அளவற்ற செல்வத்தால் அழிந்து விடும் மன அமைதி !
------------------------------------------------------------------------------------------------------------
முழுவதும் வெண்பாக்களால் யாக்கப்பெற்ற #நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பெற்ற நூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளைச் சொல்கிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்; எண் (09)
------------------------------------------------------------------------------------------------------------
கள்வமென்  பார்க்குந்  துயிலில்லை  காதலிமாட்டு
உள்ளம்வைப்  பார்க்குந்  துயிலில்லை;  ஒண்பொருள்
செய்வமென்  பார்க்குந்  துயிலில்லை;  அப்பொருள்
காப்பார்க்கும்  இல்லை  துயில்.
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------------------
கள்வம்  என்பார்க்கும்  துயிலில்லை;  காதலிமாட்டு
உள்ளம்  வைப்பார்க்கும்  துயிலில்லை; ஒண்பொருள் 
செய்வம்  என்பார்க்கும்  துயிலில்லை; அப்பொருள்
காப்பார்க்கும்  இல்லை
துயில்.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
திருடுவதற்காக ஊர் அரவம்  அடங்கும்
வரைக் காத்திருப்பார்க்கும் உறக்கம் வாராது  !
காதலில் கட்டுண்டுக்  காதலியின் இடத்தில்  மனதைப் பறிகொடுத்தவர்களுக்கும் உறக்கம் வாராது !
நிறைந்த செல்வம் சேர்க்கவேண்டும் என்று கருதி இராப் பகலாய் உழைப்பவர்களுக்கும்  உறக்கம் வாராது !
அதுபோல்,  சேர்த்த
பொருளை,  களவாலும்
பிறவாற்றாலும் கெடாதபடிக் காப்பவர்களுக்கும் கவலையால் உறக்கம் வாராது !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------------------------
கள்வம் = திருடுவோம்; என்பார்க்கும் = என்று
திட்டமிடுபவர்களுக்கும்;  காதலி
மாட்டு = காதலி இடத்தில்;  ஒண்பொருள் = பெரும் செல்வம்;  செய்வம்
= ஈட்ட வேண்டும்; 
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
[தி.ஆ:2052,கும்பம்(மாசி),08]
{20-02-2021}
------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .