name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழிலக்கியம் (05) மனோன்மணீயம் !

திங்கள், டிசம்பர் 02, 2019

தமிழிலக்கியம் (05) மனோன்மணீயம் !

பாண்டிய நாட்டு இளவரசி மனோன்மணி பற்றிய புனை காவியம் !




மனோன்மணீயம் ஒரு கவிதை நாடகம். பெரும்பான்மையாக ஆசிரியப் பாவே நாடகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியப்பா அல்லாமல், ஆசிரியத் தாழிசை, வெண்பா, கலித்துறை, வெண் செந்துறை, கொச்சகக்கலிபா, மருட்பா எனப் பிற பா வகைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்த் தெய்வ வணக்கத்தைச் சேர்த்து மொத்தம் 4502 அடிகளில் இந்நாடகம் அமைந்துள்ளது !

இதை இயற்றியவர் பேராசிரியர் பெ,சுந்தரம் பிள்ளை. இவர் பிறந்த ஊர், இப்போது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை. கி.பி. 1855 ஆம் ஆண்டு பிறந்த இவரது தந்தை பெயர் பெருமாள்பிள்ளை; தாயார் மாடத்தி அம்மாள். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் மெய்ப் பொருளியல் (PHILOSOPHY) துறைப் பேராசியராகப் பணிபுரிந்த இவர்  26-04-1897 அன்று  தனது 42 –ஆம் அகவையில் காலமானார் !

இவரது நினைவைப் போற்றும் வகையில் முந்தைய தமிழக அரசு நெல்லைப் பல்கலைக் கழகத்திற்கு மனோன்மணீயம் சுந்தரனார் பலகலைக் கழகம் என்று இவரது பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது !

மனோன்மணீயம் நாடகக்  காப்பியத்தின் கதைச் சுருக்கம் வருமாறு:-
பாண்டிய நாட்டு மன்னன் சீவகன். கள்ளம் கவடு அறியாத அருங்குணச் செம்மல். அவனது தலைமை அமைச்சர் பெயர் குடிலன். சூழ்ச்சித் திறனும் தீய குணங்களும் படைத்தவன் !

மன்னனிடம் நல்லவன் போல் நடித்து, அவனைத் தன்வயப்படுத்திக் கொண்டான். மன்னனைக் கவிழ்த்து விட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படலானான். இதற்கு முதற்படியாகப் பாண்டிய நாட்டின் தலைநகரை மதுரையிலிருந்து நெல்லைக்கு மாற்றி, அங்கு கோட்டை கொத்தளங்களை உருவாக்கினான் !

பாண்டிய மன்னன் சீவகனின் குலகுரு சுந்தர முனிவர். குடிலனில் நடவடிக்கைகளில் ஐயம் கொண்ட அவர், நெல்லைக்குத் தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டு, மன்னனுக்குப் பாதுகாப்பாக  இருக்கத் துணிந்தார். நெல்லை அரண்மனையில் சுந்தர முனிவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது !

பாண்டிய மன்னன்  சீவகனின் மகள் மனோன்மணி. அவளது தோழி. வாணி. நடராசன் என்னும் நற்குண நம்பி மனோன்மணியின் தோழி வாணியைக் காதலித்தான் !

நடராசனின் தந்தை சகடன். இவர் தனது மகளை (நடராசனின் தங்கையை) தலைமை அமைச்சர் குடிலனின் மகன் பலதேவனுக்கு மணம் செய்வித்து, அதன் மூலம் தனக்கு செல்வத்தையும் செல்வாக்கையும் தேடிக் கொள்ள விரும்பினார் !

இந்தச் சூழ்நிலையில், சேர நட்டு மன்னனான புருசோத்தமனைக் கனவில் கண்டு மயங்கிய மனோன்மணி, அவன் மீது காதல் கொண்டாள். சீவகனின் குலகுருவான சுந்தரமுனிவர், புருசோத்தமனிடம் தூதனை அனுப்பி, அவனது இசைவு பெற்று அவர்கள் திருமணத்தை நடத்திடலாம் என்று பாண்டிய மன்னன்  சீவகனிடம் கூறினார். தூதனாக அனுப்ப மனோன்மணியின் தோழி வாணியின் காதலன் நடராசனே சிறந்தவன் என்பதையும் அவர் எடுத்துரைத்தார் !

இதை அறிந்த சூழ்ச்சிக்கார குடிலன், தன்மகன் பலதேவனைத் தூதுவனாக அனுப்பிட சீவகனிடம் இசைவு பெற்றான். பலதேவன், தூதுவனாகப் புருசோத்தமனிடம் சென்று, அவனை வேண்டுமென்றே  சினப்படுத்தி, பாண்டிய நாட்டின் மீது போர் தொடுக்கச் செய்து விட்டான் !

சேரநாட்டுப் படைகளுக்கும் பாண்டிய நாட்டுப் படைகளுக்கும் இடையில் நெல்லையில் போர் ஏற்பட்டது. பாண்டியன் சீவகனின் படைகள் தோல்வியின் விளிம்பில் நின்றன.  சீவகன் உயிரை இழக்கும் நிலை உருவாயிற்று.  நடராசனின் நண்பன் நாராயணன் என்னும் வீரனால் சீவகன் காப்பாற்றப்பட்டான் !

ஆனால் நாராயணனால் தான் பாண்டிய நாட்டுப் படைகள் தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது என்று குடிலன் மன்னனிடம் திரித்துக் கூறினான். குடிலனின் பேச்சை நம்பிய சீவகன் நாராயணனைக் கழுவில் ஏற்ற (கொல்ல) உத்தரவிட்டான். ஆனால், சுந்தர முனிவரின் தலையீட்டால் கழுவேற்றம் தள்ளிவைக்கப்பட்டது !

சுந்தர முனிவர் அரண்மனையில் இருந்த தன் அறையிலிருந்து கோட்டைக்கு வெளியே செல்ல சுரங்கப் பாதை ஒன்றை மிகவும் கமுக்கமாக (ரகசியமாக) அமைத்திருந்தார். இந்தச் சுரங்கப் பாதை பற்றிய செய்தியை சீவகனிடம் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மன்னனிடமிருந்து குடிலன் இதை அறிந்து கொண்டான் !

நள்ளிரவு வேளையில், குடிலன் சுரங்கப் பாதை வழியாகச் சென்று, கோட்டைக்கு வெளியே படைகளுடன் தங்கி இருந்த சேர மன்னன் புருசோத்தமனைச் சந்தித்து,  சுரங்கப் பாதை பற்றிய செய்தியை அவனிடம் சொல்லி, தன்னுடன் வந்தால், போரே இல்லாமல் மன்னன் சீவகனைச் சிறைப்படுத்தி விடலாம் என்று கூறினான் !

சீவகன் அழிந்து விட்டால், அவன் மகள் மனோன்மணியை எளிதாகத் தன் மகன்  பலதேவனுக்கு மணம் முடித்து வைத்துவிடலாம்; அத்துடன் புருசோத்தமன் தயவால் பாண்டிய நாட்டுக்கு மன்னன் ஆகிவிடலாம் என்பது குடிலனின் எண்ணம் !

மனோன்மணி போலவே புருசோத்தமனும், அவள் மீது காதல் கொண்டிருந்தான். குடிலன் பாண்டிய நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்ததை ஏற்காத புருசோத்தமன், , குடிலனைத் தளையிட்டு (கைது செய்து) அழைத்துக் கொண்டு சுரங்கப் பாதை வழியாகவே சீவகனின் அரண்மனைக்குள் நுழைந்தான் !

சீவகனின் அரண்மனைக்குள் வந்த புருசோத்தமன், குடிலனின் சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் சீவகனிடம் எடுத்துரைத்தான். சுந்தரமுனிவர் அங்கு தோன்றி நடந்தவற்றை விளக்கி, சீவகனின் மன மயக்கம் தெளிவித்தார். புருசோத்தமன் மனோன்மணி திருமணம் சுந்தரர் வாழ்த்துளுடன் இனிது நிறைவேறியது !

நீராரும் கடலுத்த நிலமடந்தைக்கு எழிலொழுகும்...” என்று இப்போது அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நமக்களித்த மனோன்மணீயம் காப்பியத்தையும், அதைப் படைத்து  அழியாப் புகழ் எய்தியுள்ள  சுந்தரனாரையும் இந்த நேரத்தில் நினைவிற் கொண்டு, அவரைப் போல் நாமும் தமிழ்த் தாய்க்கு இயன்ற வகையில் தொண்டு செய்ய உறுதி ஏற்போம் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி,(கார்த்திகை)08]
(24-11-2019)
------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .