name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (04) வினா, விடை வகைகள் !

வினா வகையும் விடை வகையும் !
                                 


01. வினா (பக் 96) :- வினாக்கள் ஆறு வகைப்படும். அவை:- (01) அறி வினா (02) அறியா வினா (03) ஐய வினா (04) கொளல் வினா (05) கொடை வினா (06) ஏவல் வினா.


02. அறி வினா (பக்.96) :- தான் ஒரு பொருளை நன்கு அறிந்திருந்தும், அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்று அறியும்பொருட்டு வினாவப்படும் வினாவுக்கு அறிவினா என்று பெயர். (எ-டு) (01) (ஆசிரியர் கேட்கிறார்) இந்தியாவின் தலைநகரம் எது ? (02) (மகனைப் பார்த்து அப்பா கேட்கிறார்) உன் தாத்தா பெயர் என்ன ? (03) (கடைக்காரர் சிறுவனைப் பார்த்து) தம்பி ! இந்த அரிசி கிலோ என்ன விலை என்று உனக்குத் தெரியுமா ? (04) (தாத்தா தன் பெயரனைப் பார்த்து கேட்கிறார்) திருக்குறளை இயற்றியவர் யார் ?


03. அறியா வினா (பக் 96) :-தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையில் கேட்கும் வினா அறியா வினா எனப்படும். (எ-டு) (01) (இராமு வசந்தனிடம் கேட்கிறான்) வசந்தா ! இரண்டாம் பானிபட் போர் எந்த ஆண்டில் நடைபெற்றது ? (02) (ஆசிரியர் மாணவனிடம்) புகழேந்தி ! உன் பிறந்த தேதி என்ன ?


04. ஐய வினா (பக் 96) :- நமது ஐயத்தைப் போக்கிக் கொள்ளும் வகையில் பிறரிடம் கேட்கப்படும் வினாவுக்கு ஐய வினா எனப்பெயர். (எ-டு) (01) அங்கு வருவது கயல்விழியா ? தேன்மொழியா ? (02) காவிரி ஆறு உற்பத்தி ஆவது குடகு மலையிலா ? நீலகிரி மலையிலா ?


05. கொளல் வினா (பக் 96):- தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கடைகாரரிடம் கேட்கப்படும் வினா கொளல் வினா ஆகும். (எ-டு) ( கடைகாரரிடம் ) சிந்தால் வழலை (சோப்) இருக்கிறதா ? (02) (புத்தகப் பதிப்பக உரிமையாளரிடம்) பொன்னியின் செல்வன் புத்தகம் இருக்கிறதா ? (கொளல் = கொள்ளுதல், பெறுதல்)


06. கொடை வினா (பக் 96):- கொடை என்றால் கொடுத்தல் என்று பொருள். தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக மற்றவரிடம் அப்பொருள் இருக்கிறதா என் அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்கப்படும் வினா கொடை வினா எனப்படும். (எ-டு) (01) (கபிலன் பரிதியிடம் கேட்கிறான்) பரிதி ! குறிப்பேடு வாங்குவதற்கு உன்னிடம் போதிய பணம் இல்லையோ ? (02) (அம்மா தன் மகளிடம்) கவி ! உனக்கு இரண்டு தோசைகள் போதுமா ? (தோய் + செய் = தோசை)


07. ஏவல் வினா (பக் 96):- ஒரு செயலைச் செய்யும்படி ஏவும் வினா ஏவல் வினா ஆகும். (ஏவுதல் = கட்டளை இடுதல்) (எ-டு) (01) (ஆசிரியர் மாணவனிடம்) செழியா ! கடவுள் வாழ்த்துப் பாடலை மனப் பாடம் செய்து விட்டாயா ? (இது மனப்பாடம் செய் என்னும் ஏவல் பொருளைத் தருகிறது) (02) (தந்தை மகனிடம்) இளங்கோவா ! பால் வாங்கி வந்துவிட்டாயா ? (பால் வாங்கி வா என்னும் ஏவல் பொருளைத் தருகிறது)


08. விடை ( பக்.97) :- விடை என்றால் விடுக்கப்படுவது என்று பொருள். ஒரு வினாவுக்கு அளிக்கப்படும் மறுமொழியே விடை. விடைகள் எட்டு வகைப்படும். அவை :- (01) சுட்டு விடை (02) மறை விடை (03) நேர் விடை (04) ஏவல் விடை (05) வினா எதிர் வினாதல் விடை (06) உற்றது உரைத்தல் விடை (07) உறுவது கூறல் விடை (08) இனமொழி விடை.


09. விடை என்பதை இறை, செப்பு, பதில் என்றும் கூறலாம்.(பக். 97)


10. சுட்டு விடை (பக்97) :- இது, அது, இங்கே, அங்கே என்பது போல சுட்டிக் காட்டும் வகையில் கூறும் விடை சுட்டு விடை எனப்படும். (எ-டு) (01) ஐந்து ரூபாய் புத்தகம் எங்கே இருக்கிறது ? ஐந்து ரூபாய் புத்தகம் இங்கே இருக்கிறது. (02) கண்ணாடியை எங்கே வைத்தாய் ? கண்ணாடியை அங்கே வைத்திருக்கிறேன். (03) சென்னைக்கு எந்த வழியாகப்போக வேண்டும் ? சென்னைக்கு இந்த வழியாகப் போக வேண்டும். (04) இவற்றுள் விலை மலிவானது எது ? இவற்றுள் விலை மலிவானது இது.


11. மறைவிடை (97):- மறை என்றால் மறுத்துக் கூறுதல் என்று பொருள். ஒளித்து வைத்தல் என்று இங்கு பொருள் கொள்ளக் கூடாது. இதை எதிர்மறை விடை (Negative answer) என்றும் கூறலாம். (எ-டு) ”பாக்கு சுவைப்பாயா” ? என்று வினா எழுப்புபவர் இடத்தில் “ சுவையேன் ” (சுவைக்க மாட்டேன்) என்று எதிர் மறுத்துக் கூறுவது எதிர்மறை விடை எனப்படும்.


12. நேர்விடை (பக் 97):- ” பாக்கு சுவைப்பாயா ” ? என்று வினா எழுப்புபவர் இடத்தில் “ சுவைப்பேன் “ என்று நேர்மறையாக (Possitive) உடன்பட்டுப் பதில் கூறுவது நேர் விடை (Possitive Answer) எனப்படும்.


13. ஏவல் விடை (பக் 97) :- ” இதை எடுத்து பலகை மேல் வைப்பாயா “ ? என்று தந்தை வினவும் போது “நீங்களே எடுத்து வையுங்கள் “ என்று கூறுவது ஏவல் விடை ஆகும்.


14. வினா எதிர்வினாதல் விடை (பக் 97):- “பாக்கு சுவைப்பாயா” ? என்று வினவுபவர் இடத்தில் “சுவைக்காமல் இருப்பேனோ : ? என்று ஒரு வினாவையே விடையாகக் கூறுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.


15. உற்றது உரைத்தல் விடை (பக் 97):- “ பாக்கு சுவைப்பாயா ” ? என்று வினா எழுப்புபவர் இடத்தில் ” பல் வலிக்கிறது “ என்று தனக்கு உற்றதனை (நேர்ந்ததை) விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை ஆகும்.


16. உறுவது கூறல் விடை (பக் 97):- “ பாக்கு சுவைப்பாயா “? என்று வினா எழுப்புபவர் இடத்தில் “ பல் வலிக்கும் “ என்று தனக்கு வரப் போவதை உரைப்பது உறுவது கூறல் விடை ஆகும்.


17. இனமொழி விடை (பக் 97):- “ நடனம் தெரியுமா ?“ என்று கேட்பவர் இடத்தில் ” பாடத் தெரியும் “ என்று நடனத்திற்கு இனமான பாடுவதை விடையாகக் கூறுவது இனமொழி விடை ஆகும்.


18. சுட்டு விடை, மறை விடை, நேர் விடை மூன்றும் வெளிப்படையான விடையாக இருக்கும். ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை ஐந்தும் வெளிப்படையாக இல்லாமல் விடையைக் குறிப்பால் உணர்த்துவதாக அமையும்.


19. ஒருபொருட் பன் மொழி (பக்.98):- ஒரு பொருளையே குறிப்பிடும் சில சொற்கள் இணைந்து ஒரு சொற்றொடரில் அமைந்து வந்தால் அதை ஒரு பொருட் பன்மொழி என்று கூறுவர். (எ-டு) (01) இந்த மலை உயர்ந்தோங்கி நிற்கிறது. உயர்ந்து என்றாலும் ஓங்கி என்றாலும் ஒரே பொருள் தான். ஆனால் இங்கு இரண்டு சொற்களும் இணைந்து வந்து உயர்ந்து என்ற பொருளையே உணர்த்துகிறது.இதைத் தான் ஒரு பொருட் பன்மொழி என்று கூறுவர். வேறு சில எடுத்துக் காட்டுகள் வருமாறு;- (01) அந்தக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. (குழிந்து ஆழ்ந்து இரண்டுக்கும் ஒரே பொருள் தான்.) (02) நடு மையம். நடு என்றாலும் மையம் என்றாலும் ஒரே பொருள் தான்.) (03) மீமிசை ஞாயிறு. மீ என்றாலும் மிசை என்றாலும் “மேலே” என்று தான் பொருள் (மேலே வானத்தில் உள்ள சூரியன் என்பதைச் சொல்ல மீமிசை ஞாயிறு என்று சொல்லப்பட்டுள்ளது.)

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]

------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற்  குழுவில் வெளியப் பெற்ற  கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------