பெரிதென வாழ்ந்த தமிழினம்
                ....................மயங்குது மதுவில்  துயிலில்லை !

                அன்பும் அருளும் நலியுது நாட்டில்
                ......அந்தோ தமிழா ! உணர்வாயா ?
                ............அன்னைத் தமிழைக் கண்போல் காக்கும்
                ....................அறிவை நீயும் பெறுவாயா ?

-----------------------------------------------------------------------------------------
                                            ஆக்கம் + இடுகை:
                     

                                         வை.வேதரெத்தினம்,

                                      (vedarethinam76@gmail.com)

                                                    ஆட்சியர்,

                                        தமிழ்ப் பணி மன்றம்.

                                  [தி.ஆ: 2051, சுறவம் (தை),29]

                                                   {12-02-2020}
-----------------------------------------------------------------------------------------
  தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் 
                                          பெற்ற கவிதை !
------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .