name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, அக்டோபர் 03, 2020

சிந்தனை செய் மனமே (80) வணக்கம் சொல்வதில் மரபுகள் உண்டா ?

வணக்கம் சொல்வது எப்படி என்பது பற்றி மக்களிடையே  போதுமான புரிதல் இல்லை !

                                                         ***************     

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது வணக்கம் சொல்லுதல் என்பது ஒரு நல்ல பண்பாடு ! இரண்டு பேரும் தமது பேச்சைத் தொடங்குவதற்கு இது முன்னோட்டமாக அமையும் ! சீறூர்களில் (கிராமங்களில்) வணக்கம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்;  இதற்கு மாற்றாகவாங்க அண்ணே” “வாங்க மாமா” “வாம்மா மல்லிகாஎன்று விளித்துப் பேச்சைத் தொடங்குபவர்களும் உண்டு !

 

நாம் சந்திப்பவர் நமது நண்பராகவும் இருக்கலாம்; அல்லது நமது மனதிற்கு உகந்தவராக இல்லாமலும் இருக்கலாம் ! எதிரில் வருபவர் நம்முடன் பகைமை பாராட்டுபவராக இருந்தால், அவரைக் கண்டவுடன் நம்  மனதில் ஓர்  இறுக்கம் தோன்றும். அந்த இறுக்கத்துடன் நாம் பேச்சைத் தொடங்க முடியாது. இறுக்கம் விலகிட இந்த வணக்கம் சொல்லும் முறை கைகொடுக்கிறது !

 

வணக்கம் சொல்வதற்கென்று ஏதேனும் மரபுகள் இருக்கின்றவா ? ஆம் ! மரபுகள் இருக்கின்றன ! ஆனால் அவற்றை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்தால், நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் ! எப்படி வணக்கம் சொல்வது என்பது பற்றிப் போதுமான புரிதல் இல்லாமலேயே செயற்கைத் தனமாக வணக்கம் சொல்வோர் நிரம்பவே இருக்கிறார்கள் !

 

ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அஞ்சற்காரர் (POST-MAN) எதிரில் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு ஈருருளியிலிருந்து (BI-CYCLE) இறங்கியவர்குட் மாணிங் சார். உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதுஎன்று சொல்லிக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார் !

 

தம்பி ! இப்பொழுது நேரம் என்ன ? “ “மணி இரண்டு சார்” “இது காலை நேரமா ?” “இல்லையே !” ”அப்புறம் ஏன் குட் மாணிங் என்று வணக்கம் சொல்கிறாய் ?”

 

இன்றைக்கு முதன்முதலாக இப்பொழுது தானே உங்களைப் பார்க்கிறேன். அதனால் தான்  குட் மாணிங் என்று சொன்னேன்

 

சரி ! இப்பொழுது பிற்பகல் நேரம் !  அடுத்து மாலை நேரம் வரப்போகிறது. இன்று நீ மீண்டும் என்னைப் பார்க்கப் போவதில்லை. அப்படியானால் எனக்குகுட் ஆப்டர் நூன்”, ”குட் ஈவினிங்ஆகிய வணக்கங்களை எப்போது சொல்லப் போகிறாய் ?”

 

அஞ்சற்காரர்  செய்வதறியாது தடுமாறினார் ! அவரைப் பார்க்க இரக்கமாக இருந்தது !

 

நானே விடை இறுத்தேன். ”தம்பி !  ஒரு நாளில்முதன்முதலாக எப்போது, எந்த வேளையில் பார்த்தாலும்குட் மாணிங்என்று  வணக்கம் சொல்ல  வேண்டும் என்பது தவறு. முதன்முதல் காலையில் பார்த்தால்குட் மாணிங்”. பிற்பகலில் பார்த்தால்குட் ஆப்டர்நூன்” “மாலையில் பார்த்தால்குட் ஈவினிங்”. அவ்வளவு தான் !

 

முதன்முதல்என்பதை மறந்து விடு. எப்போது பார்க்கிறாயோ அந்த வேளைக்குத் தக்கபடி வணக்கம் சொல்வதே சரி ! பிற்பகலில் பார்த்தால்குட் ஆப்டர்நூன்” !  மாலையில் பார்த்தால்குட் ஈவினிங்முதன்முதல் எப்போது பார்க்கிறாய் என்பதைக் கருத்திற் கொள்ளாதே !

 

சரி ஐயா ! என் அறியாமையைப் போக்கி விட்டீர்கள் ! இனி தவறு செய்ய மாட்டேன் ! மிக்க நன்றி ! வருகிறேன் !”

 

காலை வணக்கம்” ”மாலை வணக்கம்என்பதெல்லாம் ஆங்கிலேயர்கள் பண்பாடு. தமிழ்ப் பண்பாடுவணக்கம்மட்டுமே ! எப்போது யாரைக் கண்டாலும்வணக்கம் அய்யா  “வணக்கம் அம்மாஎன்று சொல்லிப் பழகுவோம் !

 

காலை வணக்கம்” “நண்பகல் வணக்கம்”, “மாலை வணக்கம்”, “இரவு வணக்கம்என்பதெல்லாம் நமக்கு ஒத்து வராது. ஆங்கிலேயர்களின் வழக்கத்தைப் பின்பற்றுவதால் விளைந்த தவறே பிற்பகல் நேரத்தில் கூடகுட் மாணிங்சொல்வது. இனி எந்த நேரம் என்றாலும்வணக்கம்என்றே சொல்வோமே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),14]

{30-09-2020}

----------------------------------------------------------------------------------------------------------

              தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------