name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், பிப்ரவரி 02, 2021

பழமொழி நானூறு (108) பழங்கன்று ஏறாதலும் உண்டு !

எளிய மனிதன் வாழ்வில் ஏற்றம் பெறுவதும் உண்டு !

                                                            *********

நலங்கிள்ளி பத்தாம் வகுப்புப் படித்து முடித்து விட்டு, வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். வேலை கிடைத்தபாடில்லை ! ஒரு நாள் மனச் சோர்வுடன்  குளக்கரை ஆல மரத்தடியில் வந்து அமர்ந்தான் !

 

அங்கு நிழலில் படுத்திருந்த ஒரு முதியவர், அவனைப் பார்த்து, “ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய் ?  என்ன காரணம் ?” என்று அன்பாகக் கேட்டார். நலங்கிள்ளி தன் சோர்வுக்கான காரணத்தைக் கூறினான் !

 

முதியவர் அவனுக்கு மனத்தெம்பூட்டும் வகையில் பேசினார்.  அவரது பேச்சில் ஈர்ப்புக் கொண்ட நலங்கிள்ளி, அவரைப் பற்றி உசாவினான். தான் கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒரு இரவலர் என்றும், தனக்குக் குடும்பமோ பிள்ளை குட்டிகளோ கிடையாது என்றும் கூறினார் !

 

நலங்கிள்ளியின் இல்லத்தில் அவனது தந்தை, தாய், ஒரு தங்கை அவன் உள்பட நான்கு பேர் உள்ளதாகவும், தந்தை கூலித் தொழிலாளி என்றும் அவரது வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டுமெ போதுமானதாக இருப்பதாகவும்  கூறினான் !

 

அவனது பேச்சினைக் கேட்ட முதியவர், வேலை கிடைக்காவிட்டால் என்ன, சிறிய அளவில் கடை வைத்து வருவாய் ஈட்டலாமே என்று தனது கருத்தை எடுத்துச் சொன்னார் !

 

கடை வைக்கும் அளவுக்கு முதலீடு செய்யத் தன் தந்தையிடம் பணமில்லை  என்பதை நலங்கிள்ளி அவரிடம் எடுத்துச் சொன்னான். அதைக் கேட்ட முதியவர், ” தம்பி !  கடை வைக்கலாம் என்பதை நீ ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பணத்திற்கு நான் வழிவகை செய்கிறேன்என்றார் !

 

அவரை வியப்புடன் நோக்கிய நலங்கிள்ளி,” ஏற்றுக் கொள்கிறேன் ஐயா !” என்றான்.  அவர், “வா ! உன் வீட்டிற்குச் செல்வோம்என்று அழைத்தார். இருவருமாக, நலங்கிள்ளி வீட்டை அடைந்தனர். நலங்கிள்ளியின் தந்தையுடன் முதியவர் கலந்து உரையாடினார் !

 

நலங்கிள்ளியின் தந்தையிடம் அவர், “ஐயா ! என்னிடம் பத்தாயிரம் உருபா பணம் இருக்கிறது, பிச்சை எடுத்துச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கிறேன். அதைத் தருகிறேன். அதை வைத்து நலங்கிள்ளி சிறிய அளவில் ஒரு கடை தொடங்கட்டும்என்றார் !

 

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வதானால், நான் சொல்வதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; உங்களுக்கோ குடும்பம் , மனைவி,  மக்கள் என்று ஏதுமில்லை என்கிறீர்கள்;  அப்படி இருக்கையில் , நீங்களும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன்  சேர்ந்து வாழ ஒப்புக் கொள்வதானால், உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம்என்றார் !

 

இருதரப்பினரும் ஒப்புக்கொள்ள, ஒரு நல்ல நாளில் நலங்கிள்ளி சிறிய அளவில் கடை ஒன்றைத் திறந்தான். ஊர் மக்கள் மெல்ல மெல்ல அவன் கடையில் பொருள்கள் வாங்கத் தொடங்கினர் !

 

ஆனால், ஊர் மக்களில் இன்னொரு  பகுதியினர், சின்னஞ்சிறிய கடையை வைத்துக் கொண்டு நலங்கிள்ளி எப்படிப் பிழைக்கமுடியும், கடைக்கான முதலீடு போதாது; கடையை விரைவில் இழுத்து மூடிவிடுவான்  என்று கேலி பேசலானார்கள் !

