name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, அக்டோபர் 20, 2019

கவிதை (32) (1970) மணங் கமழும் பூக்காட்டில் !(கதைக்காக ஒரு பாட்டு)




        கொத்து (01)                                             மலர் (032)
-------------------------------------------------------------------
             வார இதழ் ஒன்றில் வெளியான
           சிறுகதையை மையமாகவைத்து
                        எழுதப்பட்ட கவிதை !
                                 [ஆண்டு.1970]
                                 
-----------------------------------------------------------------------------------------------------

          மணங்கமழும்  பூக்காட்டில்  மயங்கும்  வண்ண,
              மயிலென்று  எண்ணியுளம்  மகிழச்  செய்தேன் !
          அணங்கவளே  மங்கையருள்  அமுதம்  என்று
              ஆசையுடன் நெஞ்சமதில்  அமரச்  செய்தேன் !
          குணத்தினிலே  கன்னியவள்  குரிசில்  என்று
              குடியிருக்க  எனதுள்ளக்  குடிலைத் தந்தேன் !
          கணப்பொழுதில்  எண்ணமெலாம்  கலையச்  செய்து
              காரிகையாள்  உள்ளமதைக்  கனலால் சுட்டாள் !

          தென்னையெழில்  மஞ்சமதில்  தவழும்  கிள்ளைத்
              திருவுருவாய்  எண்ணியுளம்  ததும்பச்  செய்தேன் !
          கன்னிமகள்  பொங்குதமிழ்க் கவிதை  என்று
              கற்பனையில்  சிலையெடுத்துக் களிக்கச் செய்தேன் !
          புன்னகையை  மருந்தாக்கிப் பிணிசூழ் நெஞ்சின்
              பிழைதீர்க்கும்  பூவையென உளப்பூ  தந்தேன்
          மின்னலென  எண்ணமெலாம்  மேவச்  செய்து
              மேகலையாள்  உள்ளமதைக் கனலால்  சுட்டாள் !

          மாங்கனியின் தீஞ்சுவையில்  மகிழும்  கொன்றை
              மணிக்குயிலாய் எண்ணியுளம் மலரச்  செய்தேன் !
          பூங்கொடியாள்  குழலியருள்  பொதிகை என்று
              புளகமுற  மனக்கதவைத் திறக்கச் செய்தேன் !
          தீங்குறளின்  நெறியொழுகும்  தெரிவை என்று
              திண்மையுடன்  நம்பியுளத் தேரில்  கொண்டேன் !
          கங்குலென  எண்ணமெலாம்  கருகச்  செய்து
              கணிகையவள்  உள்ளமதைக் கனலால் சுட்டாள் !

          துள்ளியெழும்  வெள்ளலையில்  துவளும்  நாவாய்,
              தூவியெழில்  வான்குருகாய்த்  தோன்றக் கண்டேன் !
          கள்வழியும்  நீள்குறிஞ்சிக் கவின்பூ என்று,
              களிப்புடனே  மனக்காவில்  கமழச் செய்தேன் !
          வெள்ளிநிலா துஞ்சுமெழில்  வனிதை  நல்லாள்,
              விழிமலரில்  துஞ்சியெழ  வேட்கை  கொண்டேன் !
          பள்ளிகொண்ட  எண்ணமெலாம்  பதராய்ச்  செய்து
              பனிமலராள்  உள்ளமதைக்  கனலால் சுட்டாள் !

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------