name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, ஏப்ரல் 30, 2022

வீரராகவர் பாடல் (04) செஞ்சுடரின் மைந்தனையும் !

 

பரதனையும் இராமனையும் பார் !


-----------------------------------------------------------------------------------------------------


சீகை எனப்படும் சீர்காழியில் வாழ்ந்து வந்த ஒரு சிற்றரசன் இராமன்; இவரது முழுப்பெயர் அபிராமன். இவருடைய தம்பி இவருக்கு எதிராகச் செயல்பட்டதால் தம்பி மீது போர் தொடுக்க எண்ணிக் கிளர்ந்தெழுந்தார் அபிராமன் !

 

இதைக் கேள்விப்பட்ட வீரராகவர் அபிராமனிடம் சென்று, வில் வீரர்களான  கன்னன் (சூரியனின் மகன்), இராவணன், அருச்சுணன் ஆகியோரை நினைத்துக்கொண்டு வில்லைக் கையில் எடுக்காதே !

 

பரதனுக்கு நாட்டைத் தந்த இராமனையும், இராமன் பாதுகையை அரியணை ஏற்றி வைத்துக்கொண்டு நாடாண்ட பரதனையும் எண்ணிப்பார். தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக என்று அபிராமனிடம் எடுத்துச் சொன்னார் !

 

மனம் தெளிவடைந்த அபிராமன் தம்பி மீது போர் தொடுக்கும் திட்டத்தைக் கைவிட்டார் ! வீர்ராகவர் தனது கருத்தை ஒரு வெண்பா மூலம் அபிராமனுக்குத் தெரிவித்தார்.

 

------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்த வெண்பா !

------------------------------------------------------------------------------------------------------

 

 

செஞ்சுடரின் மைந்தனையுந் தென்னிலங்கை வேந்தனையும்

பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே விஞ்சு

விரதமே பூண்டிந்த மேதினியை யாண்ட

பரதனையும் ராமனையும் பார்.

 

------------------------------------------------------------------------------------------------------

  சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------

 

செஞ்சுடரின் மைந்தனையும் தென் இலங்கை வேந்தனையும்

பஞ்சவரில் பார்த்தனையும் பாராதேவிஞ்சு

விரதமே பூண்டு இந்த மேதினியை ஆண்ட

பரதனையும் இராமனையும் பார் !

 

-----------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------------------

 

அபிராமா ! சிறந்த வில் வீரர்களான சூரியதேவனின் மைந்தனாகிய கர்ணனாகவும், இலங்கை மன்னனாகிய இராவணனாகவும், பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனனாகவும் உன்னை  எண்ணிக்கொண்டு உன் தம்பிக்கு எதிராகப் போர் புரிய வில்லினை எடுக்காதே !

 

நாடாளும் உரிமையைப் பரதனுக்கு விட்டுக் கொடுத்த இராமனையும், அண்ணன் இருக்கையில் தான் அரியணையில் அமர்வதா  என்று கூறி அண்ணனின் மிதியடிகளை அரசனின் இருக்கையில் வைத்து, அண்ணன் சார்பாக ஆட்சியைக் கவனித்த பரதனையும் எண்ணிப்பார் !

 

பெருந்தன்மையாக நடந்துகொள்வதில் தான் ஒரு அரசனின் மாட்சிமை உலகிற்கு வெளிப்படும். எனவே உன் தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக !

 

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------------------


செஞ்சுடர் = சூரியன்; மைந்தன் = மகன்; தென்னிலங்கை = தெற்கில் உள்ள இலங்கை நாடு; வேந்தனையும்= இராவணனையும்; பஞ்சவரில் = பஞ்ச பாண்டவரில் ; பார்த்தனையும் = அருச்சுனனையும் ; பாராதே = உன்னை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதே; விரதமே பூண்டு = மனத்தில் உறுதி ஏற்று ; மேதினி = நாட்டை ;

 

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

------------------------------------------------------------------------------------------------------

கன்னன்