name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (585) தன்னையளித்தாள், தமையன் மனை, குருவின் !

தாயாக மதிக்கப் பட வேண்டியவர்கள் !


மகளிர் அனைவருமே  தாய்மையின் வடிவங்கள் !  எனினும்  தாய்மை என்னும் பண்பு வேறு; தாய் வேறு ! யார் யாரை எல்லாம் நாம் தாயாகக் கருத வேண்டும் ?  ஒரு புலவர் பட்டியலிடுகிறார் பாருங்கள் !

 

------------------------------------------------------------------------------------------------------------

தன்னை யளித்தாள் தமையன்  மனைகுருவின்

பன்னி யரசன் பயில்தேவி  - தன்மனையைப்

பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்

நற்றாயர் என்றே நவில் !

 

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

தன்னை  அளித்தாள்,  தமையன் மனை, குருவின்

பன்னி , அரசன்  பயில்தேவி,  -  தன் மனையைப்

பெற்றாள், இவரையே  பேசில்  எவருக்கும்

நற்றாயர்  என்றே  நவில் !

 

--------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

தன்னை அளித்தாள் = தன்னைப் பெற்றவள்தமையன் மனை = தமையன் மனைவியாகிய அண்ணிகுருவின் பன்னி = தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மனைவி; அரசன் பயில் தேவி = அரசனின் மனைவியாகிய அரசியார்தன் மனையைப் பெற்றாள் = தன் மனைவியைப் பெற்றவள்இவரையே பேசில் = ஆகியோரைப் பற்றிச் சொல்வோமானால்; எவருக்கும் = எல்லா ஆடவர்க்கும்நற்றாயர் என்றே நவில் = இவர்கள் தாய் போன்றவர்கள் ஆவர் !

-------------------------------------------------------------------------------------------------------------

 

தன்னைப் பெற்றவள், தன் அண்ணி, தன் ஆசிரியரின் மனைவி, நாட்டின் அரசியார், தன் மாமியார் ஆகிய  ஐவருமே  தாய்என்னும் உயர்ந்த இடத்தில் வைத்து  ஒவ்வொரு ஆடவராலும் வணங்கத் தக்கவர்கள் ஆவர் !

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த அரிய பாடலை எழுதிய புலவர் யார் ? அவர் பெயரைப் பதிவு செய்ய வரலாறு தவறிவிட்டது !

 

வரலாறு தன் கடமையில் இருந்து தவறினாலும், நாம் இந்த ஐந்து தாயரையும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பதில் தவறு செய்யலாகாது !

-------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஆவணி),06]

{22-10-2020}

------------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------