name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, மே 01, 2021

சிந்தனை செய் மனமே (82) மூட நம்பிக்கை நம்மை மூழ்கடித்துவிடும் !

முற்பிறவிதலைவிதி என்பனவற்றை   நம்பாதீர்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

அறிவின் துணைகொண்டு எடுக்கப்படும்  முடிவு நம்பிக்கை !  அறிவைப் பயன்படுத்தாமல், உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு மூடநம்பிக்கை !  இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் தமிழக மக்கள் துன்பப்பட்டு வருகிறர்கள் !

 

மனிதன் ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்க முடிகிறது; ஆனால் ஒரு எல்லைக்கு அப்பால் செல்கையில் அவனால் விடையளிக்க முடிவதில்லை ! உலகம் எப்படித் தோன்றியது ? அவனால் விடையளிக்க முடிகிறது ! உலகத்தில் உயிரினங்கள் எப்படித் தோன்றின ? ஊன்மத்திலிருந்து (PROTOPLASAM) முதல் உயிர் தோன்றி, அதிலிருந்து படிவளர்ச்சி முறையில்  பிற உயிர்கள்  தோன்றின  என்று அவனால் விடையளிக்க முடிகிறது !

 

அந்த ஊன்மம் (PROTOPLASAM) எப்படித் தோன்றியது ? அவனால் விடையளிக்க முடிவதில்லை ! விடையளிக்க முடியாத ஒரு நிலை வரும்போது, அவன் சிந்திக்கிறான் ! ஊன்மம் தோன்றுவதற்கு  நம் அறிவுக்குப் புலப்படாத இன்னொரு ஆற்றல் காரணமாக இருந்திருக்க வேண்டும் ! இப்படிப்பட்ட ஆற்றலுக்கு அவன் கடவுள் என்று பெயர் இட்டான் !

 

விடை தெரியாத ஒவ்வொரு வினாவுக்கும் காரணமாக இருக்கும் அந்த இன்னொரு ஆற்றலே கடவுள் ! இந்த இடத்தில்கடவுள்என்பது ஒரு நம்பிக்கையின் அடையாளம் ! அறிவுக்குப் புலப்படாத அந்தகடவுள்என்னும் நம்பிக்கைமனிதனின் வினாவுக்கான விடை ! அவ்வளவு தான் !

 

அந்தக் கடவுளுக்கு மனிதன் வடிவங்கள் கொடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு மதமும் வெவ்வேறு வடிவங்களைக் கொடுக்கத் தொடங்கின ! பிற மதங்களில், இறைவனுக்குக் கொடுத்த வடிவங்கள் மிகக் குறைவு; ஆனால் இந்து மதத்தில் இறைவனுக்குக் கொடுத்திருக்கும் வடிவங்களுக்கு அளவே இல்லை !

 

இறை நம்பிக்கையை நிலைநிறுத்தப் பண்டை மனிதனுக்கு ஒரு உருவம் தேவைப்பட்டது.  உலகத்தையே உய்விக்கும் வல்லமையுள்ளது  என்பதால் சூரிய வடிவில் இறைவனைக் கண்டான் அன்றைய மனிதன். அடுத்தடுத்துத் தோன்றிய மனித குலம், இயற்கை ஆற்றல்களானதீ”, ”மழைபோன்றவற்றையும் இறைவனின் கூறுகளாக நம்பியது !

 

காலப்போக்கில் மனித குலத்திற்கு அச்சமூட்டும் ஆற்றல்களாக விளங்கும் இடி, மின்னல், போன்றவையும், இறைவனின் கூறுகளாக மனித குலத்திற்குத் தோன்றின.  அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல்களாகத் திகழ்ந்த  தீ, இடி, மின்னல், வெள்ளம், பாம்பு  போன்றவற்றைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன்  அவற்றை அமைதிப் படுத்தினால், தமக்குத் தீங்கு நேராது என்னும் நம்பிக்கையில், அவற்றை வணங்கவும், காய் கனி, உணவு வகைகளை அவற்றுக்குப் படையல் செய்யவும் தொடங்கினான் !

 

அறிவு வளர்ச்சியில், தொடக்க நிலையில் இருந்த அன்றைய மனிதனின் இறை நம்பிக்கைச் செயல்கள், தவறு என்று சொல்ல முடியாது !  காலங்கள் கடந்தன ! அறிவு வளர்ச்சியில் மனிதன் முதிர்ச்சி அடையத் தொடங்கினான். அறிவு வளர வளரக் கற்பனையும் அவனுள் சிறகடித்துப் பறந்தது !

 

தன் கற்பனைக்கு ஏற்பவெல்லாம் இறைவனுக்கு உருவம் கொடுக்கத் தொடங்கியது மனித குலம்.  இறைவனுக்கு முதலில் மனித உருவைக் கொடுத்து வழிபடத் தொடங்கிய மனித குலம், பிறகு நான்கு கைகள், பன்னிரண்டு கைகள், நான்கு முகங்கள், ஆறு முகங்கள், எனப் பல உருவங்களை இறைவனுக்குக் கொடுத்துப்  படைக்கத் தொடங்கியது ! ஒவ்வொரு வேறுபட்ட உருவத்திற்கும்  ஏற்பப் பல்வேறு கதைகளையும் புனைந்து மக்களிடையே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினர் !

 

கற்பனை வளம் கொண்ட மாந்தர்கள் இறைவனுக்குப் பல உருவங்களைக் கொடுத்ததுடன் பல ஊர்திகளையும் (வாகனங்கள்) படைத்தனர். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மனைவி அல்லது பல மனைவிகளையும், பிள்ளைகளையும் படைத்தனர்.  இதன் தொடர்பாகப் பல கதைகளையும் இலக்கியங்கள், தொன்மங்கள் (புராணங்கள்), இதிகாசங்கள் (மறவனப்புகள்) என்ற பெயரில் எழுதிவைத்தனர்.  பல தோற்றரவுகளை (அவதாரங்கள்)  படைத்து மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினர் !

 

கோள்களுக்கு இடையே இருக்கும் ஈர்ப்பு ஆற்றல் போல ஒரு உயர்வான ஆற்றல் உடையவனாகக் கருதப் பட்ட இறைவனை, சராசரி இல்லறவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு மனிதனின் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர் கற்பனை வளம் கொண்ட கதாசிரியர்களும், நூலாசிரியர்களும் !

 

இதைப் பயன்படுத்தி, மக்களில் ஒரு சாரார், கடவுளை வணங்கினால் அவர் மக்களுக்கு வேண்டியதைக் கொடுப்பார் என்றும், அவரை வழிபடக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்றும் பரப்புரை செய்து மக்களிடையே ஒரு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினர் ! மக்களிடம் இறைவன் பற்றி இருந்தநம்பிக்கைஇங்கு தான்மூடநம்பிக்கையாக உருமாற்றம் அடையத் தொடங்கியது !

 

கோயில்கள் நிரம்பவும் எழுந்தன ! அங்கு நிலைநிறுத்தப் பெற்றப் படிமத்தை மக்கள் வழிபடுவதற்குத் தங்கள் உதவி தேவை என்று அவர்கள் அறிவித்தனர்.  தாங்களே பூசாரியாக இருந்து கடவுளிடம் மக்களின் குறைகளை எடுத்துச்  சொல்லி அவற்றைத் தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்வோம் என்றும் அறிவித்தனர். கடவுளின் மொழி சமற்கிருதம் என்றும், சமற்கிருதத்தில் தான் கடவுளிடம் மக்கள் குறைகளை எடுத்துச் சொல்ல முடியும் என்றும் மக்களை நம்ப வைத்ததுடன்,  ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரே பூசாரியாக அமர்ந்து தங்கள் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டனர் !

