கொத்து
(01)                                          மலர் (027)
==============================================================
           ஒரு திரைப் படத்தில்
 இடம்பெற்ற காட்சியை அடிப்படையாக 
                                    வைத்துப் புனையப் பெற்ற கவிதை !     
                                                           (ஆண்டு 1968)
==============================================================
          கன்னல்       கனியிதழே !   கட்டழகே !        காவியமே !
          மின்னல்      கொடியழகே !  மாமயிலே !       மேகலையே !
          பின்னல்       கருமுகிலின்  பெட்டகமே !       பேரழகே !   
          சன்னல்       கதவருகே     சாய்ந்திருக்கும்     சண்பகமே !
          காதல்         கணைவீசிக்   கதைபேசும்        காரிகையே !
          கூதல்         பருவத்துக்    குளிருடலை       வாட்டுதடி !
          மோதல்       விலக்கிவிடு ! முல்லைநகை      காட்டிவிடு ! 
          நோதல்       அழகாமோ ?   நூலிடையே !      தாளையெடு !
          வெள்ளைப்  
பல்வரிசை !     விரிந்தசுளைக்    கொவ்வையிதழ் !
          கள்ளைச்    
சுமந்திருக்கும்    காந்தட்பூ        வெண்டைவிரல் !
          பிள்ளை     
மழலைமொழி   பேசுமிரு    
     கயல்விழிகள் !
          கொள்ளை   
எழில்பெருகும்   கோபுரமே   
     தாளையெடு !
          பட்டுப்        புடவைதனில்    பத்துநிறம்        எட்டுவகை !
          கட்டுக்        கணுக்கரும்புக்   கைகளுக்கு       நான்குவளை
!
          மொட்டுக்     கதலியுறு        முல்லைவடம்    மூன்றுவகை
!
          கொட்டிப்      பூமகளே !       குவித்திடுவேன் !  தாளையெடு !
          அள்ளி        அலங்கரிப்பேன் !  ஆரணங்கே !    ஆயிழையே !
          துள்ளித்       துடித்துவிழும்     தூயவிழி        மான்மறியே !
          வெள்ளிக்      கதிர்நிலவே !     விண்ணுலவும்    தாரகையே !
          வள்ளிக்       கிழங்கேயென்    வைரமணி        நீயிலையோ ?
          கரும்புச்       சாறெடுத்துக்     கற்கண்டு,        தேன்கலந்து !
          அரும்பும்      இதழாக         ஆக்கியஎன்       பொற்சிலையே !
          விரும்பும்     பொருள்யாவும்   விடிந்தவுடன்     தந்திடுவேன் !
          இரும்புத்      தாள்திறவாய் !   என்னுயிரே !      தாளையெடு !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .