name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், மார்ச் 04, 2021

நான்மணிக்கடிகை (10) கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம் !


சினத்துக்கு  இடம்  தந்துச்  செந்நெறியில்  தவறாதே !

----------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு பாடலிலும் நான்கு  நான்கு கருத்துகளைச் சொல்லி இருப்பதால் நான்மணிக் கடிகை என்று பெயர் பெற்றுள்ள  இலக்கிய நூலை விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்துள்ளார் ! பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையுள் இதுவும் ஒன்று ! இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (10).

------------------------------------------------------------------------------------------------------------

 

கற்றார்முன்  தோன்றா  கழிவிரக்கங் காதலித்தொன்(று)

உற்றார்முன்  தோன்றா உறாமுதல்தெற்றென

அல்ல  புரிந்தார்க்கு  அறந்தோன்றா;  எல்லாம்

வெகுண்டார்முன்  தோன்றாக்  கெடும்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------

 

ஒரு பொருளை அல்லது உயிருக்குயிரான உற்றாரை இழந்துவிட்டால், அதற்காகத் துன்பம் கொள்ளுதல் கற்றுத் தெளிந்தாரிடம் தோன்றுவதில்லை !

 

ஊக்கமுடன் ஒரு நன்முயற்சியில் ஈடுபட்டு உழைப்பவரிடம், உரிய பலன் விரைந்து  கிட்டவில்லையே  என்னும்  மனத்துன்பம், தோன்றுவதில்லை !

 

தெளிந்த  முடிவுடன் தீய செயல்களைச் செய்பவர்களிடம், அறம் செய்தலால் ஏற்படும் நற்பயன்களைப் பற்றிய நல்லறிவும் நல்லுணர்வும்  தோன்றுவதில்லை !

 

அதுபோல்,  சினத்திற்கு ஆட்பட்டு அறிவை இழப்பவர்களிடம் அவர்களுக்குக் கிட்டக் கூடிய அனைத்து நன்மைகளும் கிடைக்காமலேயே கெட்டு ஒழிந்து போகும் !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------------------------

 

கழிவிரக்கம் = இழந்த பொருள்களுக்கு இரங்குதல்;  காதலித்து = ஊக்கம் கொண்டு;  ஒன்று உற்றார் முன் = ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவர் பால் ; உறா முதல் = விரைவில் பலன்  கிட்டவில்லையே என்னும் மனத் துன்பம்; தெற்றென = தெளிவாக; அல்ல புரிந்தார்க்கு = தீயவை செய்தார்க்கு ; அறம் தோன்றா = நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் = எல்லா நன்மைகளும்; வெகுண்டார் முன் = சினம் கொள்வாரிடத்து.

-----------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),20]

{04-03-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

கற்றார் முன் தோன்றா !