 

நலங்கிள்ளியை இளக்காரமாகப் பார்க்கலானார்கள் !  அவன் செய்திருப்பது சிறு முதலீடு என்றாலும், அதையே  ஊர்க்காரர்களில் சிலர்  பேசு பொருளாக மாற்றி அவனைச் சிறுமைப்படுத்த முயன்றார்கள் !

 

ஊர்க்காரர்களின் இளக்காரப் பேச்சு நலங்கிள்ளியை உசுப்பி விட்டது.  கடுமையாக உழைத்தான்; கடை வணிகம் சூடு பிடித்தது. ஆதாயம் பெருகியது; கடை விரிவாகியது; எந்தப் பொருளைக் கேட்டாலும்இல்லைஎன்று சொல்லாத அளவுக்கு, அவன் பொருள்களை வாங்கி இருப்பு வைத்தான் !

 

ஏழை வீட்டுப்  பையனாக இருந்த நலங்கிள்ளி, முதியவரின் பண உதவியாலும், தனது கடுமையான உழைப்பாலும், நேர்மையான செயல்படுகளாலும், தனது கடையை விரிவு படுத்தி, அதைச் சிறப்பங்காடி (SUPER MARKET) என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறான் !

 

இதைத் தான் பண்டைப் புலவர் முன்றுறை அரையனார்  தனது பாடல் மூலம் உலகோருக்கு அறிவிக்கிறார்,’”ஒருவனிடம்  உள்ளது  மிகச் சிறிய  முதலீடு என்றாலும், ஊர்க்காரர்கள் அதை இளக்காரமாக எண்ணலாகாது; ஏனெனில் கடைத் தெருவிலே  கிடைத்ததை  உண்டு வாழும் பழைய கன்று என்றாலும், பிற்காலத்தில் அது வீறு மிக்க ஏறு (கம்பீரமான காளை) ஆதலும் உண்டு” !

 

இதோ அந்தப் பாடல் !

---------------------------------------------------------------------------------------------------------

பழமொழி நானூறு (பாடல்.108)

--------------------------------------------------------------------------------------------------------

உள்ளூ  ரவரால்   உணர்ந்தாம்   முதலெனினும்

எள்ளாமை   வேண்டும்;   இலங்கிழாய் ! – தள்ளாது

அழுங்கல்   முதுபதி   அங்காடி  மேயும்

பழங்கன்று   ஏறாதலும்   உண்டு.

 

---------------------------------------------------------------------------------------------------------

பாடலின் கருத்துரை:

-----------------------------------

 

ஒரு மனிதனிடம்  உள்ளது மிகச் சிறிய செல்வம் தான் (முதலீடு தான்)  என்று தெரியவந்தாலும்  உள்ளூர்க்காரர்கள்  அவனை ஏளனம் செய்யக் கூடாது ! இளக்காரமாகப் பார்க்கக்கூடாது !   ஏனெனில், இன்று கடைத்தெருவில் திரிந்து அலைந்து , கிடைத்தவற்றை உண்டு வாழும்  சிறு கன்று கூட பிற்காலத்தில்  வீறுமிக்க ஏறாக (காளையாக) வளர்ச்சி அடையக் கூடும் !

 ---------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

கைம்முதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியால் அதனைப் பெரிதாக்கி, தன்னை இகழ்ந்த ஊர்மக்கள் மெச்ச  வாழமுடியும் !  முயற்சிதான் வேண்டும் !

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

--------------------------------------

 

உள்ளூர் அவரால் = உள்ளூர் மக்களால் ; உணர்ந்தாம் முதலெனினும் = மிகச் சிறிய முதலீடே   என்று உணரப்பட்டாலும்  ; எள்ளாமை வேண்டும் = இளக்காரமாகப் பார்க்கலாகாது ; இலங்கிழாய் = ஒளிமிக்க அணிமணிகளைப் பூண்டவளே !; தள்ளாது = ஒதுக்கிவிடாது ; அழுங்கல் = ஆரவாரம் நிறைந்த  ; முதுபதி = பமையான ஊர் ;  அங்காடி = கடைத் தெரு ; மேயும் பழங் கன்று = அலைந்து திரிந்து கிடைத்ததை உண்ணும்  கன்று;  ஏறு = பிற்காலத்தில் வீறு மிக்க காளையாக ; ஆதலும் உண்டு = வளர்ச்சி பெறுவதும் உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் +இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 20]

(02-02-2021}

-------------------------------------------------------------------------------------------------------------