name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

நான்மணிக் கடிகை (03) எள்ளற்க என்றும் எளியர் என்று !

எளியவர் என்று எந்த மனிதனையும் தாழ்வாக எண்ணலாகாது  !

----------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ! கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியம். இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். 101 பாடல்களைக் கொண்ட இந் நூலிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------------------

பாடல் (03)

-----------------------------------------------------------------------------------------------------------

எள்ளற்க  என்றும்  எளியரென்று ! என்பெறினும்

கொள்ளற்க  கொள்ளார்கை  மேற்பட  உள்சுடினும்

சீறற்க சிற்றில் பிறந்தாரை ! கூறற்க !

கூறல்ல  வற்றை விரைந்து !

----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

 

எவரையும் எந்தச் சிறப்பும் இல்லாத எளிய மனிதர் என்று, தாழ்வாக  எண்ணாதே ! 

 

மதிப்பில் உயர்ந்த பொருளாயினும் பண்பில்லாத  மனிதர்களிடம்  வாங்காதே ! 

 

தவறு செய்தாலுங்கூட ஏழை மக்களிடம் சினம் (கோபம்)  கொள்ளாதே ! 

 

உள்ளம் பதை பதைப்பு அடைந்தாலும் கூட தகாத சொற்களைச்  சொல்லி விடாதே !

 

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

--------------------------------------

 

எள்ளற்க  =  இகழ்ந்து பேசாதே; என்பெறினும்= மிகச் சிறந்த ஒன்றைப் பெறுவதானாலும் கூட; கொள்ளற்க = வாங்காதே ; கொள்ளார் கை = கொள்ளத் தகாதவருடைய கைகள் ; மேல = அவர் கை மேலேயும் உன் கை கீழேயும் ; உள் சுடினும் = ஏழையின் செய்கை உன் மனதை வருத்தினாலும்; சீறற்க = சினந்து பேசாதே ; சிற்றில் பிறந்தாரை = ஏழைகளை; கூறல்லவற்றை = சொல்லத் தகாத சொற்களை; விரைந்து = பதை பதைப்பு அடைந்து; கூறற்க = சொல்லிவிடாதே !

--------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),07]

{19-02-2021}

-------------------------------------------------------------------------------------------------------------------

எள்ளற்க என்றும் !