 

குறிப்பிட்ட வகுப்பைப் சேர்ந்த மக்கள் தான், கோயிலில் பூசாரியாக இருக்க முடியும் என்றும், சமற்கிருதம் வாயிலாகத்தான் கடவுளை வழிபட முடியும் என்றும் பிற வகுப்பைச் சேர்ந்த மக்கள் எப்போது நம்பத் தொடங்கினார்களோ, அப்போது, இரண்டாவது முறையாக கடவுள் மீது வைத்திருந்தநம்பிக்கை”, “மூட நம்பிக்கையாக மாறிப்போனது !

 

கடவுளைப்பற்றி முழுமையாக அறிந்த அறிஞர்கள் கூட, கோயில் பூசாரிகளின் முன்பு அடக்க ஒடுக்கமாக நின்று அவர்களிடம் திருவமுது (பிரசாதம்) பெறுகையில்மூடநம்பிக்கைகொண்டவர்களாகவே காட்சி அளிக்கின்றனர் !

 

கடவுள்நம்பிக்கைஎன்பது அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்தும் ஒரு கருவி ! கடவுளை வணங்குவது என்பது சில நிமிடங்களாவது  அமைதி என்னும் புள்ளியில் மனதை நிலைநிறுத்தும் ஒருநம்பிக்கைசார்ந்த  பயிற்சி !

 

கடவுள் நமக்கு வேண்டியதைத் தருவார் என்று நம்புவது தவறானநம்பிக்கை. கடவுளை வழிபடும் இரண்டு மாணவர்களில் ஒருவர் தேர்வில் வெற்றி பெறுகிறார்; இன்னொருவர் தோல்வி அடைகிறார். ஏன் ஒருவர் தோல்வி அடைந்தார் என்று பூசாரியிடம் கேட்டால், அவர் சொல்கிறார்அது அவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலன்  !

 

முற்பிறவி”, ”பாவத்தின் பலன்” ”தலைவிதிஎன்பதெல்லாம், மக்களிடையே நிலவும் கடவுள் நம்பிக்கையை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகப் பூசாரிகள் கண்டு பிடித்திருக்கும் தந்திரம் ! இதை உணர்ந்தும் உணராதவர்களாக, தாம் பேசும் தமிழைப் பலி கொடுத்து விட்டு, கோயில் கருவறைக்குள் புகமுடியாத பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கூட்டம், இன்னமும் கோயிலை நோக்கி  அணிவகுத்துச் செல்வதில் நாட்டம் கொண்டிருக்கிறது என்றால் அது அவர்களை ஆட்சி செய்யும்மூடநம்பிக்கையின் விளைவன்றி வேறன்று !

 

கடவுள் நம்பிக்கை கொண்டிருங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை ! ஆனால், கடவுளை வணங்கினால் அவர் உங்களுக்கு வாரி வாரி வழங்குவார் என்று தவறாக நம்பாதீர்கள் ! ”முற்பிறவி”, “பாவம்”, “தலைவிதிஎன்பதைச் சொல்லி உங்களை யார் ஏமாற்ற முயன்றாலும் அவரை நம்பாதீர்கள். அவர் சொல்வது சரி என்று அவர் மீதுமூடநம்பிக்கைகொள்ளாதீர்கள் !

 

அரசு அலுவலகங்களில் கழிவறையைத் துப்புரவு செய்யும்தூய்மைப் பணியாளர்பணியிடம் தொடங்கி, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பணியிடம் வரை அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு இருக்கும் போது, கோயில் பூசாரி பணியிடங்களை மட்டும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பது மக்களிடம் இருக்கும்மூட நம்பிக்கையால்  விளைந்த பயன் என்பதை இப்போதாவது உணருவோம் !

 

அருமைத் தமிழ் மக்களே ! வாழ்வில்நம்பிக்கைவையுங்கள்; ஆனால் யாரிடமும்மூடநம்பிக்கைவைக்காதீர்கள் !


-------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:


வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.பி: 2051, கடகம் (ஆடி),06]

{21-07-2020}

-------------------------------------------------------------------------------------------------------------