name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், ஜூன் 30, 2021

நான்மணிக் கடிகை (25) மலைப்பினும் வாரணம் தாங்கும் !

 

கி.பி,2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் விளம்பி நாகனார் என்பவரால் படைக்கப் பெற்றது. கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்ட இந்நூல் அறத்தை வலியுறுத்துகிறது !. இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்; (25)

--------------------------

 

மலைப்பினும்   வாரணம்   தாங்கும்    அலைப்பினும்

அன்னேயென்   றோடும்    குழவி,  சிலைப்பினும்

நட்டார்  நடுங்கும்  வினை  செய்யார்,  ஒட்டார்

உடனுறையும்   காலமும்   இல்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

 

பாகன் தன்னைக்  கவை முள் கருவி கொண்டு குத்தி  ஒறுத்தாலும் , அவனை வெறுக்காமல், யானையானது  அவனைச் சுமந்தே  செல்கிறது  !

 

தன்னை அடித்து வருத்தினாலும்,  அதை மனதில் கொள்ளாது , குழந்தையானதுஅம்மாஎன்று அழுது கொண்டே தாயின் பின்னால் தான் ஓடுகிறது  !

 

தவறு கண்டு சினந்து உரைத்தாலும் , உண்மையான நண்பர்கள் நமக்கு எந்நாளும் தீமை செய்யத் துணிவது  இல்லை  !

 

ஆனால், பகைவர்களோ தமக்குள் வேற்றுமைகளை  மறந்து  ஒன்றாகக் கூடி வாழ்தல் என்பது  இவ்வுலகில் ஒருபோதும்  இருந்ததில்லை  !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

மலைப்பினும் = பாகன் தன்னை ஒறுத்தாலும் ; வாரணம்  தாங்கும் = யானை அவனைச் சுமந்து செல்லும் ;  அலைப்பினும் = தன்னை அடித்து வருத்தினாலும் ; குழவி = குழந்தை ; அன்னே என்று ஓடும் = “அம்மாஎன்று அழுது கொண்டே அவளருகில் ஓடும் ; சிலைப்பினும் = தவறு கண்டு சினந்து கொண்டாலும் ; நட்டார் = நண்பர் ; நடுங்கும் வினை செய்யார் = நாம் நடுங்கும்படித் தீயவை செய்ய மாட்டார் ; ஒட்டார் = பகைவர்கள் ; உடன் உறையும் காலமும் = தம்முள் ஒன்று கூடி நீங்காமல் வாழும் காலமும் ; இல் = ஒருபோதும் இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------

 

யானையைப் பாகனும், குழந்தையைத் தாயும்,   நண்பர்களை நண்பர்களும்,  வருத்தினாலும் ஒருவரையொருவர் தழுவியே நிற்பர்; ஆனால் பகைவர்களோ  எக்காலத்தும் தமக்குள் ஒன்றுபட்டு  நிற்பதில்லை !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி) 16]

{30-06-2021}

-----------------------------------------------------------------------------------------------------------